முரசொலி தலையங்கம்

”எதிர்க்கட்சி தலைவர்களின் செல்போன்களை ஒட்டுக் கேட்கும் பா.ஜ.கவின் கெட்ட புத்தி” : முரசொலி கடும் சாடல்!

இந்தியாவில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

”எதிர்க்கட்சி தலைவர்களின் செல்போன்களை ஒட்டுக் கேட்கும் பா.ஜ.கவின் கெட்ட புத்தி” : முரசொலி கடும் சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (04-11-2023)

ஒட்டுக் கேட்க வைக்கும் பயம்

இந்தியாவில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐபோன் பயன்படுத்தும் எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் அனுப்பியுள்ள செய்தியால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ், காங்கிரஸ் எம்.பி., சசிதரூர், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., மகுவா மொய்த்ரா, சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே பிரிவைச் சேர்ந்த பிரியங்கா சதுர்வேதி, ஆம் ஆத்மி கட்சியின் ராகவ் சத்தா எம்.பி. மற்றும் ராகுல் காந்தி அலுவலகத்தில் பணிபுரியும் 3 பேர் உள்ளிட்டோருக்கு ஆப்பிள் போன் நிறுவனம் இதுபற்றிய எச்சரிக்கைக் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது. அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி மூத்த பத்திரிகையாளர் சித்தார்த் வரதராஜன் உள்ளிட்டோரின் செல்போன்களும் ஒட்டுக் கேட்கப் பட்டுள்ளன.

‘அரசின் ஏற்பாட்டில் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக’ ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் பயன்படுத்தும் ஐ – போன் மற்றும் மின்னஞ்சல்களை அரசின் உதவி பெறும் அமைப்பால் ‘ஹேக்’ செய்ய முயற்சி செய்யப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பா.ஜ.க.வின் கெட்ட அரசியல் அம்பலமாகி உள்ளது.

ஜனநாயக நாட்டில் சுதந்திரம் பறிக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ள அகிலேஷ், “இப்படி துப்பறிந்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல் காந்தி, “செல்போன் ஒட்டுக்கேட்பது நேர்மையானவர்கள் செய்யும் செயல் அல்ல, குற்றவாளிகள் செய்யும் செயல்” என்று விமர்சித்துள்ளார். “எவ்வளவு ஒட்டுக்கேட்டாலும் எங்களுக்கு அச்சமில்லை” எனவும் அவர் கூறியுள்ளார்.

”எதிர்க்கட்சி தலைவர்களின் செல்போன்களை ஒட்டுக் கேட்கும் பா.ஜ.கவின் கெட்ட புத்தி” : முரசொலி கடும் சாடல்!

எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ள குற்றச்சாட்டு குறித்து விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இப்புகார்கள் குறித்த விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி ஆப்பிள் நிறுவனத்திற்கும், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக ஒன்றிய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். “இதை விட கேலிக்கூத்து இருக்க முடியாது” என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விமர்சித்துள்ளார்கள். குற்றம் சாட்டப்பட்டவர்களே விசாரணை நடத்துவதாகச் சொல்வதை அவர் விமர்சித்துள்ளார்.

பா.ஜ.க. அரசு மீது இத்தகைய குற்றச்சாட்டுகள் வருவது புதிதல்ல. மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக பெகாசஸ் பூதம் கிளம்பியதை யாரும் மறந்திருக்க முடியாது.

இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ. நிறுவனத்தின் பெகாசஸ் மென்பொருள் மூலம் உலகம் முழுவதும் உள்ள மனித உரிமைப் போராளிகள், பத்திரிகையாளர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட 50 ஆயிரம் பேரின் செல்போன் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக ‘தி கார்டியன்’, ‘வாஷிங்டன் போஸ்ட்’ ஆகிய இதழ்கள் செய்தி வெளியிட்டு, 2021 ஆம் ஆண்டு ஜூலையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியன.

இந்தியாவைச் சேர்ந்த இணைய தள செய்தி நிறுவனமான ‘தி வயர்’ , இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், 2 மத்திய அமைச்சர்கள் உட்பட 300 பேரின் ஸ்மார்ட்போன் தகவல்கள் திருடப்பட்டதாகத் தெரிவித்தது. இதில் அமைச்சர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள், விஞ்ஞானிகள், மனித உரிமைப் போராளிகள் ஆகியோரது ஸ்மார்ட்போன் எண்களும் அடங்கும். இந்தச் செய்தி வெளியானதும், “நாங்கள் சட்டத்துக்குப் புறம்பாக எதையும் செய்யவில்லை” என்று ஒன்றிய அமைச்சர் அஸ்வினி அப்போது மறுத்தார்.

“அரசுகளுக்கு மட்டுமே பெகாசஸ் மென்பொருள் விற்கப்பட்டுள்ளது. சீன அரசோ, பாகிஸ்தான் அரசோ இந்தியக் குடிமக்களை உளவு பார்க்க முடியாது. இது தேச பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் நாடாளு மன்ற கூட்டுக் குழு விசாரணை வேண்டும்” என்று எதிர்க்கட்சிகள் அப்போது கோரிக்கை வைத்தன.

“தொலைபேசி ஒட்டுக் கேட்பு புகார் குறித்து நாடாளு மன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளிக்க வேண்டும். இஸ்ரேல் நிறுவனத்துடன் மோடி அரசுக்குத் தொடர்பா? இல்லையா? என்பதுபற்றி விளக்க மளித்தால் நல்லது. இல்லாவிட்டால் அமெரிக்காவின் வாட்டர்கேட் ஊழல் போல இது தலைவலியாக மாறும்” என்று சுப்பிர மணியன் சுவாமியே அப்போது சொன்னார்.

”எதிர்க்கட்சி தலைவர்களின் செல்போன்களை ஒட்டுக் கேட்கும் பா.ஜ.கவின் கெட்ட புத்தி” : முரசொலி கடும் சாடல்!

மென்பொருள் விற்பனையில் முறைகேடு, அரங்கேறியதாகக் கூறப்படுவதை மறுத்த என். எஸ்.ஓ. நிறுவனம், “ஜனநாயகம் இல்லாத நாடுகளுக்கு அந்த மென்பொருளை விற்பனை செய்வதால் எழுந்த விமர்சனங்களைப் பொருட்படுத்தத் தேவையில்லை” என்று விளக்கமளித்தது. அதாவது, இவர்கள் யார் போனையும் ஒட்டுக் கேட்பார்கள். அதனை சகித்துக் கொள்வதுதான் ஜனநாயகம் என்று இந்தியாவுக்குக் கற்றுக் கொடுக்கப் பார்த்தது அந்த நிறுவனம்!

இதுகுறித்து வழக்கறிஞர் எம்.எல்.சர்மா என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் தலைமையில் மூவர் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. இக்குழு 2022 ஆகஸ்ட் 26 அன்று தனது அறிக்கையைத் தாக்கல் செய்தது. அதிலாவது ஏதாவது உண்மை வெளிவந்ததா என்றால் இல்லை. அந்தக் குழு தனது அறிக்கையில், “விசாரணைக்கு ஒன்றிய அரசு ஒத்துழைக்கவில்லை” என்று தெரிவித்தது.

மேலும், அந்தக் குழுவின் அறிக்கை குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா , “உளவு மென்பொருள் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 29 தொலைபேசிகளில் 5-–ல் மட்டுமே உளவு மென்பொருள் இருந்தது. ஆனால், அவையும் பெகாசஸ் உளவு மென்பொருள்தானா என்பது உறுதியாகவில்லை” என்றார்.

‘அரசு ஒத்துழைக்கவில்லை’ என்று நிபுணர் குழு கூறியதைப் பற்றி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சுட்டிக் காட்டி கண்டனத்தைத் தெரிவித்தார். “இங்கே எப்படி ஒத்துழைக்க வில்லையோ அதேபோல் அங்கே விசாரணை ஆணையத்திலும் மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை போல” என்றார். அதற்கு அரசுத் தரப்பு சொலிசிட்டர் ஜெனரல், ‘அது பற்றி தனக்குத் தெரியாது’ என்று கூறினார். அத்தோடு இந்த வழக்கே கிடப்பில் போடப்பட்டது.

இந்த நிலையில் இப்போது, ‘ஆப்பிள் பூதம்’ கிளம்பி இருக்கிறது. இது தொடர்பான விசாரணையிலும் உண்மை எதுவும் வெளியில் வரப் போவது இல்லை. ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொன்னதைப் போல, ‘பா.ஜ.க.வின் தோல்வி பயம்’ வெளியில் வந்துள்ளது.

banner

Related Stories

Related Stories