தி.மு.க

இருமொழிக் கொள்கைக்கு கேடு விளைவிக்கும் எந்த முடிவையும் எதிர்ப்போம்! : தி.மு.க தீர்மானம்

தண்ணீர் பஞ்சத்தை நீக்க நடவடிக்கை, மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு என தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இருமொழிக் கொள்கைக்கு கேடு விளைவிக்கும் எந்த முடிவையும் எதிர்ப்போம்! : தி.மு.க தீர்மானம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்கு பிறகு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள், எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது.

கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட தி.மு.க கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் 1: தலைவர் கலைஞர் அவர்களின் பிரதிபிம்பங்களாகத் திகழ்ந்திட வேண்டும்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமோக வெற்றி பெற்று, இந்திய நாடாளுமன்றத்தின் 3வது மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்து செம்மாந்து நிற்கிறது.

எனவே, உறவுக்கு கை கொடுத்து, உரிமைக்கு குரல் கொடுக்கும் வகையில் சீரிய செயலாற்றி நாம் என்றும் மக்கள் ஊழியர்களே என்ற நற்பெயரை பெற வேண்டும் என்று தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தீர்மானம் 2: தலைமைப் பண்பின் உறைவிடம் தளபதி மு.க.ஸ்டாலின்.

“மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்களின் மனங்களை வெல்வோம்”என்ற தனிப் பெரும் முழக்கத்துடன் - கிராமத்தின் திண்ணைகள் முதல் நகரத்தின் தெருக்கள் வரை மக்களைச் சந்தித்து, அனைவரும் வியக்கும் வகையிலான கழகத் தலைவரின் ஆக்கப்பூர்வமான பிரசாரத்தினால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைந்த கூட்டணிக்கு இந்த மகத்தான வெற்றியை தமிழகம் மற்றும் புதுவை மக்கள் அளித்துள்ளார்கள்.

இந்த வெற்றியின் மூலம் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா - தலைவர் கலைஞர் ஆகியோர் பண்படுத்திய பைந்தமிழ் மண்ணின் பெருமை மற்றும் திராவிட இயக்கத்தின் தனிக்குணமும் போர்க்குணமும் இந்திய அரங்கில் தனி முத்திரையுடன் கழகத் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களால் நிலை நிறுத்தப்பட்டுள்ளதை எண்ணி இக்கூட்டம் பெருமை கொள்கிறது.

தீர்மானம் 3: முனைப்புடனும், ஆர்வத்துடனும் வாக்காளர்களைச் சந்தித்திடுக!

அன்பு உடன்பிறப்புக்களான கழகத் தொண்டர்கள், கூட்டணிக் கட்சியின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் ஒருமுகமாக நின்று, மத்திய - மாநில அரசுகளின் அதிகார அத்துமீறல்கள் அனைத்தையும், அரசு இயந்திர துஷ்பிரயோகங்களையும் மன உறுதியுடன் எதிர்கொண்டு தமிழக வாக்காளர்களையும், புதுச்சேரி வாக்காளர்களையும் சந்தித்து இந்த அமோக வெற்றியை ஈட்டியுள்ளதற்கு இந்தக் கூட்டம் இதயம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

வாக்காளர்களிடம் வாக்குக் கேட்கச் சென்ற அதே முனைப்புடனும் - ஆர்வத்துடனும், கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் - இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்ற சட்டமன்ற உறுப்பினர்கள், ஒவ்வொருவரும் தத்தமது தொகுதிகளில் தவறாமல் வாக்களித்தவர்கள் -வாக்களிக்காதவர்கள் என்ற பேதம் பார்க்காமல், அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவித்திட வேண்டும்.

தீர்மானம் 4: தண்ணீர்ப் பஞ்சத்தை நீக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுத்திடுக!

“கமிஷன், கரெப்சன், கலெக்சன்”என்பதில் மட்டுமே முழுமூச்சாக ஈடுபட்டு வரும் ஆளும் அ.தி.மு.க அரசால் தமிழ்நாட்டில் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஒரு குடம் தண்ணீர் 15 ரூபாய்க்கு விற்கப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது. சென்னை மாநகரில் 15 நாட்களுக்கு ஒருமுறை லாரி டேங்கர் மூலம் குடிநீர் சப்ளை செய்யும் நெருக்கடி உருவாகியிருக்கிறது. மாநிலம் முழுவதும் நடைபெறும் மக்கள் போராட்டங்கள் - தாய்மார்கள் சாலை மறியலில் ஈடுபடும் காட்சிகள், குடிநீர்ப் பிரச்னை எந்த அளவிற்கு தமிழகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது.

எனவே, தமிழகத்தின் தண்ணீர்ப் பஞ்சத்தைப் போக்க ஆளும் அ.தி.மு.க அரசு உடனடியாக போர்க்கால நடவடிக்கைகளில் ஈடுபடுவதோடு, கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள் மற்றும் கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் போன்ற தொலைநோக்குத் திட்டங்களையும் விரைந்து நிறைவேற்ற முன்வர வேண்டும்.

தீர்மானம் 5: “மும்மொழித்திட்டம்”என்று தமிழர்களை உரசிப் பார்க்காதீர்கள்!

இந்தியா முழுவதும் இந்தி கட்டாயப் பாடம் ஆக்கப்படும் என்ற செய்தி பரவியது. தமிழ்நாடு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் எதிர்ப்புக் குரல் கிளம்பியது. இது தமிழர்களை உரசிப் பார்க்கும் செயலாகும். பன்மொழி, பண்பாட்டோடு விளங்கும் ஒரு நாட்டில் மக்களின் கருத்துகளை அறியாமல் மத்திய அரசு எந்த முடிவையும் மேற்கொள்ளாது என நம்புகிறோம்.

அதேபோல், தமிழர்களின் உணர்வோடு விளையாட வேண்டாம் என்று மத்திய பா.ஜ.க அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்வதோடு; தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைக்கு ஆபத்தை விளைவிக்கும் எந்தவொரு முடிவுகளையும், அது எந்த நேரத்தில் வந்தாலும் திராவிட முன்னேற்றக் கழகம் ஜனநாயக வழி நின்று மிகக் கடுமையாக எதிர்க்கும்.

தீர்மானம் 6: ஹைட்ரோ கார்பன் திட்டங்களை திரும்பப் பெறுக - காவிரி டெல்டா மாவட்டங்களை “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக”அறிவித்திடுக.

நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் வேளாண்மையையும், அதற்கு உயிரோட்டமாக இருக்கும் விவசாயிகளையும் மத்திய மாநில அரசுகள் துளியும் மதிக்காமல் செயல்படுவது மக்களாட்சி இலக்கணத்திற்கு நிச்சயம் அழகு சேர்க்காது.

ஆகவே விவசாயிகளின் உண்மையான உணர்வுகளுக்கு மதிப்பளித்து, காவிரி டெல்டா மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டங்களை, மறுசிந்தனை ஏதுமின்றி, திரும்பப்பெற வேண்டும் என்றும், காவிரி டெல்டா மாவட்டங்களை “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக” உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும் இந்தக் கூட்டம் மத்திய பாஜக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

banner

Related Stories

Related Stories