தமிழ்நாடு

2 நாளில் 14,84,735 பேருக்கு உணவு : பெரும் மழையிலும் மக்கள் பசியாற்றிய அரசு!

மழையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2 நாட்களில் 14,84,735 பேருக்கு உணவு விநியோகிக்கப்பட்டது.

2 நாளில் 14,84,735 பேருக்கு உணவு : பெரும் மழையிலும் மக்கள் பசியாற்றிய அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை மாநகரை அச்சுறுத்திய சிவப்பு எச்சரிக்கை மழை அறிவிப்பைத் தொடர்ந்து சென்னை மாநகரிலுள்ள அம்மா உணவகங்களில் 16, 17 ஆகிய இரண்டு நாள்களில் கட்டணமின்றி உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்கள்.

மழைகாரணமாக வேலைக்குச் செல்லாத ஏழைகளுக்கு இந்த அறிவிப்பு பெரிதும் உதவியாக அமைந்தது. அதன்படி, அம்மா உணவகங்களில் நேற்று 16.10.2024 அன்று காலையில் இட்லி பொங்கல் உணவும் பிறபகலில் பல்வேறு கலவை சாத உணவுகளும் வழங்கப்பட்டன.

காலை மாலை இரண்டு வேளையும் 78,557 பேர் கட்டணமில்லா உணவினைப் பெற்றுப் பயனடைந்தனர். அதேபோல, மாலையில் 29,316 ஏழைகளுக்கு சப்பாத்தி உணவு கட்டணமின்றி வழங்கப்பட்டது.

மழை காரணமாக வேலையும் வருமானமும் இல்லாமல் மக்கள் சிரமப்படுவார்கள் என்பதை எண்ணி அம்மா உணவகங்களில் கட்டணமில்லா உணவு வழங்க உத்தரவு பிறப்பித்து எங்களுக்கு உதவிபுரிந்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மனதார எங்கள் நன்றியைத் தெரிவிக்கிறோம் என்று கட்டணமில்லா உணவு சாப்பிட்ட மக்கள் கூறினர்.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , மற்ற அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று நிவாரணப் பொருள்களை வழங்கினார்கள். குறிப்பாக முதலமைச்சர் அவர்கள் புளியந்தோப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்டு அங்கு பணி மேற்கொண்டிருந்த சென்னை மாநகராட்சி முன்களப் பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கமளித்தார்.

2 நாளில் 14,84,735 பேருக்கு உணவு : பெரும் மழையிலும் மக்கள் பசியாற்றிய அரசு!

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று மழைநிவாரணப் பணிகளை துரிதப்படுத்தினார். அங்கு பொதுமக்கள் தெரிவித்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பெய்த பெருமழையால் சென்னை மாநகரம் 542 பகுதிகளில் மழைநீர் தேங்கத் தொடங்கியது.அந்தப் பகுதிகளில் எல்லாம் ஏற்கனவே தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த மோட்டார் பம்ப்களை பயன்படுத்தி மழைநீர் தேங்க விடாமல் செய்த மாநகராட்சி பணியாளர்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பாராட்டினார்கள்.

தாழ்வான பகுதிகளில் குடியிருந்த மக்களை பாதுகாத்திட 300 நிவாரண மையங்கள் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் அமைக்கப்பட்டு அவர்களுக்குத் தேவையான உணவு, உடை, குடிநீர் ஆகியவற்றை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்கள். மழையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மொத்தம் 2 நாட்களிலும் 14,84,735 பேருக்கு உணவு விநியோகிக்கப்பட்டது.

சென்னை மாநகரம் முழுவதிலும் 304 மழைக்கால மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, அவற்றில் 17,471 பேருக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதையிலும் மழைநீர் அகற்றப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.

திடீரென பெய்த பெருமழை காரணமாக மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், துணை முதலமைச்சர் அவர்களும், அமைச்சர் பெருமக்களும், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அதிகாரிகள் ஆகியோரும் மக்களுடன் சேர்ந்து மழை நிவாரணப் பணிகளை மேற்கொண்டார்கள் என தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories