முரசொலி தலையங்கம்

கள்ளக்குறிச்சி சம்பவம் : குழந்தைகளின் எதிர்காலத்துக்கான முதலமைச்சரின் அறிவிப்புகள் - முரசொலி பாராட்டு !

கள்ளக்குறிச்சி சம்பவம் : குழந்தைகளின் எதிர்காலத்துக்கான முதலமைச்சரின் அறிவிப்புகள் - முரசொலி பாராட்டு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி தலையங்கம் (25.6.2024)

கனிவான நிர்வாகம்

மெத்தனாலைக் கலக்கி குடித்து ஐம்பதுக்கும் மேற்பட்டோர் இறந்த சம்பவம், மிகமிக வருத்தத்துககு ரியது. இந்த நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுப்பாதுகாப்புடன் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்பட்டு வருகிறார். இறந்தவர்கள் குடும்பத்துக்கு பத்து லட்சம் ரூபாய் வழங்கினார் முதலமைச்சர் அவர்கள். அன்றைய தினமே அதனை வழங்கினார் முதலமைச்சர் அவர்கள். மருத்துவமனையில் இருப்போர் குடும்பத்துக்கும் உடனடியாக ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. அந்தப் பகுதியில் மருத்துவர்கள், செவிலியர்களது ஆய்வுப் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களையும் அரசு பாதுகாத்து வருகிறது. மருத்துவ ஆலோசனை கொடுத்து வருகிறது அரசு. இறந்து போனவர் குடும்பத்துக்கு இழப்பீடுத் தொகை கொடுத்ததோடு தனது கடமை முடிந்துவிட்டதாக அரசோ, முதலமைச்சரோ நினைக்கவில்லை.

மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கனிவான இன்னொரு நடவடிக்கையை சமூக ஊடகங்களில் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். 'குடித்து விட்டு செத்தவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டுமா?' என்று கோபமாகக் கேட்பவர்கள் கூட, இறந்தோர் குடும்பத்துப் பிள்ளைகளின் படிப்புக்கு முதலமைச்சர் அவர்கள் உதவி செய்வதை ஆதரித்து பதிவுகளைப் போட்டு வருகிறார்கள். “இந்த அரசானது கள்ளச்சாராயத்தை அறவே ஒழிப்பதற்கு மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையிலும், இதுபோன்ற சில விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்படுவது மிகவும் வேதனைக்குரியது. இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் இந்த அரசு செய்யும். அதனடிப்படையில், இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கவும், அவர்களின் எதிர்கால நலனை கருத்திற்கொண்டும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டு 10 இலட்சம் ரூபாய் நிவாரண நிதியுடன் பின்வரும் நிவாரணங்கள் கூடுதலாக வழங்கப்படும்” என்று சொல்லி முதலமைச்சர் அவர்கள் மிகமிக முக்கியமான அறிவிப்பைச் செய்தார்கள்.

கள்ளக்குறிச்சி சம்பவம் : குழந்தைகளின் எதிர்காலத்துக்கான முதலமைச்சரின் அறிவிப்புகள் - முரசொலி பாராட்டு !

*பெற்றோர் இருவரையோ அல்லது ஒருவரையோ இழந்து வாடும் குழந்தைகளின் பட்டப்படிப்பு வரையிலான கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்ளும்.

*பெற்­றோர் இரு­வ­ரை­யும் இழந்து ஆத­ர­வின்றி தவிக்­கும் ஒவ்­வொரு குழந்­தை­யும் பாது­கா­வ­லர் பரா­ம­ரிப்­பில் வளர, அவர்­கள் 18 வயது நிறை­வ­டை­யும் வரை மாத பரா­ம­ரிப்­புத் தொகை­யாக தலா ஐந்­தா­யி­ரம் ரூபாய் வழங்­கப்­ப­டும்..

*பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு உடனடி நிவாரணத் தொகையாக அவர்களின் பெயரில் தலா ஐந்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிலையான வைப்புத் தொகையில் வைக்கப்படும். அவர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவுடன் அந்தத் தொகை வட்டியுடன் அவர்களுக்கு வழங்கப்படும்.

*பெற்றோர் இருவரில் ஒருவரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும்.

*பெற்றோர் இருவரையோ அல்லது ஒருவரையோ இழந்து வாடும் குழந்தைகளுக்கு, அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளிலும் முன்னுரிமை வழங்கப்படும்.

*பெற்றோரை இழந்த குழந்தைகள், அவர்களது விருப்பத்தின் பேரில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் இல்லங்கள் மற்றும் விடுதிகளில் சேர்க்கப்படுவர்.

ஆகிய அறிவிப்புகள் பலராலும் ஆதரித்து வரவேற்கப்படுகின்றன. 'இப்படி ஒரு முதலமைச்சர் சிந்திக்க முடியுமா என்ற அளவுக்கு சிந்திக்கிறார் முதலமைச்சர்' என்று சொல்லி இருக்கிறார்கள் பலரும். சில நாட்களுக்கு முன் பள்ளிக் கல்வித் துறையின் ஐம்பெரும் விழாவில் பேசிய முதலமைச்சர் அவர்கள்,“மாணவச் செல்வங்கள், படிப்பதற்கு சமூகமோ, பொருளாதாரமோ, அரசியல் சூழ்நிலையோ எதுவும் தடையாக இருக்கக் கூடாது என்பதே திராவிட மாடல் ஆட்சியின் கொள்கை ஆகும்” என்று சொன்னார்கள். சொன்னது ஏதோ வாய்வார்த்தைக்குச் சொன்னது அல்ல, அலங்காரச் சொல் அல்ல என்பதை கள்ளக்குறிச்சி சம்பவத்திலேயே முதலமைச்சர் அவர்கள் மெய்ப்பித்துவிட்டார்கள்.

“நடைபெற்ற சம்பவத்துக்கு முதலமைச்சர் பொறுப்பேற்க வேண்டும்” என்று இங்கு பேசினார்கள். உள்துறையைக் கவனிப்பவன் என்ற முறையில் மட்டுமல்ல; தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் எந்தப் பிரச்சினையில் இருந்தும் ஓடி ஒளிபவனல்ல நான். பொறுப்பை உணர்ந்ததால்தான் பொறுப்புடன் பதில் அளித்துக் கொண்டிருக்கிறேன். எடுத்த நடவடிக்கைகளையும் பட்டியலிட்டிருக்கிறேன். குற்றவாளிகளைக் கைது செய்து விட்டுத்தான் உங்களுக்கு பதில் அளித்திருக்கிறேன். திறந்த மனத்தோடு இரும்புக் கரம் கொண்டு குற்றம் புரிந்தவர்களை அடக்கி வருகிறேன்” என்று சொன்னார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். முதலமைச்சரின் பொறுப்பு என்பது அரசியல் பொறுப்பு மட்டுமல்ல; அனைத்து மக்களின் வாழ்க்கைப் பொறுப்பையும் உணர்ந்தவராக முதலமைச்சர் அவர்கள் செயல்படுவதை இதன் மூலம் அறியலாம். அந்தப் பிஞ்சுக் குழந்தைகளின் எதிர்காலம் நம் கண்ணுக்கு முன்னே சிதைந்து விடக் கூடாது என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முடிவெடுத்த சிந்தனையில் தான் அவரது கனிவான சிந்தனையும், அவரது ஆட்சிக் கொள்கையின் இதயமும் அமைந்திருக்கிறது. அரசு என்பது நிர்வாக இயந்திரம் அல்ல, நிர்வாக இதயம் என்பதைக் காட்டிவிட்டார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.

banner

Related Stories

Related Stories