அரசியல்

அன்னப்பூர்ணா விவகாரம் : “ஆணவம்... அவமரியாதை...” - நிர்மலா சீதாராமனுக்கு ராகுல் கண்டனம்!

கேள்வி கேட்டவரை அவமரியாதை செய்வதா ? - அன்னப்பூர்ணா விவகாரத்தில் ராகுல் காந்தி காட்டம் !

அன்னப்பூர்ணா விவகாரம் : “ஆணவம்... அவமரியாதை...” - நிர்மலா சீதாராமனுக்கு ராகுல் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே எல்லா பொருட்கள் மீதும் அதிக அளவிலான ஜி.எஸ்.டி வரியை விதித்து வருகிறது. இதனால் உணவு உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருவது சாமானிய மக்களைப் பாதித்துள்ளது. தற்போது இந்தியா கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து வரும் நிலையில், அரசி, பருப்பு, பால் உள்ளிட்ட பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி விதித்துள்ளது.

மேலும் பல பொருள்களுக்கு ஜி.எஸ்.டி வரியை அதிகரித்துள்ளது. இதனால் அத்தியாவசிய பொருள்களின் விளையும் அதிகளவில் உயர்ந்துள்ளது. இந்த சூழலில் நேற்றைய முந்தினம் (11.09.2024) கோவையில் நடைபெற்ற தொழில் அமைப்புகளின் நிர்வாகிகளுடன், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடும் நிகழ்ச்சியின்போது, அன்னப்பூர்ணா நிறுவனர் சீனிவாசன், ஜி.எஸ்.டி குறித்து கேள்வியெழுப்பி, கோரிக்கை விடுத்திருந்தார்.

இது குறித்து அன்னப்பூர்ணா நிறுவனர் சீனிவாசன் பேசுகையில், “இனிப்பு வகை உணவுகளுக்கு 5% ஜி.எஸ்.டி என்றால், கார வகை உணவுகளுக்கு 12 % ஜி.எஸ்.டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பன்னுக்கு ஜி.எஸ்.டி கிடையாது. அதே பன்னுக்குள் க்ரீம் வைத்தால், அது 18% ஜி.எஸ்.டி ஆகிவிடுகிறது. மக்கள் பன், க்ரீமை தனி தனியாக கொண்டுவாருங்கள் என்று கேட்கிறார்கள்.

உங்கள் அருகில் உள்ள எம்.எல்.ஏ வானதி, எங்கள் உணவகத்தின் ரெகுலர் கஸ்டமர். அவர் வரும்போது எல்லாம் இனிப்பு, காரத்துக்கு தனி தனி ஜி.எஸ்.டி நிர்ணயிக்கப்பட்டுள்ளதற்காக எங்களிடம் தினமும் சண்டை போடுகிறார். வடநாட்டில் அதிகம் இனிப்பு சாப்பிடுவதால் 5% ஜிஎஸ்டியும், காரத்திற்கு 12% ஜி.எஸ்.டியும் நிர்ணயித்துள்ளதாக எம்.எல்.ஏ வானதியே கூறுகிறார்.

அன்னப்பூர்ணா விவகாரம் : “ஆணவம்... அவமரியாதை...” - நிர்மலா சீதாராமனுக்கு ராகுல் கண்டனம்!

ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மாதிரியான ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை இருப்பதால் கம்ப்யூட்டரே திணறுகிறது. அதேபோல ஹோட்டலுக்கு ஆய்வுக்கு வரும் அதிகாரிகளும் திணறுகிறார்கள். எனவே ஜி.எஸ்.டி வரியை முறைபடுத்த வேண்டும்” என்று கூறினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பலர் மத்தியிலும் பலவித கருத்துகளை பெற்று வருகிறது.

இந்த நிலையில், ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் ஆகியோரை தனியாக சந்தித்த அன்னப்பூர்ணா உரிமையாளர், தனது பேச்சுக்கு எழுந்து நின்று கைக்கூப்பி மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், தொழிலதிபர் சீனிவாசன் மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்து அவமானப்படுத்தப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் முன்னணி தலைவருமான ராகுல் காந்தி தனது சமூக வலைதள பக்கத்தில், “கோயம்புத்தூரில் உள்ள அன்னபூர்ணா உணவகம் போன்ற ஒரு சிறு வணிகத்தின் உரிமையாளர், எளிமைப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி முறையைக் கேட்கும்போது, அவரது கோரிக்கை ஆணவத்துடன் மற்றும் முற்றிலும் அவமரியாதையுடன் எதிர்க்கப்படுகிறது. ஆனால், தனது கோடீஸ்வர நண்பர் விதிகளை வளைக்கவோ, சட்டங்களை மாற்றவோ அல்லது தேசிய சொத்துகளை பெற சுருட்ட முற்படும்போதோ மோடி சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கிறார்.

அன்னப்பூர்ணா விவகாரம் : “ஆணவம்... அவமரியாதை...” - நிர்மலா சீதாராமனுக்கு ராகுல் கண்டனம்!

பணமதிப்பு நீக்கம், வரி கொள்ளை மற்றும் பேரழிவு தரும் ஜிஎஸ்டி போன்றவற்றின் தாக்கங்களை நமது சிறு வணிக உரிமையாளர்கள் ஏற்கனவே சகித்துக்கொண்டிருக்கிறார்கள். இப்படி இருக்கையில் இதை எதிர்த்து கேள்வி கேட்டு, அது அதிகாரத்தில் இருப்பவர்களின் ஈகோவை தொடும்போது, அவர்கள் என்ன செய்வார்கள் என்பது பட்டவர்த்தனமாக தெரிகிறது.

ஜிஎஸ்டி குறித்து கேள்வி கேட்டவரின் பேச்சு ஆணவத்துடன், அவமரியாதையுடன் அணுகப்பட்டுள்ளது. அதிகாரத்தில் உள்ளவர்களின் கவுரவம் பாதிக்கப்பட்டால், அதற்கு காரணமானவர்களை அவமதிப்பதே வாடிக்கையாக உள்ளது. GST வரி பற்றி கேள்வி எழுப்பிய சீனிவாசன், ஆணவப் போக்குடன் அவமதிக்கப்பட்டுள்ளார்

MSMEகள் பல ஆண்டுகளாக நிவாரணம் கேட்டு வருகின்றன. ஒரே வரி விகிதத்துடன் கூடிய எளிமைப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டியால் லட்சக்கணக்கான வணிகர்களின் பிரச்னைகள் தீர்க்கப்படும் என்பதை அரசு புரிந்துக்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories