தமிழ்நாடு

எல்.பலராமன் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி!

மறைந்த வடசென்னை மாவட்டக் கழக முன்னாள் செயலாளர் எல்.பலராமன் அவர்களின் திருவுருவப் படத்தை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துப் புகழஞ்சலி செலுத்தினார்.

எல்.பலராமன் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில் - (மறைந்த) வடசென்னை மாவட்டக் கழக முன்னாள் செயலாளர் எல்.பலராமன் அவர்களின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்துப் புகழஞ்சலி செலுத்தினார். அப்போது எல்.பலராமன் குடும்பத்தினர் உடனிருந்தனர்.

இந்நிகழ்ச்சியில், கழகப் பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் இ.பெரியசாமி, திருமதி. சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ், கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., நாடாளுமன்ற கழகக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, நாடாளுமன்ற கழகக் குழுத் துணைத் தலைவர் கனிமொழி, தயாநிதி மாறன் எம்.பி., கலாநிதி வீராசாமி எம்.பி., மாவட்டச் செயலாளர்கள் எஸ்.சுதர்சனம் எம்.எல்.ஏ., பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ., மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ., துறைமுகம் கிழக்குப் பகுதி பொருளாளர் ஜெயராமன், பெரம்பூர் தெற்குப் பகுதி செயலாளர் ஜெயராமன், எல்.பலராமன் அவர்களின் குடும்பத்தின் சார்பில் அவரது மகன் வெங்கடேஷ் மற்றும் வடசென்னை மாவட்டக் கழக நிர்வாகிகள் பங்கேற்றுப் புகழஞ்சலி செலுத்தி வரும் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இரங்கல் தீர்மானங்கள் பின்வருமாறு:

எல்.பலராமன் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி!
எல்.பலராமன்

இரங்கல் தீர்மானங்கள்

போற்றுதற்குரிய போராளி எல்.பலராமன் அவர்களுக்கு இரங்கல்!

வடசென்னை மாவட்டக் கழக முன்னாள் செயலாளரும், கழக தணிக்கைக்குழு உறுப்பினருமான எல்.பலராமன் அவர்கள், கழகத்தின் கடின உழைப்பாளி. கட்சிப் பணியோ, தேர்தல் பணியோ, மக்கள் பணியோ அனைத்திலும் விறுவிறுப்புடன் களத்தில் நிற்கும் அவர், கழகத்தின் போற்றுதற்குரிய போராளி.

‘ஒரு இயக்கத்தின் தலைவரையும், பொதுச்செயலாளரையும்’ தேர்தலில் வெற்றி பெறுவதற்குப் பணியாற்றிய பெருமைக்குரிய எல். பலராமன் அவர்களின் மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

சிறுபான்மையினர் நலனுக்காகச் சிறப்பாகப் போராடிய கு.லாரன்ஸ் அவர்களுக்கு இரங்கல்!

கழக சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவு துணைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கு.லாரன்ஸ் அவர்கள், சிறுபான்மையின மக்களின் நலனுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர். அவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதில் ஆர்வமும், முனைப்பும் காட்டியவர் மட்டுமின்றி- அதற்காகப் போராடவும் தயங்காதவர்.

கு.லாரன்ஸ் அவர்களின் மறைவிற்கு இக்கூட்டம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

செந்தமிழ்த் தென்றல் மு.பி.பா. அவர்களுக்கு இரங்கல்!

‘தென் பாண்டித் தமிழகத்தின் செந்தமிழ்த் தென்றலாக’ நம்மிடயே உலாவியவர்; காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி முன்னாள் முதல்வர் - பேராசிரியர் மு.பி. பாலசுப்பிரமணியம் அவர்கள்.

பல நாடுகளுக்குச் சென்று அங்கு தமிழ் இலக்கியச் சொற்பொழிவுகளிலும், உலகத் தமிழ் மாநாட்டிலும் பங்கேற்று, தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவச்செய்த பச்சையப்பன் கல்லூரி முன்னாள் முதல்வர் - பேராசிரியர் மு.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் மறைவிற்கு இக்கூட்டம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

எல்.பலராமன் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி!

மிசாவில் கழகத்தினருக்கு அரிய பணியாற்றிய சனகன் அவர்களுக்கு இரங்கல்!

சென்னை சட்டக் கல்லூரி முன்னாள் பேராசிரியர் அ.ர.சனகன் அவர்கள் நீதிக்கட்சி காலம் முதல், திராவிட இயக்கச் சிந்தனை கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்.

‘மிசா’வில் சென்னை மத்திய சிறையிலிருந்த கழகத்தினருக்கு உதவியவர். சர்க்காரியா கமிஷன் விசாரணையில் கழகத்தின் அன்றைய சட்டத்துறைத் தலைவர் மறைந்த நா.கணபதி, என்.வி.என்.சோமு ஆகியோருடன் இணைந்து பணியாற்றியவருமான அ.ர.சனகன் அவர்களின் மறைவிற்கு இக்கூட்டம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

புரட்சிக் கவிஞரின் ஒரே மகன்- மன்னர் மன்னன் அவர்களுக்கு இரங்கல்!

‘புரட்சிக் கவிஞர்' பாவேந்தர் பாரதிதாசனார் அவர்களின் ஒரே மகனும், இந்திய விடுதலைப் போராட்டத் தியாகியும், மொழிப் போராட்டத்தில் பங்கேற்றுச் சிறை சென்றவருமான முதுபெரும் தமிழறிஞர் கலைமாமணி மன்னர் மன்னன் அவர்கள், தமிழக அரசின் திரு.வி.க. விருது, கலைமாமணி விருது, புதுச்சேரி அரசின் தமிழ்மாமணி, கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டவர்.

சிறந்த எழுத்தாளர், கவிஞர் - அனைவரையும் கவர்ந்த மிகச் சிறந்த பேச்சாளரான மன்னர் மன்னன் அவர்களின் மறைவிற்கு இந்தக் கூட்டம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

வழக்கறிஞர்களில் ‘மரகதமணி’- வி.டி. கோபாலன் அவர்களுக்கு இரங்கல்!

வழக்கறிஞர் சமுதாயத்தில் ‘மரகதமணி’ போல் ஒளி வீசிக் கொண்டிருந்த முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலும், மூத்த வழக்கறிஞருமான வி.டி.கோபாலன் அவர்கள், முத்தமிழறிஞர் கலைருக்கு மிக நெருக்கமானவர். திராவிட முன்னேற்றக் கழகம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் பங்கேற்றிருந்த போது- கலைஞர் அவர்களாலும் - கலைஞரின் மனச்சாட்சியாகத் திகழ்ந்த மறைந்த முரசொலி மாறன் அவர்களாலும் பரிந்துரைக்கப்பட்டு- அவரது திறமைக்காக மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டவரான வி.டி. கோபாலன் அவர்களின் மறைவிற்கு இந்தக் கூட்டம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

‘தொகுதி மக்களின் குரல்’ குழந்தை தமிழரசன் அவர்களுக்கு இரங்கல்!

விருத்தாசலம் முன்னாள் கழகச் சட்டமன்ற உறுப்பினரும், கழக தீர்மானக்குழுச் செயலாளருமான குழந்தை தமிழரசன் அவர்கள், கழக வளர்ச்சிக்காக அரும் பாடுபட்டவர். சட்டமன்ற உறுப்பினராக தொகுதி மக்களின் குரலாகவும், அவர்களுக்கான நலத் திட்டங்களைப் நிறைவேற்றிக் கொடுத்த பொதுநல ஊழியராகவும் விளங்கியவர்.

கழகத்தின் தீரமிகு கொள்கை வீரர்களில் ஒருவரான குழந்தை தமிழரசன் அவர்களின் மறைவிற்கு இக்கூட்டம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

எல்.பலராமன் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி!
ASHWIN_KUMAR

ஊக்கம் நிறைந்த கழக நிர்வாகி ஜி. சுகுமாறன் அவர்களுக்கு இரங்கல்!

கழகம் அறிவித்து நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் பங்கேற்று - கைதாகி - சிறையும் சென்றவர், காஞ்சிபுரம் தெற்கு மாவட்டக் கழக அவைத் தலைவர் ஜி.சுகுமாறன் அவர்கள். அப்படிப்பட்ட உணர்வுமிக்க கழக நிர்வாகியான ஜி.சுகுமாறன் அவர்களின் மறைவிற்கு இந்தக் கூட்டம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

என்.எல்.சி. பாய்லர் வெடித்த விபத்தில் இறந்த 14 தொழிலாளர்களுக்கு இரங்கல்!

பாதுகாப்பற்ற சூழலில் பணியாளர்களை ஈடுபடுத்தியதன் விளைவாக, நெய்வேலி என்.எல்.சி. இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் மரணமடைந்த 14 தொழிலாளர்களுக்கு இந்தக் கூட்டம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

சாத்தான்குளம் காவல் நிலையத் தாக்குதலில் மரணித்த தந்தை, மகனுக்கு இரங்கல்!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் வைத்து மனிதாபிமானமற்ற முறையில் - காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட ஜெயராஜ் - அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரின் மரணத்திற்கு இந்தக் கூட்டம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

banner

Related Stories

Related Stories