தமிழ்நாடு

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு : 15 முருகனடியார்களின் பெயரில் விருதுகள் !

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆகஸ்ட் 24 மற்றும் 25 தேதிகளில் பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு : 15 முருகனடியார்களின் பெயரில் விருதுகள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில், 27.02.2024 அன்று நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் பெருமையை உலகெங்கிலும் உள்ள முருகபக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்திட முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, 2024 ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் பழனியில் நடைபெறும் இம்மாநாட்டில் இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து முக்கிய பிரமுகர்கள், முருக பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

இம்மாநாட்டு வளாகத்தில் வேல் அரங்கம், அருள்தரும் அறுபடை முருகனின் மூலவர் காட்சிகள், பார்ப்பவர்கள் பரவசமடையும் மெய்நிகர் காட்சிகள், முப்பரிமாணப் பாடலரங்கம், சிறப்புப் புகைப்படக் கண்காட்சி, ஆய்வரங்கங்கள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு : 15 முருகனடியார்களின் பெயரில் விருதுகள் !

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் அமைச்சர் பெருமக்கள், மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்கள், தவத்திரு ஆதீன பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், வெளிநாடுகளிலிருந்து வருகை தந்துள்ள முக்கிய பிரமுகர்கள், முருகப் பக்தர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்று சிறப்பிக்கின்றனர். அதனை தொடர்ந்து மாநாட்டு விழா மலர் மற்றும் ஆய்வு மலர்கள் வெளியிடப்படுகின்றன.

மாநாட்டின் நிறைவு விழாவில் தமிழ்க்கடவுள் முருகனின் பெருமைகளை உலகறியும் வகையில் பறைசாற்றிய அடியார்கள், சமயப்பணி புரிந்தோர், சமய சொற்பொழிவாளர்கள், அதிகளவில் திருப்பணி மேற்கொண்டோர், ஆன்மிக மற்றும் இலக்கிய படைப்பாளர்களை சிறப்பிக்கும் வகையில் நக்கீரர், போகர், அருணகிரிநாதர், குமரகுருபரர், பாம்பன் சுவாமிகள், அண்ணாமலை ரெட்டியார், முருகம்மையார், பாலதேவராயர், திருமுருக கிருபானந்த வாரியார், தேனூர் வரகவி சொக்கலிங்கனார், கந்தபுராணக் கச்சியப்பர், பகழிக்கூத்தர், சிதம்பர சுவாமிகள், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், மாம்பழக் கவிச்சிங்க நாவலர் என 15 முருகனடியார்களின் பெயரில் விருதுகள் வழங்கி சிறப்பு செய்யப்பட உள்ளது.

மாநாட்டின் இரண்டு நாட்களும் ஆன்மிக சொற்பொழிவுகள், கருத்தரங்கம், இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்து சமய அறநிலையத்துறையின் வரலாற்றில் இம்மாநாடு முத்தாய்ப்பாக அமைவதோடு, தமிழ் கடவுளாம் முருக பெருமானின் பெருமைகளை மென்மேலும் பறைசாற்றி, உலகெங்கும் உள்ள முருக பக்தர்கள் பெருமையும், பேருவகையும் கொள்ளச் செய்யும் வகையில் இன்றும், நாளையும் சிறப்பாக நடைபெறும்.

banner

Related Stories

Related Stories