சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான கோரமண்டல் கெமிக்கல் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலைக்குக் கடலில் சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் பதிக்கப்பட்டுள்ள குழாய் மூலம் கப்பலில் கொண்டு வரும் அம்மோனியா கேஸ் அனுப்பப்படுகிறது. அந்த அமோனியம் கேஸ் வாய்வு தொழிற்சாலையில் உள்ள 15,000 டன் தொட்டியில் சேமித்து வைக்கப்பட்டு கெமிக்கல் உரம் தயாரிக்கப்படுகிறது.
இந்நிலையில் கடலில் உள்ள குழாயில் திடீர் என கசிவு ஏற்பட்டு சுமார் 20 நிமிடம் அமோனியா கேஸ் வாய்வு கடலில் பரவி காற்றின் வேகத்தால் அருகில் உள்ள பெரிய குப்பம், சின்ன குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் அமோனியா கேஸ் பரவியது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு கண் எரிச்சல் மூச்சுத் திணறல் ஏற்பட்டது சில பேர் மயக்கம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து திருவெற்றியூரில் உள்ள ஆகாஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "எண்ணூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் நேற்று இரவு ஏற்பட்ட வாயு கசிவு காரணத்தால் அப்பகுதியில் உள்ள மக்களுக்குக் கண் எரிச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் மீட்கப்பட்டு உடனே மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஆகாஷ் மருத்துவமனையில் 36 பேரும், ஸ்டான்லி மருத்துவமனையில் 6 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் நலமுடன் இருக்கிறார்கள். மேலும் 6 பேர் கொண்ட மருத்துவக்குழு தொழிற்சாலை அருகே உள்ள பகுதியில் பரிசோதனை செய்து வருகிறார்கள். மருத்துவமனையில் உள்ளவர்கள் இப்போது கூட வீடு திரும்பலாம். அதேபோல், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது" என தெரிவித்துள்ளார்.