தமிழ்நாடு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது : எதற்காக இந்த விருது?

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது ஆசிய HRD Awards சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது : எதற்காக இந்த விருது?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆசிய HRD Awards சார்பில் சமுதாய மேம்பாட்டிற்காகவும், படைப்பாற்றல், புத்தாக்கத்தை வளர்ப்பதற்கான திறன் மேம்பாட்டு சூழலமைப்பை வலுப்படுத்துவதிலும் உள்ள தலைமைத்துவ உறுதியையும் விடாமுயற்சியையும் அங்கீகரிக்கும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு இன்று (7.10.2024) “வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கப்பட்டது.

பின்னர், ஆசிய HRD Awards நிறுவனரும், சைபர்ஜெயா பல்கலைக்கழகத்தின் இணை வேந்தருமான தத்தோ டாக்டர் பாலன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

அனைவருக்கும் காலை வணக்கம். இங்கு அமர்ந்திருக்கும் அனைவரும் இந்த வருடத்தின் ஆசிய மனிதவள மேம்பாட்டு தேர்வுக் குழுவின் அங்கத்தினர்கள் ஆவார்கள். ஆசிய மனிதவள மேம்பாட்டுக் குழுவின் தலைவர் பஹ்ரைன் நாட்டின் முன்னாள் பொதுப்பணித் துறை அமைச்சர் ஃபாமி ஜோவ்தர் (Mr.Fahmy Jowdher) , இக்குழுவின் துணைத் தலைவர் மாலத்தீவு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி முகமது வஹீத், ஆசிய HRD Awards நிறுவனரும், சைபர்ஜெயா பல்கலைக்கழகத்தின் இணை வேந்தருமான தத்தோ டாக்டர் பாலன் , பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் டாக்டர் டேவிட் விட்போர்ஃடு, மலேசியா SMRT Holdings நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மஹா ராமநாதன், மனிதவள மேலாண்மை கழகத்தின் முன்னாள் முதன்மை செயல் அலுவலர் திரு. தத்தோ விக்கி அவர்கள், ஆசிய HRD விருதுகள் தலைமை செயல் அலுவலர் பேராசிரியர் சுப்ரா அவர்கள், கே.ஏ.மேத்யூ, இ.ஆ.ப., (ஓய்வு) ஆகியோர் இங்குள்ளனர்.

12 வருடங்களுக்கு பிறகு இந்திய நாட்டில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. இதற்கு முன்பு வாழ்நாள் சாதனையாளர் விருது பிலிப்பையன்ஸ் ஜனாதிபதி பிடல் வி. ராமோஸ் அவர்களுக்கும், போஸ்னியாவின் பிரதமர் ஹாரிஸ் டால்சுவேக் அவர்களுக்கும், மலேசியா நாட்டின் சராவக் முதலமைச்சர் அடேனம் சதேம் போன்ற பல தலைவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டிருக்கிறது.

எதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது என்றால், மனிதவள மேம்பாட்டிற்கு எந்த விதத்தில் அவர்களது பங்களிப்பு இருக்கின்றது என்பதை கருத்தில் கொண்டு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருது விழாவுடன், உலகளாவிய ஒரு மாநாடும் நாளை மற்றும் நாளை மறுநாள் ITC Chola-வில் நடக்கிறது. அங்கு ஏறத்தாழ 350 மனிதவள மேம்பாட்டு நிபுணர்களும் மற்றும் தலைமை நிருவாகிகளும் பல நாடுகளிலிருந்து ITC Chola-விற்கு வருகிறார்கள். இந்த நிகழ்வுடன் தான் இந்த விருது வழங்கும் விழாவும் நடைபெறுகிறது.

இந்த வருடம் குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட வேண்டும் என்று தேர்வு குழு விருப்பப்பட்டதற்குக் காரணம், தமிழ்நாட்டில் மனிதவள மேம்பாட்டுத் துறையில் என்னென்ன செய்திருக்கிறார்கள் என்பதை பார்த்துத் தான் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

முதலாவதாக, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் (Skills Development Corporation) மற்றும் Vocational Skills Development ஆகியவற்றின் மூலம் பல இலட்சம் பேருக்கு திறன் பயிற்சி அளித்திருக்கிறார்கள், வேலைவாய்ப்புகளை அதிகரித்திருக்கிறார்கள். இதனால், தமிழ்நாட்டு இளைஞர்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்திருக்கிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தொலைநோக்குப் பார்வையான, ஒரு டிரில்லியன் பொருளாதாரமாக தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்பது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

கல்வி, மனிதவள மேம்பாடு இது தான் வறுமையை ஒழிக்கும் என்பதில் இக்குழு உறுதியான நம்பிக்கையை கொண்டுள்ளது. இதற்காகதான் இந்த வருடம் வாழ்நாள் சாதனையாளர் விருது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories