தமிழ்நாடு

“குலக்கல்வித் திட்டத்தை ஒழித்ததுபோல நீட் ஒழிப்பிலும் வெற்றி பெறுவோம்” - கி.வீரமணி !

“குலக்கல்வித் திட்டத்தை ஒழித்ததுபோல நீட் ஒழிப்பிலும் வெற்றி பெறுவோம்”  - கி.வீரமணி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நீட் தொடங்கியது முதல் ஊழலும், குளறுபடிகளும் தொடர்கின்றன. அனிதா முதல் ஒடுக்கப்பட்ட சமுதாய மாணவ, மாணவிகள் தற்கொலைகள் தொடர்கின்றன. பல்வேறு போராட்டங்களை நடத்திய திராவிடர் கழகம் வரும் ஜூலை 11 ஆம் தேதிமுதல் 15 ஆம் தேதிவரை தமிழ்நாடு தழுவிய நிலையில், திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகத்தினரின் இரு சக்கர வாகனப் பிரச்சாரப் பயணம் சேலத்தில் ஜூலை 15 இல் சங்கமம் ஆகிறது. குலக்கல்வித் திட்டத்தைத் தந்தை பெரியார் ஒழித்ததுபோல், நீட்டையும் ஒழித்து வெற்றி பெறுவோம், ஆதரவு தாரீர் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானத்தைத் தகர்ப்பதற்கே – நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் பட்டப் படிப்பு, மேற்பட்டப்படிப்பு முதலிய எல்லா படிப்புகளுக்கும் நீட் (NEET) என்ற ஒரு பொதுத் தேர்வு எழுதி, அதில் அதிக மதிப்பெண் பெறுகிறவர்கள் மட்டுமே மருத்துவக் கல்லூரியில் சேர முடியும் என்ற ஒரு சூழ்ச்சிப் பொறியை திட்டமிட்டே நுழைத்தார்கள்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு! :

உச்சநீதிமன்றத்தில் போடப்பட்ட ஒரு வழக்கினைப் பயன்படுத்தி, இந்த அநியாயத்தை, அரசமைப்புச் சட்ட அத்து மீறலை நியாயப்படுத்திக் காட்டினர் சமூகநீதிக்கான பிறவி எதிரிகளான உயர்ஜாதியினர்.

முதலில் இப்படி நுழைவுத் தேர்வு தேவையில்லை என்பதை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அல்டாமஸ் கபீர் தலைமையிலான மூவர் கொண்ட அமைப்பில், தலைமை நீதிபதியும், மற்றொரு நீதிபதி விக்ரமஜித்சென் என்பவரும் தனித் தேர்வு தேவையில்லை – அந்த ஏற்பாடு செல்லத்தக்கதல்ல என்று மெஜாரிட்டி தீர்ப்பளித்தனர். மூன்றாவது நீதிபதி (குஜராத்தைச் சேர்ந்த) அனில்தவே என்ற உயர்ஜாதி நீதிபதி மட்டும் மாறுபட்ட தீர்ப்புத் தந்தார்.

அதன்படி, ‘நீட்‘ போன்ற தேர்வு தேவையற்ற ஒன்று என்று தெளிவான பிறகு, சில மாதங்கள் கழித்து, அந்தத் தலைமை நீதிபதி ஓய்வு பெற்ற பின், முன்பு மாறுபட்ட தீர்ப்புத் தந்த அந்த ஒற்றை நீதிபதியே (அனில் தவே) மரபுக்கு மாறாக, மறு ஆய்வு, மறு விசாரணை செய்து அதன்படி ‘நீட்‘ தேர்வை உள்ளே நுழைத்தனர்.

“குலக்கல்வித் திட்டத்தை ஒழித்ததுபோல நீட் ஒழிப்பிலும் வெற்றி பெறுவோம்”  - கி.வீரமணி !

அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது! :

1. இது அரசமைப்புச் சட்டத்தின் ஏழாம் அட்டவணையில் வழங்கப்பட்ட மாநில உரிமைகளைப் பறிக்கும் ஒன்று; எனவே, நமது அரசமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் முரணானதும்கூட!

2. இந்த நீட் தேர்வுபற்றி ஆணை என்பது ஒன்றிய அரசின் கல்வித் துறை, மருத்துவத் துறையின் சார்பாக ஏற்படுத்தி, GATT ஒப்பந்தப்படி உள்ள வர்த்தகத் துறையின்கீழ்தான் ஆணையாக நீட் தேர்வு உள்ளே திணிக்கப்பட்டது!

3. மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறித்து இப்படி நாடு தழுவிய அளவுக்கு ஒரே தேர்வு என்பது ஏன் தேவை என்ற கேள்வி எழுந்தபோது, ''பழைய தேர்வு முறையில் ஊழல் மலிந்துவிட்டது; பணத்தை ஏராளம் வாங்கிக்கொண்டு பல மருத்துவக் கல்லூரிகளில் ‘சேர்க்கை' நடக்கிறது. எனவேதான் ‘தேசிய தேர்வு முகமை‘ என்ற ஒன்றை உருவாக்கி ஊழலுக்கு எதிரான ஒரு புதுமுறையை ஏற்படுத்துகிறோம்'' என்று ஒரு வாதத்தை வைத்தார்கள்!

கடந்த 8 ஆண்டுகளாக நீட் தேர்வில் ஊழல்கள் – குளறுபடிகள்! :

4. அதில் துளியும் தொடர்பற்ற நிலையில்தான் கடந்த 8 ஆண்டுகளுக்குமேல் நடைபெறும் இந்த ‘நீட்‘ தேர்வில் லஞ்சம், ஊழல், ஆள்மாறாட்டம், கேள்வித்தாள் கசிவு முதலியன தொடர்கின்றன.

5. ஏழை, எளிய, நடுத்தர, ஒடுக்கப்பட்ட மக்களின் பிள்ளைகளது மருத்துவ படிப்பு விருப்பம் இந்த நீட் மூலம் நிர்மூலமாக்கப்பட்டு, அரியலூர் அனிதா தொடங்கி எத்தனையோ மாணவ, மாணவிகளின் உயிரைக் குடித்துள்ள பலி பீடமாக ‘நீட்‘ தேர்வு கொடுவாள் மாணவர்களின் தலைமீது தொங்கும் வேதனை உள்ளது!

6. புற்றீசல்போல கோச்சிங் சென்டர் என்ற கார்ப்பரேட் கம்பெனிகள் ஒவ்வொரு ஏழை, எளிய மாணவர்கள் உள்பட பலரிடம் பல லட்சக்கணக்கில் பணத்தைப் பறித்து, திடீர் கோடீசுவரர்களாகி விட்டனர் (ஆயிரம் கோடி ரூபாய்களுக்குமேல் இவர்களது பணம்).

7. மாநிலக் கல்வித் திட்டம், ஒன்றியக் கல்வித் திட்டம் (சி.பி.எஸ்.இ.) என்ற இரண்டில், முதல் பாடத் திட்டத்தில் படித்த அதிகப்படி மதி்ப்பெண் (1200–க்கு 1176) 12ஆம் வகுப்பில் படித்த அதிபுத்திசாலியான அனிதா போன்ற கூலித் தொழிலாளியான ஒரு தந்தையின் மகளாக இருந்தவரை இந்த கேள்வித் தாள். சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தின்கீழ் அமைந்ததால், குறைந்த மதிப்பெண் (வெறும் 86) பெறும் நிலையில், நீதி கிடைக்காமல் தற்கொலை செய்துகொண்ட படலம் நிகழ்ந்தது.

8. ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வில் நடைபெறும் ஊழல்பற்றி பல வழக்குகள் உயர்நீதிமன்றங்களில் ஏராளம் வந்து, பல தவறுகளும், நீட் தேர்வு ஊழலும் வெளிவந்த நிலையில், அந்த மாநிலத்தில் அந்த வழக்குகளின்மீது தீர்ப்புக் கூறும் முன்பே, உச்சநீதிமன்றத்திற்கே அனுப்பும்படி அறிவுரைத்தது நீட் தேர்வு ஊழலுக்கு மூடு திரையாகிவிட்டது!

9. இப்படிப்பட்ட பல அநீதிகளை – சமூகநீதிக்கும் எதிரான இந்த ஏற்பாடு குறித்து முதலில் திராவிடர் கழகம் தமிழ்நாட்டில் தனது எதிர்ப்பினை பிரச்சாரம், போராட்டம் மூலம் வெளிப்படுத்தியது.

“குலக்கல்வித் திட்டத்தை ஒழித்ததுபோல நீட் ஒழிப்பிலும் வெற்றி பெறுவோம்”  - கி.வீரமணி !

பி.ஜே.பி.யைத் தவிர தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிகளும் நீட்டுக்கு எதிர்ப்பு! :

அடுத்து அரசியல் கட்சி என்கிற முறையில், திராவிட முன்னேற்றக் கழகம், அதன் தலைமையில் உள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளும் பல மேடைகளில் பரப்புரை செய்து, தமிழ்நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நீதிமன்றமும் சென்றனர். இப்போது ‘நீட்‘ தேர்வின் ஊழல் முடைநாற்றம் நாடு முழுவதிலும் மாணவர் – பெற்றோர்களை கொதித்தெழச் செய்துள்ளது.

தென்னாடு முதல் வடபுலம் வரை எங்கும் நீட் தேர்வு ஒழிப்புக் கிளர்ச்சிகள் பொறியாய்க் கிளம்பி, பெருநெருப்பாய்ப் பற்றி எரிகிறது! சில வாரங்களாக உச்சநீதிமன்றமே கேள்விக்குமேல் கேள்வி எழுப்பிய பின், இப்போதுதான் ஒன்றிய அரசு, ‘‘ஒரே ஒரு இடத்தில்தான் தேர்வுத் தாள் கசிந்திருக்கிறது‘‘ என்று ‘‘ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய்யை''ச் சொல்லுகிறது!

வட மாநிலங்களிலும் கொடிகட்டிப் பறக்கும் எதிர்ப்பு :

குஜராத் மாநிலத்திலும், பீகாரிலும், மகாராட்டிராவிலும் மற்ற மற்ற வடபுல மாநிலங்களிலும் இந்த ஊழல் அங்கிங்கெனாதபடி எங்கும் கொடி பறக்கும் நிலையில், தமிழ்நாட்டிலும் அனைத்துக் கட்சிகளும் (பா.ஜ.க. ஒரு கட்சியைத் தவிர) நீட் தேர்வை ஒழிக்கவேண்டும் என்ற கோரிக்கையை ஓங்கி ஒலிக்கின்றன –ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் என்ற வேறுபாடின்றி!

இதுவரை நீட் தேர்வுபற்றி வாய்த் திறக்காத பிரதமர் மோடி, கடந்த 2.7.2024 அன்று, ‘‘நீட் தேர்வு கேள்வித் தாள் கசிந்த விவகாரத்தில், குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்‘‘ என்று கூறினார். ஊழல் இல்லாதது அல்ல – நீட் தேர்வே ஊழல் என்று ஒப்புக்கொண்டுள்ளார்.

நீட் தேர்வை ஒழித்துக்கட்டும் வரை நாம் ஓயப் போவதில்லை. :

தமிழ்நாட்டு ‘திராவிட மாடல்‘ ஆட்சி தொடர்ந்து இரண்டு முறை மசோதா நிறைவேற்றம், வழக்கு மன்றம் மற்றும் பிரதமரை நேரில் சந்தித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வலியுறுத்தினார்; எதற்கும் அசையவில்லை – ''ஊழலை ஒழிப்போம் என்று ஒருபுறம் வெற்று ஆரவாரப் பேச்சு – மறுபுறத்தில் ஊழலின் ஊற்றுக்கண்ணான நீட் தேர்வு முறையை ரத்து செய்ய மறுப்பு'' என்ற இரட்டை நிலைப்பாட்டை எடுத்துவரும் விநோத வித்தையைக் காட்டி வருகிறது –ஒன்றிய பா.ஜ.க. அரசு!

“குலக்கல்வித் திட்டத்தை ஒழித்ததுபோல நீட் ஒழிப்பிலும் வெற்றி பெறுவோம்”  - கி.வீரமணி !

5 முனைகளிலிருந்து தி.க. இளைஞரணி, மாணவர் கழகத்தின் இரு சக்கர வாகனப் பிரச்சாரப் பயணம்– சேலத்தில் சங்கமம்!

வருகிற ஜூலை 11 முதல் 15 ஆம் தேதிவரை தமிழ்நாடு முழுவதிலும் ஊழலின் மறுஉருவமாக உள்ள நீட் தேர்வை ஒழிக்கும் அடைமழைப் பிரச்சாரத்தின் மற்றொரு கட்டமாக, மாணவர்கள், இளைஞர்கள் இணைந்து 5 அணிகளாக கன்னியாகுமரி, இராமநாதபுரம், புதுச்சேரி, தாராபுரம், சென்னை ஆகிய நகரங்களில் தொடங்கி சேலத்தில் தங்களது இரு சக்கர வாகனப் பிரச்சாரத்தினை நிறைவு செய்ய எல்லா ஏற்பாடுகளையும் குன்றா ஆர்வத்துடனும், கொதிக்கும் உணர்வுடனும் மேற்கொள்ளவிருக்கின்ற தோழர்களுக்கு நமது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!

ஒவ்வொரு ஊரிலும் வழிநெடுக திராவிடர் கழகத்தினர், பகுத்தறிவாளர்கள் மட்டுமின்றி, அனைத்து நீட் தேர்வு ஒழிப்பு உணர்வாளர்களும் இணைந்து, இந்த சூறாவளி சுற்றுப் பயணத்தை வெற்றிகரமாக்கவேண்டிய – பொதுநலம் – இனநலம் – ஊழல் ஒழிப்பு – அரசமைப்புச் சட்டப் பாதுகாப்பு ஆகிய கண்ணோட்டங்களில் தங்களது பேராதரவினைத் தந்து ஊக்குவிக்க அன்புடன் வேண்டுகிறோம்!

இது திராவிடர் கழகத்தின் நலனுக்காக அல்ல – எதிர்கால சந்ததியின் மருத்துவக் கல்வி வாய்ப்புக்கான, எதிரிப் படைகளை தோற்கடிப்பதற்கான அறப்போர்! ஓயாத போராட்டம்!! வெற்றி நமதே!

1. நீட் தேர்வு ஒழிப்புப் போராட்டம் தொடங்கிய காலம் முதல் இன்றுவரை எதிர்த்துவரும் கட்சி, அணிகளுக்குக் குறிப்பாக திராவிடர் கழகத்திற்குக் கிடைத்த முதல் வெற்றி – இந்தியா முழுவதிலும் பா.ஜ.க. தவிர மற்ற கட்சிகள் நீட் தேர்வு ஊழல் நிறைந்ததால் ரத்து செய்யப்படவேண்டும் என்பதை ஒப்புக்கொண்டதுதான்.

2. இரண்டாவது, உச்சநீதிமன்றமே ஊழல் நடந்துள்ளது என்பதை பகிரங்க கேள்விமூலம் ஏற்றுள்ளது.

3. மாநிலங்களவையில் (2.7.2024) மோடி பேசியபொழுது ஊழல் நடந்துள்ளது என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.

குலக்கல்வித் திட்டத்தை ஒழித்ததுபோல நீட் ஒழிப்பிலும் வெற்றி பெறுவோம்! அறிவு ஆசான் குலக்கல்வி ஒழிப்புத் திட்டத்தில் பெற்ற வெற்றி போல், இந்த வெற்றி நிச்சயம் கிட்டுவது உறுதி! இப்படை தோற்கின் – எப்படை வெல்லும்?

banner

Related Stories

Related Stories