தமிழ்நாடு

“சமதர்ம இந்தியாவை உருவாக்க சீதாராம் யெச்சூரி வழியில் பணியாற்றுவோம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!

தோழர் சீதாராம் யெச்சூரி விட்டுச்சென்றுள்ள பணிகளை எல்லாம் நாம் எல்லோரும் தொடர்ந்து தொய்வில்லாமல் தொடர வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“சமதர்ம இந்தியாவை உருவாக்க சீதாராம் யெச்சூரி வழியில் பணியாற்றுவோம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
ashwin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை, காமராஜர் அரங்கில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் மறைந்த தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, சீத்தாராம் யெச்சூரிக்கு வீரவணக்கம் செலுத்தினார்.

பின்னர் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு :-

நம்முடைய இனிய தோழர் மதிப்பிற்குரிய சீதாராம் யெச்சூரி அவர்களின் மறைவு, என்னை அதிர்ச்சி அடைய வைத்தது. அவருடைய உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தபோதே, நான் அமெரிக்காவில் இருந்து தொடர்ப்பு கொண்டு தொடர்ந்து அவரைப்பற்றி விசாரித்துக்கொண்டே இருந்தேன். எப்படியாவது உடல்நலம் பெற்று அவர் திரும்பிவிடுவார் என்றுதான் நம்பிக் கொண்டிருந்தோம். ஆனால், நம் எல்லோரையும் வருத்தமடைய செய்யும் வகையில், அவர் நம்மை எல்லாம் விட்டு பிரிந்து விட்டார் என்ற சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு அவர்களும், கழகத்தின் துணை பொதுச் செயலாளர்கள் ஆ.ராசா அவர்களும், என்னுடைய தங்கை கனிமொழி கருணாநிதி அவர்களும், இளைஞரணிச் செயலாளர் தம்பி உதயநிதி அவர்களும் நேரடியாக சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள். நான் வெளிநாட்டில் இருந்து மறுநாள்தான் சென்னை வந்து சேர்ந்தேன். அதற்குப் பிறகு நம்முடைய பாலகிருஷ்ணன் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நான் அலுவலகத்திற்கு வருகிறேன்; அவருடைய திருவுருவப் படத்திற்கு மரியாதை செய்யவேண்டும் என்று சொல்லிவிட்டுச் சென்றேன். அதற்குப் பிறகு அவருக்கு அஞ்சலி செலுத்தினேன். 

“சமதர்ம இந்தியாவை உருவாக்க சீதாராம் யெச்சூரி வழியில் பணியாற்றுவோம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!

தோழர் யெச்சூரி அவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டும் சொந்தமல்ல! எங்களுக்கும் சொந்தம். அனைவருக்கும் சொந்தம். எல்லோருக்கும் சொந்தமானவராக அவர் விளங்கினார். வாழ்ந்தார். வாழ்ந்து காட்டியிருக்கிறார். எடுத்துக்காட்டியிருக்கிறார். வழிகாட்டியிருக்கிறார். இந்தியாவின் கருத்தியல் அடையாளங்களில் ஒருவராக இருக்கிறார் என்றால் நிச்சயமாக நாம் அவரைத்தான் குறிப்பிடவேண்டும். அவரின் இழப்பு என்பது ஒரு கருத்தியலுக்கான இழப்பாக அமைந்துவிட்டது!

இந்த நேரத்தில், தோழர் சீதாராம் யெச்சூரியைப் பற்றி நான் சொல்லவேண்டும் என்று சொன்னால், என்னுடைய நினைவிற்கு வருவது நம்முடைய கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த நேரத்தில், கோவையில் செம்மொழி மாநாடு நடத்தப்பட்டது. அந்த மாநாடுதான் இப்போது என்னுடைய நினைவுக்கு வருகிறது.

முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் நடத்திய அந்த செம்மொழி மாநாட்டில், தோழர் யெச்சூரி பேசுகிறபோது குறிப்பிட்டுச் சொன்னார். “தமிழ்நாட்டில் எனக்கு ஒரு பங்குண்டு” என்று தோழர் யெச்சூரி ஆற்றிய உரைதான் என்னுடைய நினைவிற்கு வருகிறது.

நம்முடைய தோழர்  பாலகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்ததுபோல, 2015-இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக தோழர் சீதாராம் யெச்சூரி தேர்ந்தெடுக்கப்பட்டார். “நம்முன் உள்ள முக்கிய பணி, இடதுசாரிகளையும், ஜனநாயகச் சக்திகளையும் ஒருங்கிணைப்பதுதான்" என்று பேசினார். தோழர் சீதாராம் யெச்சூரி ஆற்றிய அந்த உரைக்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பாராட்டினார்.

“சமதர்ம இந்தியாவை உருவாக்க சீதாராம் யெச்சூரி வழியில் பணியாற்றுவோம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!

முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் மறைவிற்கு பிறகு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், இரங்கற் கூட்ட நிகழ்ச்சிகளை ஒவ்வொரு மாவட்டமாக நடத்தினோம். அதில் ஒன்று திமுக நடத்திய ”தெற்கில் உதித்தெழுந்த சூரியன்” புகழஞ்சலிக் கூட்டம் ஒன்று. அந்த நிகழ்ச்சியில், அகில இந்தியத் தலைவர்கள் எல்லாம் பங்கேற்றார்கள். அந்த நிகழ்ச்சியின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தோழர் சீதாராம் யெச்சூரி அவர்கள் பங்கேற்று கலைஞர் அவர்களை பற்றி போற்றி புகழ்ந்து பேசினார்.

யெச்சூரி அவர்கள் பேசுகிறபோது குறிப்பிட்டார். சென்னையில் பிறந்த அவருக்கு தமிழ் பேசத் தெரியும் என்றாலும், மற்ற மாநிலங்களில் வந்திருக்கக்கூடிய தலைவர்களுக்கு புரியாது என்று ஆங்கிலத்தில் முழுமையாக பேசினார்.  

“சமூகநீதிக்காகவும், பெண்களுடைய சம உரிமைக்காகவும் போராடியவர் கலைஞர் என்று குறிப்பிட்டார். தமிழ்நாடு இல்லாமல் இந்தியா இல்லை; கலைஞர் இல்லாமல் தமிழ்நாடு இல்லை! என்று பேசினார். அதைத் தொடர்ந்து பேசும்போது அவரின் தமிழ் மட்டும் பிரபலம் அல்ல; அவரின் நகைச்சுவை உணர்வும் ரசிக்கத்தக்கது. மாக்சிம் கார்க்கியின் தாய் காவியத்தின் மூலம் மக்களுக்கு தொடர்ந்து முற்போக்குச் சிந்தனைகளை விதைத்தவர் கலைஞர்” என்று அந்த புகழஞ்சலிக் கூட்டத்தில் நம்முடைய சீதாராம் யெச்சூரி உணர்வுபூர்வமாக பேசியதை என்னால் இப்போதும் நிச்சயமாக என்னால் மறக்க முடியாது.

“சமதர்ம இந்தியாவை உருவாக்க சீதாராம் யெச்சூரி வழியில் பணியாற்றுவோம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
ashwin

அந்தளவுக்கு தலைவர் கலைஞர் அவர்கள் மீது அன்பு கொண்டவர்; பாசம் கொண்டவர். என் மீது கூட அளவு கடந்த பாசத்தை வைத்திருந்தார். கூட்டணிப்பற்றி பேசிக் கொண்டிருந்தபோது தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய தலைவர்கள் முரண்பிடித்தாலும் அவர்தான் சரி செய்து சிரித்த முகத்துடன் முடித்துக் கொடுப்பார். அது எல்லாம் பசுமையாக நினைவிற்கு வருகிறது. அவருடைய புன்சிரிப்பையும் நம்மால் என்றைக்கும் மறக்க முடியாது. எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் சிரித்த முகத்தோடுதான் பேசுவார். எந்தக் கருத்தையும் சொல்வதாக இருந்தாலும் அதையும் சிரித்த முகத்தோடுதான் சொல்வார். 

இந்தியாவின் எத்தனையோ பல பிரபலமான அரசியல் தலைவர்களை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் உருவாக்கியிருக்கிறது. அப்படி உருவாக்கி இருக்கக்கூடிய தலைவர்களுள் முக்கியமான தலைவர்தான் நம்முடைய யெச்சூரி அவர்கள். ஜே.என்.யு. முழுவதையும் இடதுசாரி கோட்டையாக மாற்றிய பெருமை யெச்சூரிக்குதான் உண்டு. அதனால்தான் அவரின் உடல் ஜே.என்.யு.-வில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இது அவரின் அறிவாற்றலுக்கு எடுத்துக்காட்டாக விளங்கிக் கொண்டிருக்கிறது. இதன் மூலமாக தோழர் யெச்சூரி அவர்கள் எப்போதும் இளைய சமுதாயத்துக்கான வழிகாட்டியாக வாழ்ந்திருக்கிறார் என்பதையும் என்பதை நம்மால் தெளிவாக உணர முடிகிறது.

இடதுசாரி கருத்தியலை இறுதி மூச்சு வரை கடைப்பிடித்த ஜனநாயகவாதியாக வாழ்ந்தார். தோழர் சீதாராம் யெச்சூரி அவர்கள், தேவகவுடா, குஜ்ரால் ஆகியோர் பிரதமர்களாக பதவி வகித்த காலத்தில் இடதுசாரிகளின் பங்களிப்புக்குப் பின்னணியில் இருந்து பெரும் பங்காற்றியவர்.

“சமதர்ம இந்தியாவை உருவாக்க சீதாராம் யெச்சூரி வழியில் பணியாற்றுவோம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!

1996-க்கு பிறகு ஒன்றியத்தில் கூட்டணி அரசுகள் உருவான காலத்தில், கூட்டணி அரசுகளை அமைப்பதில் இடதுசாரிகள் மிக மிக முக்கியப் பங்கு வகித்தார்கள். ஜனதா தளத்தின் தேவகவுடா பிரதமரானபோதும் - அதன்பிறகு ஐ.கே.குஜ்ரால் பிரதமரானபோதும் தி.மு.க. பங்கேற்ற ஐக்கிய முன்னணிக்கு இடதுசாரிகள் ஆதரவு அளித்தார்கள். அப்போது ஹர்கிஷன்சிங் சுர்ஜித்தின் 'படைத் தளபதியாக' செயல்பட்டவர்தான் நம்முடைய தோழர் சீதாராம் யெச்சூரி அவர்கள்.

அன்றைக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்களுடனான பேச்சுவார்த்தைகளில் சீதாராம் யெச்சூரியும் கலந்து கொண்டு தன்னுடைய ஆழமான கருத்துக்களை எல்லாம் பதிவு செய்திருக்கிறார். ஐக்கிய முன்னணி ஆட்சியின்போது, குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்கியதில் முக்கியமான காரணகர்த்தாவாக விளங்கியவர் நம்முடைய யெச்சூரி அவர்கள். 

இப்போது நாம் உருவாக்கியிருக்கும் இந்தியா கூட்டணி தோழர் பாலகிருஷ்ணன் குறிப்பிட்டு சொன்னார், பெருமையோடு சொன்னார். இக்கூட்டணி உருவாகியிருக்கிறது என்றால், அதற்கு முக்கிய காரணகர்தாக்களில் ஒருவராக விளங்கியவர் நம்முடைய தோழர் யெச்சூரி அவர்கள். சில கட்சிகளோடு முரண்பாடு இருக்கலாம். ஆனால், முரண்பாடுகள் இருந்தாலும் அதையும் தாண்டி அகில இந்திய அளவில் பா.ஜ.க.வை வீழ்த்த எல்லோரும் கைகோத்தாக வேண்டும் என்ற உறுதியோடு இருந்து அந்த பணியை வெற்றிகரமாக நடத்தி காட்டினார். இந்தியா கூட்டணி இந்தளவுக்கு வெற்றி பெற முக்கியமான காரணகர்த்தாவாக இருந்தார் தோழர் சீதாராம் யெச்சூரி அவர்கள். 

தோழர் சீதாராம் யெச்சூரி சிறந்த எழுத்தாளராகவும் விளங்கியிருக்கிறார். கட்சியின் வார இதழான பீப்பிள்ஸ் டெமாக்ரசியின் ஆசிரியராக பணியாற்றியிருக்கிறார். இந்துத்துவா மீதான அவரின் விமர்சனங்கள் புத்தகங்களில் வெளிப்பட்டிருக்கிறது. தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட `மோடி அரசாங்கம் - வகுப்புவாதத்தின் புதிய அலை’ என்ற நூல் முக்கியமான புத்தகம்! 

பிரதமர் மோடி ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி கட்டவிழ்த்துவிட்ட வகுப்புவாதத்தை அந்த நூலில் தோழர் யெச்சூரி அவர்கள் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார். 

“சமதர்ம இந்தியாவை உருவாக்க சீதாராம் யெச்சூரி வழியில் பணியாற்றுவோம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!

நாள்தோறும் தீக்கதிர் பத்திரிகை வருகிறது.  அந்த தீக்கதிர் பத்திரிகையில் டைரி போல் குறிப்புகளை தொடர்ந்து எழுதி வந்தார். காரணம் தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு அந்த அரசியல் தெரிந்துகொள்வதற்காகவும், புரிந்துகொள்வதற்காகவும் அதையும் அவர் தொடர்ந்து செய்து காட்டினார். 

தோழர் சீதாராம் யெச்சூரி விட்டுச்சென்றுள்ள பணிகளை எல்லாம் நாம் எல்லோரும் தொடர்ந்து தொய்வில்லாமல் தொடர வேண்டும்.

இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் தொடங்கி 100 ஆண்டுகள் கடந்திருக்கும் நிலையில், அதன் ஆளுமைகளாக வலம் வந்த தலைவர்களின் வரிசையில், தனக்கென தனி இடம் பெற்று புகழ்மிக்க தலைவராக வாழ்ந்து காட்டியிருக்கிறார் தோழர் சீதாராம் யெச்சூரி அவர்கள்.

கல்வியையும், அதன் மூலம் பயின்ற அரசியலையும் சமூக மாற்றத்துக்காக பயன்படுத்தியவர் தோழர் சீதாராம் யெச்சூரி. மதச்சார்பற்ற இந்தியாவை உருவாக்க வேண்டும், சகோதரத்துவ இந்தியாவை உருவாக்க வேண்டும், சமூக நீதி இந்தியாவை உருவாக்க வேண்டும். இதை எல்லாவற்றையும் உள்ளடக்கிய சமதர்ம இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதற்காக நாம் அனைவரும் அவர் வழியிலே நின்று பணியாற்ற வேண்டும் என்று உங்களையெல்லாம் கேட்டுக்கொண்டு, அவருடைய மறைவுக்கு என்னுடைய வீர வணக்கத்தை சொல்லி விடைபெறுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories