தமிழ்நாடு

”சராசரி அறிவு கூட பழனிசாமிக்கு இல்லை” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!

கலைஞருக்கு நாணயம் வெளியிடுவது ஒன்றிய அரசு. இந்த சராசரி அறிவு கூட இல்லாமல், ஒரு எதிர்க்கட்சித் தலைவர் இருக்கிறார் என்பதுதான் வேதனையாக இருக்கிறது.

”சராசரி அறிவு கூட பழனிசாமிக்கு இல்லை” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கலைஞர் நாணயத்தில் தமிழ் வெல்லும் என்பது தமிழில்தான் எழுதப்பட்டிருக்கிறது.இதைக்கூட அவர் பார்க்காமல், புரிந்து கொள்ளாமல், தெரிந்து கொள்ளாமல், இப்படி ஒரு எதிர்க்கட்சித் தலைவர் நமக்கு வந்து வாய்த்திருக்கிறார் என்றுதான் வருத்தமாக இருக்கிறது என எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னையில் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினரும் கழக மாநில மீனவர் அணி துணைத் தலைவருமான கே.பி.சங்கர் அவர்களின் மகன் திலீபன் – விஷாலி ஆகியோரது திருமண விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,"பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களுடைய நேற்றைய உரை உள்ளபடியே கூட்டணிக் கட்சித் தலைவர்கள் எல்லாம் பேசினால் எப்படி பேசுவார்களோ அதைவிட அதிகமாக, திமுக-வினர் பேசுவதைவிட அதிகமாக, சிறப்பாக தலைவர் கலைஞர் அவர்களைப் பற்றி அவர் பேசியது உள்ளபடியே வரலாற்றில் பொறிக்கத்தக்க உரையாக அந்த உரை அமைந்தது. கலைஞரை இந்தளவிற்கு புகழ வேண்டும், பாராட்டிப் பேச வேண்டும் என்ற அவசியம் அவருக்கு இல்லை. அவருக்கு தேவையும் இல்லை. ஆனாலும் பேசினார் என்றால், உள்ளத்தில் இருந்து உண்மையை பேசினார் அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள்.

இதை சிலரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஒருத்தர் இருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் என்று தமிழ்நாட்டில் இருக்கிறார். அவர் நேற்று பேட்டி கொடுக்கிறார். என்னவென்றால், நாணயம் வெளியிடுகிறார்கள். இந்தியில் இருக்கிறது. தமிழில் இல்லை. தமிழ், தமிழ் என்று முழங்குகிறார்களே, இந்தியில் இருக்கிறது என்று சொல்கிறார். முதலில் அரசியல் தெரிந்திருக்கவேண்டும். இல்லை நாட்டின் நடப்பு புரிந்திருக்கவேண்டும். அந்த நிகழ்ச்சி எப்படி நடக்கிறது என்றால், ஒன்றிய அரசு அனுமதி கொடுத்து ஒன்றிய அரசின் மூலமாக நடைபெறக்கூடிய நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சி. ஏற்கனவே, பலபேருக்கு நாணயங்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. மறைந்து எம்.ஜி.ஆர் அவர்களுக்கு நாணயம் வெளியிடப்பட்டிருக்கிறது. அதைபோல பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களுக்கு நாணயம் வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த நாணயத்தை எல்லாம் ஒருவேளை பார்த்திருக்கமாட்டார் என்று நினைக்கிறேன். அதை எடுத்து பாருங்கள். அனைத்து தலைவர்களுக்கும் நாணயம் வெளியிடுகிறபோது ஒன்றிய அரசு இந்தியில் தான் எழுதி, அதன்பிறகு ஆங்கிலத்தில் எழுத்துக்கள் அமைந்திருக்கும்.

ஆனால் அண்ணா அவர்களுக்கு நாணயத்தை வெளியிடுகிறபோது தலைவர் கலைஞர் அவர்கள் என்ன செய்தார் என்றால், யாரும் செய்யாத ஒரு அதிசயத்தை செய்தார். அண்ணா அவர்களின் தமிழ் கையெழுத்து அதில் இடம் பெறச் செய்யவேண்டும் என்று சொல்லி, அண்ணா அவர்களின் தமிழ் கையெழுத்து நாணயத்தில் பொறிக்கப்பட்டு அதற்கு பிறகுதான் அது வெளியிடப்பட்டது. அதுபோலதான், தலைவர் கலைஞர் அவர்களுடைய நாணயத்தை வெளியிடுகின்றபோது கலைஞருக்கு மிகவும் பிடித்த எழுத்து தமிழ் வெல்லும். பெரும்பாலும் அவர் தமிழில் கையெழுத்து இடுகிறபோது பெரும்பாலும், தமிழ் வெல்லும், தமிழ் வெல்லும் என்று சொல்லித்தான் கையெழுத்திடுவார்.

இல்லையென்றால், அண்ணா வாழ்க, அண்ணா புகழ் ஓங்குக, பெரியார் வாழ்க என்று சொல்லிதான் கையெழுத்திடுவார். ஆகவே, தமிழ் வெல்லும் என்பது தமிழில்தான் எழுதப்பட்டிருக்கிறது. இதைக்கூட அவர் பார்க்காமல், புரிந்து கொள்ளாமல், தெரிந்து கொள்ளாமல், இப்படி ஒரு எதிர்க்கட்சித் தலைவர் நமக்கு வந்து வாய்த்திருக்கிறார் என்றுதான் வருத்தமாக இருக்கிறது. கேட்கிறார்? ஏன் ராகுல் காந்தியை அழைக்கவில்லை? அய்யா எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே, மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களே, இந்த நிகழ்ச்சி திமுக நடத்தவில்லை. நிகழ்ச்சியை நடத்தியது ஒன்றிய அரசு. அது ஒன்றிய அரசின் நிகழ்ச்சி. அதை முதலில் புரிந்து கொள்ளவேண்டும். அதன் அடிப்படையில்தான் நிகழ்ச்சி நடந்தது.

இந்த சராசரி அறிவு கூட இல்லாமல், ஒரு எதிர்க்கட்சித் தலைவர் இருக்கிறார் என்பதுதான் வேதனையாக இருக்கிறது. கலைஞருக்கு நாணயம் வெளியிடுவது ஒன்றிய அரசு. அதனால் ஒன்றிய அமைச்சரை அழைத்து அந்த நிகழ்ச்சியை நாங்கள் சிறப்பாக நடத்தி முடித்திருக்கிறோம். இதில் பழனிசாமிக்கு எங்கே வலிக்கிறது? அதைத்தான் நான் கேட்கிறேன்.

எம்.ஜி.ஆர். அவர்களுக்கு நாணயம் வெளியிட்டார்கள். யார் வெளியிட்டார்கள் தெரியுமா? ஒன்றியத்தில் இருந்து யாரும் வரவில்லை. எடப்பாடி பழனிச்சாமியே வெளியிட்டார். ஏனென்றால், ஒன்றிய அரசு அவரை மதிக்கவில்லை. அவரை ஒரு முதலமைச்சராகவே நினைக்கவில்லை. ஏன் மனிதனாகவே நினைக்கவில்லை. வர மறுத்துவிட்டார்கள். இதுதான் அவருக்கு இருந்த மரியாதை. இன்றைக்கு நாம் அழைத்த அடுத்த விநாடி ஒரு சொல்கூட தட்டாமல் ஒரு 15 நிமிடம், 30 நிமிடத்திற்கு நடத்திவிட்டு போகவேண்டும் என்று சொன்னதற்கு, 15 நிமிடம் என்ன? எவ்வளவு நேரம் இருந்தாலும் காத்திருந்து அந்த நிகழ்ச்சியை நடத்திவிட்டு போகிறேன் என்று சொல்லிக் கொண்டு வந்தார். அதுதான் திமுக-விற்கு இருக்கக்கூடிய பெருமை; கலைஞருக்கு இருக்கக்கூடிய சிறப்பு.

இன்னும் ஒன்றை சொல்லவேண்டுமென்றால், அம்மா, அம்மா என்று புகழ்ந்து கொண்டு இருக்கிறார்களே அதிமுக-வினர், பாக்கெட்டில் படத்தை வைத்துக் கொண்டு பூஜை செய்து கொண்டிருக்கிறார்களே, அந்த அம்மையார் இறந்து எத்தனை வருடங்கள் ஆகிறது? நான் கேட்கிறேன், இதுவரைக்கும் அந்த அம்மையார் அவர்களால் வளர்க்கப்பட்டவர்கள், உருவாக்கப்பட்டவர்கள் ஒரு இரங்கல் கூட்டமாவது நடத்தியிருக்கிறார்களா? ஒரு இரங்கல் கூட்டத்தை நடத்துவதற்கு கூட யோக்கியதை அற்றவர்கள், கலைஞர் அவர்களுடைய விழாவை பார்த்து விமர்சனம் செய்வதற்கு உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்றுதான் நான் கேட்கிறேன்.

ராஜ்நாத் சிங் அவர்களை நாம் அழைத்ததால் ஏதோ பா.ஜ.க.வோடு நாம் உறவு வைத்துக் கொண்டிருக்கிறோம், உறவு வைக்கப்போகிறோம் என்று ஒரு செய்தியை கிளப்பிவிட்டிருக்கிறார்கள். இது ஊடகத்திற்கு ஒரு தீனி. ஒவ்வொரு ஊடகங்களும், ஒவ்வொரு கோணத்தில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். திட்டினாலும் திமுக-வைதான், வாழ்த்தினாலும் திமுக-வைதான். நாங்கள் எல்லாம் ரகசிய உறவு வைத்துக் கொள்ளவேண்டும் என்ற அவசியமே இல்லை.

அம்மையார் இந்திராகாந்தி அவர்களே சொன்னார்கள், கலைஞரை பொறுத்தவரைக்கும், திமுக-வை பொறுத்தவரைக்கும் எதிர்த்தாலும் கொள்கையோடு எதிர்ப்பார்; ஆதரித்தாலும் கொள்கையோடு ஆதரிப்பார் என்று சொல்லியிருக்கிறார். எங்களுக்கு அது ஒன்றே போதும். அந்த அளவிற்கு மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கூட நாங்கள் தீர்மானம் போட்டிருக்கிறோம். முதலில் பழனிசாமி அவர்கள் அதைப் படிக்க வேண்டும். பழனிசாமி மாதிரி ஊர்ந்து சென்று, பதுங்கி சென்று பழி வாங்குகின்ற புத்தி திமுக-வுக்கு கிடையாது. எல்லோருக்கும் உரிய மரியாதையை நாங்கள் கொடுப்போம். அதற்காக நிச்சயமாக சொல்கிறேன், உறுதியாக சொல்கிறேன் அண்ணா மீது ஆணையிட்டு சொல்கிறேன், நமக்கென்று இருக்கக்கூடிய உரிமையை ஒருநாளும் விட்டுக்கொடுக்க மாட்டோம். இதுதான் அண்ணாவும், கலைஞரும் நமக்கு அமைத்துத் தந்திருக்கக்கூடிய பாதை" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories