தமிழ்நாடு

OBC இடஒதுக்கீடு - சமூகநீதியை நிலைநாட்டும் திராவிட மாடல் : பெருமிதத்துடன் சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஒன்றிய அரசு சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்துவதை உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

OBC இடஒதுக்கீடு -  சமூகநீதியை நிலைநாட்டும் திராவிட மாடல் : பெருமிதத்துடன் சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மருத்துவப் படிப்புக்கான மத்திய தொகுப்பு இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க ஒன்றிய அரசு மறுப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து இதனை எதிர்த்து மாநிலங்களவை உறுப்பினராக உள்ள மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் மூலம் தி.மு.கதான் உச்சநீதிமன்றத்தில் ‘ரிட்’ மனு தாக்கல் செய்தது.

1993 ஆம் ஆண்டில் இடஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்றி, தமிழகத்தில் இருக்கும் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் தி.மு.க. வாதிட்டது.இந்த வழக்கில், உயர்நீதிமன்றத்தை நாடுமாறு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது தி.மு.க.

இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் ஒன்றிய, மாநில அரசுகள் மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைத்து இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து முடிவெடுக்கவேண்டும் என அறிவுறுத்தியது.

அதேநேரத்தில் இந்த இட ஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்தக்கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது, அதுதொடர்பான விசாரணையின்போது, ஓ.பி.சி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இந்த ஆண்டே இடஒதுக்கீடு வழங்குவதற்கான எந்த சாத்தியக்கூறுகளும் இல்லை என ஒன்றிய அரசு பதில் மனு அளித்தது.

இதனால் உயர்நீதிமன்றத்தில் தி.மு.க சார்பில் ஒன்றிய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஒன்றிய அரசு பதிலளிக்க 2 வார காலம் அவகாசம் வழங்கினர். அதனைத் தொடர்ந்து ஓ.பி.சி இட ஒதுக்கீட்டை இந்தாண்டே வழங்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து கடந்த மூன்று ஆண்டுகளாக மருத்துவ படிப்பில் ஓ.பி.சி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த 3 கல்வி ஆண்டுகளில் 15,066 மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் OBC மாணவர்களுக்குக் கிடைத்துள்ள செய்தியைப் பகிர்கையில் எனது நெஞ்சில் பெருமை பொங்குகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில்,”தி.மு.க. மேற்கொண்ட சமரசமற்ற சட்டப் போராட்டத்தினால், கடந்த 3 கல்வி ஆண்டுகளில் 15,066 மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்குக் கிடைத்துள்ள செய்தியைப் பகிர்கையில் எனது நெஞ்சில் பெருமை பொங்குகிறது.

மேலும், இந்தச் சாதனையின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டி, இந்தியாவெங்கும் OBC இடஒதுக்கீடு குறித்த பல பயனுள்ள விவாதங்களுக்கு வழிவகுத்ததில் அகில இந்திய சமூகநீதிக் கூட்டமைப்பு பெரும் பங்காற்றியுள்ளது.

நாம் செய்ய வேண்டிய பணிகள் பல உள்ளன என்றாலும், உடனடியாகச் செய்தாக வேண்டியது ஒன்றிய அரசு சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்துவதை உறுதிசெய்வதுதான். அப்போதுதான் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் விகிதத்தை அறிந்து, சமூகநீதியை நிலைநாட்டும் வகையில் நமது பங்கைப் பெற முடியும். இதனைச் சாதிக்க ஒன்றிணைந்து பணியாற்றிடுவோம்.” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories