தமிழ்நாடு

சிதம்பரம் நடராஜர் கோயில் வருமானம் குறித்த வழக்கு: தீட்சிதர்களுக்கு நீதிமன்றம் கேள்விகளோடு அதிரடி உத்தரவு!

சிதம்பரம் கோவில், தீட்சிதர்கள் கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகு, வருமானம் செலவு குறித்த கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய பொது தீட்சிதர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயில் வருமானம் குறித்த வழக்கு: தீட்சிதர்களுக்கு நீதிமன்றம் கேள்விகளோடு அதிரடி உத்தரவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சிதம்பரம் நடராஜர் கோவில் 2008 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்த போது 3 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டிய வ்ந்தது. ஆனால் அதன்பிறகு நடராஜர் கோவில் தீட்சிதர்கள் கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகு ஆண்டுக்கு வெறும் 2 லட்சம் ரூபாய் மட்டுமே வருமானம் வந்த வண்ணமாக இருக்கிறது.

எனவே கோவிலில் வருவாயை கணக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான அரசு சிறப்பு பிளீடர் அருண் நடராஜன், கோவில் நிர்வாகம் தீட்சிதர்கள் வசம் ஒப்படைக்கப்பட்ட பின் பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை கோவிலின் கணக்கில் செலுத்தாமல் தீட்சிதர்கள் எடுத்துச் செல்வதாக குற்றம் சாட்டினார்.

சிதம்பரம் நடராஜர் கோயில் வருமானம் குறித்த வழக்கு: தீட்சிதர்களுக்கு நீதிமன்றம் கேள்விகளோடு அதிரடி உத்தரவு!

தீட்சிதர்களின் தவறான நிர்வாகம் காரணமாக கோவிலின் வருமானம் பெருமளவு குறைந்து விட்டதால் தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் உள்ள காலத்தில் வந்த வருமான குறித்த கணக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

பொது தீட்சிதர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கோவில் இருந்தபோது, பக்தர்கள் காணிக்கை செலுத்த உண்டியல் வைக்கப்பட்டிருந்தது. பூஜைகள், அர்ச்சனை, தரிசனத்துக்கு டிக்கெட் அடித்து கட்டணம் வசூலிக்கப்பட்டது. அதன் காரணமாகவே அதிக வருவாய் கிடைத்தது என்று தெரிவித்தார்.

மேலும் கோவில் தீட்சிதர்கள் கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகு உண்டியல் அகற்றப்பட்டு விட்டது என்றும், பூஜை, அர்ச்சனை மற்றும் தரிசனத்திற்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை என்றும் குறிப்பிட்டார். அதோடு பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை தீட்சிதர்கள் எடுத்துச் செல்வதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து கூடுதல் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

சிதம்பரம் நடராஜர் கோயில் வருமானம் குறித்த வழக்கு: தீட்சிதர்களுக்கு நீதிமன்றம் கேள்விகளோடு அதிரடி உத்தரவு!

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஐந்தாம் நூற்றாண்டில் சோழர்களால் 44 ஏக்கர் பரப்பில் கட்டப்பட்டுள்ள சிதம்பரம் நடராஜர் கோவில் மிகவும் பழமையானது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் நடராஜரை தரிசிக்க வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். புராதன கட்டிடமான கோவிலை முறையாக பராமரிக்க வேண்டும். அதற்கு பெருந்தொகை தேவைப்படுகிறது எனச் சுட்டிக்காட்டியது.

சிதம்பரம் கோவில் பராமரிப்புக்கும் பக்தர்களுக்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கவும் என்ன வருவாய் ஆதாரம் உள்ளது. கோவில் காணிக்கை தவிர தீட்சிதர்களுக்கு வேறு வருவாய் ஆதாரங்கள் உள்ளதா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சிதம்பரம் நடராஜர் கோவிலில் உண்டியல் எப்போது அகற்றப்பட்டது? பூஜை அர்ச்சனை தரிசனத்திற்கு கட்டணங்கள் வசூலிக்கப்படுவது இல்லையா என்பது குறித்து மனுவாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும் ஒவ்வொரு ஆண்டும் தீட்சிதர்கள் தரப்பில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்படுகிறதா என்பது குறித்தும் தெரிவிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், தீட்சிதர்கள் கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகு 2014 முதல் 2023-24 ம் ஆண்டுகள் வரையிலான வருமானம் செலவு குறித்த கணக்கு புத்தகங்களை செப்டம்பர் 19ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு, விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்தனர்.

banner

Related Stories

Related Stories