தமிழ்நாடு

ரூ.46 கோடி செலவில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா! : முதலமைச்சர் திறந்துவைத்தார்!

சென்னை, கதீட்ரல் சாலையில் ரூ.46 கோடி செலவில் உலகத்தரத்துடன் அமைக்கப்பட்டுள்ள "கலைஞர் நூற்றாண்டு பூங்கா" முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ரூ.46 கோடி செலவில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா! : முதலமைச்சர் திறந்துவைத்தார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (7.10.2024) சென்னை, கதீட்ரல் சாலையில் தோட்டக்கலைத் துறையின் 6.09 ஏக்கர் நிலத்தில், 46 கோடி ரூபாய் செலவில் தோட்டக்கலை அருங்காட்சியகம் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ள உலகத்தரத்திலான கலைஞர் நூற்றாண்டு பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டின் இயற்கை சூழலை பாதுகாத்திடவும், வனப்பரப்பை அதிகப்படுத்தும் நோக்கிலும், 2 கோடியே 80 லட்சம் மரக்கன்றுகளை நட்டு பசுமை தமிழ்நாடு இயக்கத்தை தொடங்கி வைத்தது, பள்ளிக்கரணையில் 2.5 ஹெக்டேர் நிலப்பரப்பில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சதுப்புநில சூழலியல் பூங்கா அமைக்கப்பட்டது.

சென்னை செனாய் நகரில் மெட்ரோ இரயில் கட்டுமானத்திற்குப் பின்னர் 18 கோடி ரூபாய் செலவில் மறுசீரமைக்கப்பட்ட திரு.வி.க. பூங்கா, சென்னை கிண்டியில் 30 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட கிண்டி சிறுவர் இயற்கை பூங்கா, திருவண்ணாமலை, ஆதி அண்ணாமலை மலையின் அடிவாரத்தில் கலைஞர் நூற்றாண்டு தோட்டக்கலை பூங்கா ஆகிய பூங்காக்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும், கோயம்புத்தூர், காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகத்தில் 165 ஏக்கர் பரப்பளவிலான செம்மொழிப் பூங்கா, சென்னை புழல், ரெட்டேரி மற்றும் கொளத்தூர் ஏரிக்கரைகளில் புதிய பூங்காக்கள் அமைத்து ஏரிக்கரைகளை மேம்படுத்தும் பணிகள், ஏற்காடு மற்றும் மாதவரம் பூங்காக்களை தலா ரூ.5 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, அங்கு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

ரூ.46 கோடி செலவில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா! : முதலமைச்சர் திறந்துவைத்தார்!

இவைமட்டுமின்றி பெருநகர சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகத் துறை, சுற்றுச்சூழல் துறை, தோட்டக்கலை துறைகளின் வாயிலாகவும் புதிய பூங்காங்களை உருவாக்குதல், பழைய பூங்காங்களை புனரமைத்தல் போன்ற பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது.

கலைஞர் நூற்றாண்டு பூங்கா முதலமைச்சர் 15.08.2023 அன்று விடுதலை நாள் விழாவில், தலைமைச் செயலகக் கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய போது "சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள செங்காந்தள் பூங்காவிற்கு அருகில் உள்ள 6.09 ஏக்கர் நிலத்தில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா ஒன்று அமைக்கப்படும்" என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவரும், 13 முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 13 முறையும் வெற்றி பெற்றவரும், தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், தமிழ்நாட்டின் அரசியல் தலைவராக மட்டுமல்லாமல் இந்திய அரசியலின் திசையை தீர்மானிப்பவராகவும் திகழ்ந்த நூற்றாண்டு நாயகர் முத்தமிழறிஞர் கலைஞரின்.

அவரின் பன்முக ஆற்றலையும், அவர் படைத்தளித்த மக்கள் நலத்திட்டங்களையும், சமுதாயத்தில் அதன் தாக்கத்தையும் வருங்காலங்களில் தமிழ்நாட்டு மக்கள் என்றென்றும் நினைவில் கொள்ளும் வகையில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா மாநிலம் முழுவதும் தமிழ்நாடு அரசால் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, தமிழ் வளர்ச்சிக்கும், இலக்கியம், கலை, காலாச்சார வளர்ச்சிக்கும், அடித்தட்டு மக்களின் எழுச்சிக்கும் ஒரு நூற்றாண்டு வாழ்ந்து தமிழர்தம் வாழ்வில் நீங்கா இடம் பிடித்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவைப்போற்றும் விதமாக சென்னை, கோபாலபுரம், கதீட்ரல் சாலையில் செம்மொழி பூங்காவிற்கு எதிரில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, நெடு நீண்ட சட்ட போராட்டத்திற்கு பிறகு அரசால் மீட்கப்பட்டு தோட்டக்கலை துறைக்கு மாற்றப்பட்ட சென்னை, கதீட்ரல் சாலையில் உள்ள நிலத்தில் உலகத்தரம் வாய்ந்த பூங்காவினை அமைத்திட முதலமைச்சரால் 27.02.2024 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது.

ரூ.46 கோடி செலவில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா! : முதலமைச்சர் திறந்துவைத்தார்!

அதன்படி, பரந்து விரிந்த பசுமைச்சூழலில் பொழுதுப்போக்கு அம்சங்களுடன் பல்வேறு வகையான அழகிய, அரியவகை தாவரங்கள் மற்றும் மரங்களைக் கொண்டதாக உலகத்தரத்துடன் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, பார்வையிட்டார். பின்னர், கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் உயர்தர தோட்டக்கலை அருங்காட்சியகம், ஆர்க்கிட் குடில், கண்ணாடி மாளிகை, அலங்கார வளைவு பசுமை குகை, பறவையகம், இசை நீரூற்று போன்றவற்றை வடிவமைத்த கலைஞர்களுக்கு முதலமைச்சர் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்.

கலைஞர் நூற்றாண்டு பூங்காவின் சிறப்பம்சங்கள்

இயற்கை எழில்மிகு சூழலுடன் கூடிய இப்பூங்காவின் நுழைவாயில் அருகில் உயர்தர தோட்டக்கலை அருங்காட்சியகம், 500 மீட்டர் நீளமுடைய ஜிப்லைன், பார்வையாளர்களை படம்பிடிக்கும் கலைஞர்களின் கலைக்கூடம், தொடர் கொடி வளைவுப்பாதை, 120 அடி நீளமுடைய பனிமூட்டப் பாதை, 2600 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ள ஆர்க்கிட் குடில், அரிய வகை மற்றும் கண்கவர் பூச்செடிகளால் காட்சிப்படுத்த 16 மீட்டர் உயரமுடைய 10,000 சதுர அடிப் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி மாளிகை, அயல்நாட்டு பறவையகம், பறவைகளை கொண்ட 23 அலங்கார வளைவு பசுமை குகை, சிற்றுண்டியகம், சூரியகாந்தி கூழாங்கல் பாதை, மர வீடு, அருவி, இசை நீரூற்று, குழந்தைகள் விளையாடும் இடம், பசுமை நிழற்கூடாரம் பாரம்பரிய காய்கறித்தோட்டம் ஆகிய சிறப்பு அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.

இவற்றுடன் இப்பூங்காவில் உள்ள சுவர்களில் தீட்டப்பட்டுள்ள சுவரோவியங்கள் பூங்காவை மேலும் அழகுபடுத்துகின்றன. இப்பூங்காவினை பார்வையிட நுழைவுக்கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.100/-, சிறியவர்களுக்கு ரூ.50/- என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதர சிறப்பு அம்சங்களை பார்வையிட தனியே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜிப்லைனில் ஏறி சாகச பயணம் மேற்கொள்ள பெரியவர்களுக்கு ரூ.250/- சிறியவர்களுக்கு ரூ.200/-. குழந்தைகள் மடியில் அமர்ந்து செல்ல ரூ.150/- என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பறவையகத்தில் பல்வேறு வெளிநாட்டு பறவைகளை பார்வையிட மற்றும் உணவளித்து மகிழ்ந்திட பெரியவர்களுக்கு ரூ.150/- சிறியவர்களுக்கு ரூ.75/- மற்றும் மாலை நேரத்தில் இசை நீருற்றின் கண்கவர் நடனத்தை காண பெரியவர்களுக்கு ரூ.50/- சிறியவர்களுக்கு ரூ.50/-, கண்ணாடி மாளிகையில் அரிய வகை செடிகளை பார்வையிட பெரியவர்களுக்கு ரூ.50/- சிறியவர்களுக்கு ரூ.40/- என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் பங்குபெறும் ஒரு சவாரி விளையாட்டுக்கு ரூ.50/- எனவும், புகைப்பட கருவிகளுக்கு (Camera) ரூ.100/- எனவும், ஒளிப்பதிவு கருவிகளுக்கு (Video Camera) ரூ.5000/- எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நுழைவுக்கட்டணங்கள் மூன்று மணி நேரத்திற்கு மட்டுமே செல்லதக்கது. இப்பூங்காவிற்கான நுழைவுச் சீட்டினையும், நுழைவுகட்டணம் குறித்தான தகவல்களையும் https://tnhorticulture.in/kcpetickets என்ற இணையதளத்தின் வாயிலாக பெறலாம்.

மேலும், விரைவுத்தகவல் குறியீடு மூலமும் நுழைவுச்சீட்டினை பெற வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories