தமிழ்நாடு

தங்கு தடையற்ற போக்குவரத்துத் திட்டம் : அசத்தலான அறிவிப்பு வெளியிட்ட அமைச்சர் எ.வ.வேலு!

இன்றைய பேரவையில் நெடுஞ்சாலைகள் துறை மீதான விவாதத்தில் அமைச்சர் எ.வ.வேலு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

தங்கு தடையற்ற போக்குவரத்துத் திட்டம் :  அசத்தலான அறிவிப்பு வெளியிட்ட அமைச்சர் எ.வ.வேலு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இன்று நெடுஞ்சாலைகள் துறை மீதான விவாதத்தில் அமைச்சர் எ.வ.வேலு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதன் விவரம் வருமாறு:-

1.பாரம்பரிய கட்டடங்களை புனரமைக்கும் பணிகளை செம்மைப் படுத்தும் வகையில், சென்னையில் மரபு கட்டடங்கள் வட்ட அலுவலகம் ஏற்படுத்தப்படும்.

2.ஆறு பாரம்பரியக் கட்டடங்கள் ரூபாய் 43 கோடியே 34 இலட்சம் மதிப்பீட்டில், மறு சீரமைத்துப் புனரமைக்கப்படும்.

3.தரக்கட்டுப்பாடு உப கோட்டங்களுக்கு ஆய்வகங்கள் உருவாக்கப்படும்.

4.உளுந்தூர்பேட்டையில் புதியதாக ஆய்வு மாளிகை கட்டப்படும்.

5.முதலமைச்சரின்‌ பொன்னான திட்டங்களில்‌ ஒன்றான "உங்கள்‌ தொகுதியில்‌ முதலமைச்சர்‌” திட்டத்தில்‌ மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்களிடம்‌ பெறப்பட்ட கோரிக்கைகளைச்‌ செயல்படுத்த இரண்டாம்‌ கட்டமாக ரூ.1,055 கோடி மதிப்பீட்டில்‌ பணிகள்‌ செயலாக்கத்திற்கு எடுத்துக்‌ கொள்ளப்படும்‌.

6.நெடுஞ்சாலைத் துறையின்‌ செயல்பாட்டை மேலும்‌ மேம்படுத்த தற்போது உள்ள சில அலகுகளை மாற்றியமைத்து பணிகளைப்‌ பகிர்ந்து துறையின்‌ செயல்‌ திறனை மேம்படுத்த, நெடுஞ்சாலைத்துறை மறு சீரமைக்கப்படும்‌.

7. நெடுஞ்சாலைத் துறையில்‌ பாலங்களை ஆய்வு செய்து, அதன்‌ உறுதித்‌ தன்மையைக்‌ கண்டறிந்து பழுதுகள்‌ ஏற்பட்டிருப்பின்‌ அதனை உடனுக்குடன்‌ சீரமைக்க நிபுணத்துவம்‌ வாய்ந்த நெடுஞ்சாலைத் துறைப் பொறியாளர்களைக்‌ கொண்ட "பாலங்கள்‌ சிறப்பு ஆய்வு அலகு" உருவாக்கப்படும்‌.

8. முதலமைச்சர்‌ சாலை மேம்பாட்டுத்‌ திட்டத்தின்‌ (CMRDP) கீழ்‌ நடப்பாண்டில்‌, 200கி.மீ. நீளச்‌ சாலைகளை நான்கு வழித்தடமாகவும்‌, 550கி.மீ. நீளச்‌ சாலைகளை இருவழித்தடமாகவும்‌ அகலப்படுத்தி மேம்படுத்தப்படும்‌.

9"அனைத்து காலநிலைகளிலும்‌ தங்கு தடையற்ற போக்குவரத்து" என்ற முதலமைச்சரின்‌ முத்தாய்ப்பான திட்டத்தின்‌கீழ்‌, 50 தரைப்பாலங்கள்‌ உயர்மட்டப்‌ பாலங்களாக ரூ.200 கோடி மதிப்பீட்டில்‌ கட்டப்படும்‌.

10.சாலைப்‌ பாதுகாப்பை மேம்படுத்த, சாலைச்‌ சந்திப்பு மேம்பாட்டுப்‌ பணிகள்‌ ரூபாய்‌ 300 கோடி மதிப்பீட்டில்‌ மேற்கொள்ளப்படும்‌.

11. தென்காசி, ஆற்காடு, போடிநாயக்கனூர்‌, திருநெல்வேலி ஆகிய 4 நகரங்களுக்குப்‌ புறவழிச்‌ சாலையும்,‌ இராஜபாளையம்‌ புதிய பேருந்து நிலையம்‌ முதல்‌ அரசு மருத்துவமனை வரை புதிய இணைப்புச்‌ சாலையும்‌ ரூ.321 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்‌.

12.விரிவான திட்ட அறிக்கை பணிகள்‌ மயிலாடுதுறை மற்றும்‌ கடலூர்‌ மாவட்டங்களை இணைக்கும்‌ வகையில்‌ மணல்மேடு முதல்‌ சேத்தியாத்தோப்பு வரை புதிய சாலை அமைக்கவும்‌, மதுரை மாநகரில்‌ சிட்டம்பட்டி முதல்‌ தென்காசி சாலையில்‌ உள்ள ஆலம்பட்டி வரை புதிய வெளிவட்டச்‌ சாலை அமைக்கவும்‌, விரிவான திட்ட அறிக்கை ரூ.59 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ தயாரிக்கப்படும்‌.

13. சென்னை பெருநகர மாநகரப்‌ பகுதியில்‌, வேளச்சேரி இரயில்‌ நிலைய பேருந்து நிறுத்தம்‌, சென்னை உள்வட்டச்‌ சாலையில்‌, கோயம்பேடு சந்திப்பு அருகே என 2 இடங்களில்‌ நகரும்‌ படிக்கட்டுகளுடன்‌கூடிய நடை மேம்பாலம்‌ அமைத்தல்‌ மற்றும்‌ பள்ளிக்கரனை சதுப்பு நிலப்‌ பகுதியை பாதுகாக்கும்‌ நோக்கில்‌ காமாட்சி மருத்துவமனை முதல்‌ துரைப்பாக்கம்‌ வரை, உயர்மட்ட சாலை மேம்பாலம்‌ அமைக்கவும்‌, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும்‌ பணிகள்‌ ரூ.36 கோடி மதிப்பீட்டில்‌ மேற்கொள்ளப்படும்‌.

14.தொழிற்சாலைகளை இணைக்கும்‌ வகையில்‌ உள்ள சாலைகளை மேம்படுத்த ரூ.200 கோடி மதிப்பீட்டில்‌ பணிகள்‌ செயலாக்கப்படும்‌.

15.நெடுஞ்சாலைத்துறையில்‌ நவீன அறிவியல்‌ மற்றும்‌ தொழில்‌ நுட்பத்தைப்‌ பயன்படுத்தி மலைப்பகுதிகளில்‌ நிலச்சரிவுகள்‌ ஏற்படுவதைத்‌ தடுக்க ரூ.25 கோடி மதிப்பீட்டில்‌ பணிகள்‌ மேற்கொள்ளப்படும்‌.

16. ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியச்‌ சாலைகளில்‌, 600 கி.மீ. சாலைகள்‌, ரூ.680 கோடி மதிப்பீட்டில்‌ இதர மாவட்டச்‌ சாலைகளாகத்‌ தரம்‌ உயர்த்தப்படும்‌.

banner

Related Stories

Related Stories