இந்தியா

காந்திநகர் IIT-ல் மறுக்கப்படும் இடஒதுக்கீடு : தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் பி. வில்சன் கண்டனம்!

காந்திநகர் IIT-ல் SC, ST, OBC, EWS, PwD பிரிவினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 70 பேராசிரியர் பணியிடங்களில், 51 பணியிடங்கள் காலியாகவே இருப்பது RTIதகவலின் படி, அம்பலப்பட்டுள்ளது.

காந்திநகர் IIT-ல் மறுக்கப்படும் இடஒதுக்கீடு : தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் பி. வில்சன் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

காந்தி நகர் IIT-ல் பேராசிரியர்களாக பணிபுரியும் 135 பேரில், 116 பேர் பொதுப்பிரிவினர் என்ற தகவல் RTIஐ வழி அம்பலமாகியுள்ளது.

பா.ஜ.க ஆளும் குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள காந்திநகர் IIT-ல் SC, ST, OBC, EWS, PwD பிரிவினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 70 பேராசிரியர் பணியிடங்களில், 51 பணியிடங்கள் காலியாகவே இருப்பது RTIதகவலின் படி, அம்பலப்பட்டுள்ளது.

பேராசிரியர், இணை பேராசிரியர், துணை பேராசிரியர் என மொத்தமுள்ள 190 இடங்களில் 135 இடங்களே நிரப்பப்பட்டுள்ளன. அதில் சுமார் 116 பேர் பொதுப்பிரிவினை சார்ந்தவர்கள் என்ற தகவல் அதிர்ச்சியூட்டுவதாய் அமைந்துள்ளது.

இது குறித்து, தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன், “நாடு முழுவதும் 23 ஐ.ஐ.டி.க்கள் உள்ளன. அவை இந்திய அரசால் நிறுவப்பட்ட உச்ச அமைப்பான ஐ.ஐ.டி கவுன்சிலால் நிர்வகிக்கப்படுகின்றன. ஒன்றிய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் (தற்போது மாண்புமிகு கல்வி அமைச்சர்) இந்த கவுன்சிலின் அதிகாரபூர்வ தலைவராக பணியாற்றுகிறார்.

ஐ.ஐ.டி.களில் ஆசிரிய பதவிகளுக்கான ஆட்சேர்ப்பில் பட்டியலினர் (SC), பழங்குடியினர் (ST), பிற்படுத்தப்பட்ட மற்றும் இதர பிற்படுத்தப்பட்டவருக்கு (OBC) இடஒதுக்கீட்டை அமல்படுத்த ஐ.ஐ.டி கவுன்சில் நிலைக்குழு பரிந்துரைகளின் அடிப்படையில், ஐ.ஐ.டி கவுன்சிலின் தலைவர் இந்த பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு இடஒதுக்கீட்டை அமல்படுத்தினார்.

SC,ST மற்றும் OBC பிரிவினருக்கான இந்த இட ஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப்படுகிறதா அல்லது இந்த ஐ.ஐ.டிகளில் வெறும் உதட்டளவில் மட்டுமே உள்ளதா என்பதை ஆராய வேண்டியது அவசியமாகிறது. ஒரு உதாரணமானது சில சட்டவிரோத நடவடிக்கைகளை வெளிப்படுத்தும்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், அகில இந்திய OBC மாணவர் சங்கத்தின் தேசிய தலைவர் கிரண்குமார் எழுப்பிய கேள்விக்கு அளிக்கப்பட்ட பதில் மனுவில், காந்திநகர் ஐஐடியில் அரசியலமைப்பு இடஒதுக்கீடு பின்பற்றப்படாததை வெளிப்படுத்தியிருக்கிறது.

இங்கு மொத்த பேராசிரியர்களின் எண்ணிக்கை 190. இதில் தற்போது பொதுப் பிரிவில் 116 பேரும், ஓபிசி பிரிவில் 8 பேரும், எஸ்சி பிரிவில் 7 பேரும், எஸ்டி பிரிவில் 4 பேரும் என மொத்தம் 135 பேராசிரியர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கை அரசியலமைப்பு இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதை மீறுகிறது.

ஐஐடி கவுன்சிலின் தலைவர் என்கிற முறையில், தர்மேந்திர பிரதான், விளிம்புநிலை பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை அவ்வப்போது மறுபரிசீலனை செய்வதும், ஏதேனும் பிறழ்ச்சி இருந்தால் அதற்கு அந்தந்த ஐ.ஐ.டி.களின் இயக்குநர்களை பொறுப்பேற்கச் செய்வதும், ஒழுங்கு நடவடிக்கையைத் தொடங்குவதும் அவசியம் ஆகும்.

SC, ST மற்றும் OBC பிரிவினருக்கான இட ஒதுக்கீடு மறுக்கப்படுவதை இந்த சமூகங்களுக்கு எதிரான வன்கொடுமைகளாகக் கருதி, துறைத் தலைவர்களுக்கான தண்டனை உட்பட அந்தந்த சட்டங்களில் திருத்தங்களை முன்மொழியுமாறு தர்மேந்திர பிரதான், டாக்டர் வீரேந்திர குமார், அர்ஜுன் ராம் மெக்வால் ஆகியோரைக் கேட்டுக்கொள்கிறேன்.

விளிம்புநிலை சமூகங்களை மைய அமைப்பிற்குள் கொண்டு வருவதற்கான ஒரே வழி இதுதான் என்பதோடு மட்டுமல்லாமல், இதன் மூலமே சமூக நீதியை அனைத்து மட்டங்களிலும் செயல்படுத்த முடியும்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories