அரசியல்

“வறுமையில் வாடும் கோடிக்கணக்கான மக்களின் வயிற்றிலடித்துள்ளது பாஜக” - இடதுசாரி கட்சிகள் கூட்டாக கண்டனம் !

“வறுமையில் வாடும் கோடிக்கணக்கான மக்களின் வயிற்றிலடித்துள்ளது பாஜக” - இடதுசாரி கட்சிகள் கூட்டாக கண்டனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாடாளுமன்ற தேர்தல் முடிந்து 2024 - 2025-க்கான பட்ஜெட் கடந்த ஜூலை 23-ம் தேதி ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்கள், பாஜக கூட்டணியான பீகார், ஆந்திரா ஆகிய மாநிலங்களே இடம்பெற்றது. மேலும் அந்த மாநிலங்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது.

தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், டெல்லி போன்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் பெயர்கள் இடம்பெறவே இல்லை. வெள்ள பாதிப்பு நிவாரணம், மெட்ரோ 2-ம் கட்ட பணிகளுக்கு நிதி என தமிழ்நாடு எம்.பி-க்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், சுத்தமாக ஓரங்கட்டியுள்ளது ஒன்றிய பாஜக அரசு. பாஜக அரசின் இந்த பாரபட்சமான செயலுக்கு கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில், தற்போது இடசாரிகள் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.

“வறுமையில் வாடும் கோடிக்கணக்கான மக்களின் வயிற்றிலடித்துள்ளது பாஜக” - இடதுசாரி கட்சிகள் கூட்டாக கண்டனம் !

இதுகுறித்து இடதுசாரி கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) ஆகிய கட்சிகளின் சார்பில் வெளியான கூட்டறிக்கை வருமாறு :

"நாடாளுமன்றத்தில் மோடி அரசு சமர்ப்பித்துள்ள நிதிநிலை அறிக்கையில் தனது ஆட்சிக்கு முட்டுக் கொடுக்கும் கட்சிகளை மட்டும் திருப்திப்படுத்தி, தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை வஞ்சித்துள்ளது.

தமிழகத்திற்கு வரவேண்டிய புயல், மழை வெள்ள நிவாரணம், மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கான எந்த நிதியும் ஒதுக்காமல் தமிழ்நாடு என்ற பெயரைக் கூட இடம்பெறச்செய்யாமல் தமிழக மக்களை ஒன்றிய அரசு ஏமாற்றியுள்ளது. அதிகமான வரி வருவாய் அளிக்கும் தமிழ்நாட்டை புறக்கணிப்பதன் மூலம் இந்த நிதிநிலை அறிக்கை கூட்டாட்சி கோட்பாட்டுக்கு துரோகம் இழைக்கிறது.

உணவு மானியத்தை சுருக்கி, உர மானியத்தை வெட்டி, விவசாயிகள் மற்றும் வறுமையில் வாடும் கோடானு கோடி மக்களின் வயிற்றிலடித்துள்ளது. உணவுப் பொருட்கள், அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், பெருகி வரும் வேலையின்மை உள்ளிட்ட மக்களின் அடிப்படை தேவைகளை புறக்கணித்துள்ளது. மக்கள் நலத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை வெட்டிக்குறைத்துள்ளது.

“வறுமையில் வாடும் கோடிக்கணக்கான மக்களின் வயிற்றிலடித்துள்ளது பாஜக” - இடதுசாரி கட்சிகள் கூட்டாக கண்டனம் !

இந்திய நாட்டில் ஏழை, பணக்காரர் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துள்ள நிலையில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு செல்வ வரி விதிக்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை புறந்தள்ளி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை வாரி வழங்கி ஏழை, நடுத்தர மக்களை ஏமாற்றியுள்ளது. நெருக்கடியில் திகழும் சிறு-குறு தொழில்களை பாதுகாக்க நிவாரணம் ஏதும் இல்லை. கார்ப்பரேட் வகுப்புவாத கொள்கைகளை மூர்க்கத்தனமாக அமலாக்கிடும் இந்த நிதி நிலை அறிக்கையை எதிர்த்து, அனைத்துத் தரப்பு மக்களும் கண்டனக் குரல் எழுப்பிட வேண்டுகிறோம்.

ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விராத பட்ஜெட்டையும், தமிழக விரோதப்போக்கையும் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) லிபரேசன் ஆகிய இடதுசாரி கட்சிகளின் சார்பில் 2024 ஆகஸ்ட் 1 அன்று தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்கும் மாபெரும் மறியல் போராட்டம் நடைபெறும். இந்த தேசபக்த போராட்டத்திற்கு ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகளும், அனைத்து தரப்பு பொதுமக்களும் பேராதரவு நல்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்."

banner

Related Stories

Related Stories