அரசியல்

“ஆளுநர்கள் - 100 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்கின்றனர்!” : பேரவைத் தலைவர் அப்பாவு கண்டனம்!

மக்களாட்சியை நிலைநாட்டுவதும், மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற அமைப்புகளின் தலையாய கடமையாகும்.

“ஆளுநர்கள் - 100 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்கின்றனர்!” : பேரவைத் தலைவர் அப்பாவு கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

இந்தியாவின் தலைநகரான புதுதில்லியில் நடைபெற்ற காமன்வெல்த் நாடாளுமன்றக் கூட்டமைப்பின் இந்திய பிராந்தியத்தின் 10வது கூட்டத்தில் தமிழ்நாடு பேரவைத் தலைவர் அப்பாவு உரையாற்றினார்.

அவர் பேசுகையில், “இந்திய மக்களாட்சியில் முக்கிய பங்காற்றும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் தோற்றம், 1921 ஆம் ஆண்டில் மெட்ராஸ் பிரசிடென்சியில் மெட்ராஸ் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் என்ற பெயரில் அமைக்கப்பட்டது.

இது, தற்போதைய தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மாநிலங்கள் மற்றும் ஒடிசா மாநிலத்தின் சில பகுதிகளை உள்ளடக்கியது. அந்த காலத்தில், இந்தியாவில் சட்டங்களை இயற்றக்கூடிய சட்டமன்ற அமைப்புகள் சென்னை, கொல்கத்தா மற்றும் மும்பையில் மட்டுமே செயல்பட்டு வந்தன.

இங்கிலாந்து நாடாளுமன்றத்தினை மக்களாட்சியின் தொட்டில் என்று அழைப்பர். தமிழ்நாடு சட்டப்பேரவையின் மாண்பை பறைசாற்றும் தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவரின் கலைநயமிக்க நாற்காலியை, 1922 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் தேதி நடைபெற்ற ஒரு சிறப்பு விழாவில், சென்னை மாகாண ஆளுநர் வெலிங்டன் பிரபு மற்றும் அவரது மனைவி லேடி வில்லிங்டன் ஆகியோரால் அப்போதைய மெட்ராஸ் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் தலைவருக்கு பரிசாக வழங்கப்பட்டது. அந்த நாற்காலி ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக பழமையானது என்றாலும், அது அதன் பொலிவை இழக்காமல், துடிப்பான மக்களாட்சியின் அடையாளமாக தற்போதும் திகழ்கிறது.

இந்த வரலாற்று சிறப்புமிக்க நாற்காலியில் அமர்ந்து சபையை நடத்தும் மிகப்பெரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. இது என்னைப் போன்ற சாதாரண மனிதனுக்கு மக்களாட்சியில் கிடைத்த மாபெரும் பரிசாகும். இந்த வாய்ப்பினை எனக்கு வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த நூற்றாண்டில், இந்தியாவின் வளர்ச்சிக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை, பல முன்னோடி சட்டங்கள் மற்றும் தீர்மானங்களை நிறைவேற்றியது. அப்போதைய மெட்ராஸ் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில் 01.04.1921 அன்று இந்தியாவில் பெண்களுக்கு முதல் முறையாக வாக்களிக்கும் உரிமையை வழங்கும் ஒரு வரலாற்றுச் சட்டத்தை நிறைவேற்றியது.

“ஆளுநர்கள் - 100 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்கின்றனர்!” : பேரவைத் தலைவர் அப்பாவு கண்டனம்!

இந்திய சட்டமன்ற வரலாற்றில் இடஒதுக்கீடு குறித்த சட்டத்தை இயற்றிய முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பு இதுவாகும், அதுவே இந்தியாவில் நிலையான கொள்கையாக மாறியுள்ளது. மக்களாட்சியை நிலைநாட்டுவதும், மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற அமைப்புகளின் தலையாய கடமையாகும். சட்டங்களை இயற்றுதல், கொள்கைகளை உருவாக்குதல், வருவாய் ஈட்டுதல், வறுமையை ஒழித்தல், நிர்வாகத்தை மேற்பார்வை செய்தல், எதிர்கால சந்ததியினருக்கான நல்ல திட்டங்களை உருவாக்குதல் ஆகிய மிக முக்கியமான வேலைகளை சட்டமன்றங்கள்/நாடாளுமன்றம் செய்கின்றன.

பேரவை தலைவரின் தலையாய பணி என்பது மக்களின் நலனை அவர்களின் பிரதிநிதிகள், அதாவது சட்டமன்ற உறுப்பினர்கள், மூலம் நிறைவேற்றுவதை உறுதி செய்வதாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 105 மற்றும் 194 ஆகியவை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் அதிகாரங்கள், சிறப்பு உரிமைகள், சலுகைகள் மற்றும் சட்ட ரீதியான விலக்குகளை வழங்குகின்றன.

இவ்வாறு அரசியலமைப்பால் வழங்கப்பட்ட உரிமைகள் மற்றும் சலுகைகளை பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால், சமீபகால நிகழ்வுகள் மக்களாட்சிக்கு பெரும் சவால்களை ஏற்படுத்தியுள்ளன. மாநில சட்டமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களால், சில சமயங்களில் ஒருமனதாக, நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவுகள் பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியவில்லை.

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சில மசோதாக்கள், காரணமின்றி, பல ஆண்டுகளாக ஆளுநர் அலுவலகத்தில் முடங்கிக் கிடப்பதால், மக்கள் பிரதிநிதிகளான சட்டமன்ற உறுப்பினர்கள், மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற முடியாமல், அவர்களின் அதிருப்திக்கு ஆளாகின்றனர். பேரவையை அவமதிப்பது என்பது அந்த சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுத்த மக்களை அவமதிப்பதாகும்.

ஒட்டுமொத்த எதிர்க்கட்சி உறுப்பினர்களும் வெளியேற்றப்பட்ட சூழ்நிலையிலும், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஓரிரு மணி நேரத்தில் தனது ஒப்புதலை வழங்குகிறார் என்பதை நான் இந்த நேரத்தில் குறிப்பிட விரும்புகிறேன்.

“ஆளுநர்கள் - 100 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்கின்றனர்!” : பேரவைத் தலைவர் அப்பாவு கண்டனம்!

ஆனால், சில மாநிலங்களில், அம்மாநில சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு கூட அம்மாநில ஆளுநர்கள் ஒப்புதல் அளிப்பதில்லை.

இது குறித்து, மாநில ஆளுநர்கள் குடியரசுத் தலைவரைப் பின்பற்றி மசோதாக்களுக்கு விரைவில் ஒப்புதல் அளித்து, அதன் மூலம் அரசியலமைப்பு விதிகளை நிலைநிறுத்தும் வகையில் ஒரு அமைப்புமுறையை உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களின் தலையீட்டால் ஏற்படும் குழப்பங்களை தவிர்க்க முடியும்.

தமிழ்நாட்டு மக்களின் விருப்பங்களையும், நலனையும் நேரடியாகப் பாதித்த ஒரு செய்தியை இங்கே பதிவு செய்வது மிகுந்த வேதனையாக உள்ளது. அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவுடன் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் எந்தக் காரணமும் கூறாமல் நிறுத்தி வைப்பதாக தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றத்திடம் இச்சிக்கல் குறித்து எடுத்துச் சென்ற பின்னர், தமிழ்நாடு சட்டமன்றத்தில் அம்மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டன. அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்குக் கட்டுப்பட்ட ஆளுநர், மசோதாக்களுக்கு தனது ஒப்புதலை வழங்குவதற்கு பதிலாக குடியரசுத் தலைவரின் அலுவலகத்திற்கு அனுப்பிவைத்தார்.

குடியரசுத் தலைவர் இந்த மசோதாக்களில் பலவற்றிற்கு எந்தக் காரணமும் கூறாமல் தனது ஒப்புதலை நிறுத்தி வைத்தார். மேலும், முதன்மைச் சட்டங்கள் ஏற்கனவே ஆளுநரால் ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில், அந்த மாநிலச் சட்டங்களின் திருத்த மசோதாக்களுக்கு ஆளுநரின் ஒப்புதல் மட்டுமே போதும், அவற்றை குடியரசுத் தலைவருக்கு அனுப்பத் தேவையில்லை.

இவ்வாறு மசோதாக்களை நிறுத்தி வைப்பதன் மூலம், தமிழ்நாடு மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் நிறுத்தி வைப்பதற்கான காரணமும் கூறப்படாததால், சீரமைப்பு நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலை உள்ளது.

மேலும், நீட் தேர்வு மசோதா ஆளுநர் அலுவலகத்துக்கும், குடியரசுத் தலைவர் அலுவலகத்துக்கும் இடையே இழுத்தடிக்கப்படுவதால் லட்சக்கணக்கான தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்திற்கு பெரும் சவாலாக உள்ளது. இத்தகைய சூழ்நிலையைத் தீர்க்க, சிம்லா மற்றும் மும்பையில் நடைபெற்ற அனைத்திந்திய பேரவைத் தலைவர்கள் மாநாட்டில் நான் தெரிவித்த கருத்தை மீண்டும் இங்கு வலியுறுத்துகிறேன்.

“ஆளுநர்கள் - 100 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்கின்றனர்!” : பேரவைத் தலைவர் அப்பாவு கண்டனம்!

குறிப்பிட்ட காலத்திற்குள் மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க காலக்கெடு விதிக்க வேண்டும். தங்களுக்கு இல்லாத அதிகாரங்கள் இருப்பதாகக் கருதி மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களுக்கு எதிராக ஆளுநர்கள் செயல்படும் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

நவீன இந்தியாவை உருவாக்க ஒட்டுமொத்த தேசமும் கடுமையாகப் பாடுபட்டு முன்னேறி வரும் நிலையில், ஆளுநர்கள் 100 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்வது மிகுந்த வேதனை அளிக்கிறது.

மற்றொரு முக்கியமான செய்தி, பொதுப் பட்டியலில் உள்ள பொருள்கள் பற்றியது ஆகும். ஒன்றிய அரசு கல்வி, சுகாதாரம் போன்ற பொது பட்டியலில் உள்ள பொருள்கள் குறித்து மாநில மக்களின் உணர்வுகளைப் புறக்கணித்து சட்டங்களை இயற்றுகிறது. அதன் விளைவாக, மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

மேலும், தங்கள் மாற்றுக்கருத்துகளையும், கோபத்தையும் மாநில அரசுகளிடம் மட்டுமே காட்டுகிறார்கள். ஏனெனில் அவர்களுடன் நேரடியாக தொடர்பிலிருப்பது மாநில அரசுகள் மட்டுமே. பொதுப் பட்டியலில் உள்ள விஷயங்களில் ஒன்றிய அரசு குறிப்பிட்ட அளவில் மட்டுமே தலையிட வேண்டும்.

மேலும், அந்தந்த மாநில மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கும் வகையில் மாநில சட்டசபைகள் நிறைவேற்றும் மசோதாக்கள் மற்றும் தீர்மானங்களை ஒன்றிய அரசு மதிக்கும் வகையில் சீர்திருத்தங்களை கொண்டு வரப்பட வேண்டும்.

தமிழ்நாடு சட்டப்பேரவை நடவடிக்கைகளில் முதல் மணிநேரம், அதாவது கேள்வி நேரம், அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றும் மிக முக்கியமான அலுவல் ஆகும். பல துணைக் கேள்விகளை அனுமதிப்பதன் மூலம் அனைத்து உறுப்பினர்களுக்கும் தங்களின் கோரிக்கைகளை கூற வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

நேரமில்லா நேரத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் போன்ற சட்டமன்ற நடைமுறைகள் மூலம், தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பங்கேற்பு வெகுவாக அதிகரித்துள்ளது. தமிழக சட்டப் பேரவையில் ஆளுங்கட்சி உறுப்பினர்களை விட எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கே அதிக வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களும் இந்த நடைமுறைகள் தொடர வேண்டும் என விரும்புகிறார், ஏனெனில், எதிர்க்கட்சிகளின் கருத்துக்களுக்கு செவிசாய்த்தால் மட்டுமே மக்களாட்சி செழிக்கும் எனக் கருதுகிறார். நானும் இந்த நடைமுறை தொடர வேண்டும் என்று விரும்புகிறேன். மேலும், மற்ற மாநில சட்டமன்றங்களும், நாடாளுமன்றமும் இந்த நடைமுறையை பின்பற்றும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.

banner

Related Stories

Related Stories