தமிழ்நாடு

“படுதோல்வி அடைந்தும் ஒன்றிய அரசு இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

ஒன்றிய அரசு என்பது, விருப்பு வெறுப்புகளைக் கடந்து, அனைத்து மக்களுக்குமான பொதுவான அரசாக செயல்பட வேண்டும் என்பதை இனியாவது அவர்கள் உணர வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்!

“படுதோல்வி அடைந்தும் ஒன்றிய அரசு இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (11.07.2024) தருமபுரி மாவட்டம், பாளையம் புதூர் ஊராட்சி, அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ஊரகப் பகுதிகளில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தை தொடங்கி வைத்து, தருமபுரி மாவட்டத்தில் 444 கோடியே 77 இலட்சம் ரூபாய் செலவில் 621 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, பல்வேறு துறைகளின் சார்பில் 2,637 பயனாளிகளுக்கு 56 கோடியே 4 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு :- ”சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று மக்களை நான் நேரடியாக சந்தித்தேன்! அந்த நிகழ்ச்சிக்கு 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்'! என்று பெயர் வைத்தோம்! கொளத்தூர் மட்டுமல்ல, அதாவது என்னுடைய தொகுதி கொளத்தூர் மட்டுமல்ல. தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து தொகுதிகளும் என்னுடைய தொகுதிகள் தான் என்ற எண்ணத்துடன் அந்த பயணத்தை தொடங்கினேன். மேடையில் எனக்கு அருகில் ஒரு பெரிய பெட்டி வைத்து, அதில், பொதுமக்கள் தங்களுடைய தொகுதிக்கான தேவைகளை, கோரிக்கைகளை எழுதி போட வைத்தோம்.

ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் அதில் சாத்தியமாக இருக்கக்கூடிய அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி காட்டுவேன் என்று சொன்னேன். உங்கள் முன்னால் அந்த பெட்டியைப் பூட்டி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்தில் பாதுகாப்பாக கொண்டு போய் வைத்தோம். உடனே எதிர்க்கட்சிகள் என்ன பேசினார்கள்? “இவர்கள் ஆட்சிக்கு வரப்போவதும் இல்லை; இந்த பெட்டியும் திறக்கப் போவதும் இல்லை” என்ற இறுமாப்பில் கேலி செய்தார்கள், கிண்டல் செய்தார்கள். ஆனால், பொதுமக்களான நீங்கள் தி.மு.க. மீதும், என் மீதும் நம்பிக்கை வைத்து, அந்த கேலி மனிதர்களைத் தோற்கடித்து, எங்களுக்கு பெரிய வெற்றியைத் தேடி தந்தீர்கள்!

“படுதோல்வி அடைந்தும் ஒன்றிய அரசு இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

ஆட்சிக்கு வந்ததும், உங்களுடைய மனுக்களை கவனிப்பதற்காகவே புதியதாக ஒரு துறையை உருவாக்கினேன். அந்த துறையின் பெயர் 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்'! என்னிடம் கொடுக்கப்பட்ட மனுக்களை துறைவாரியாக பிரித்தோம். அதிலிருந்து, நடைமுறை சாத்தியம் உள்ள 2 லட்சத்து 29 ஆயிரத்து 216 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு கண்டோம்! மக்கள் வைத்த கோரிக்கைகளில் சாத்தியம் உள்ள அனைத்தையும் நிறைவேற்றி இருக்கிறோம்.

தேர்தலுக்கு முன்னால் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு கண்டவுடன், எங்களுடைய கடமை முடிந்துவிட்டது என்று நாங்கள் நினைக்கவில்லை. இனிமேல்தான், கடமை தொடங்குகிறது என்று நினைத்து, உழைப்பைக் கொடுத்தோம்! அதனால்தான், தொடர்ந்து மனுக்களை பெற்றோம்! அதை முறைப்படுத்தினோம்! எப்படியெல்லாம் முறைப்படுத்தினோம் என்று சொல்ல வேண்டும் என்றால், முதலமைச்சரின் தனிப்பிரிவு, முதலமைச்சரின் உதவி மையம், ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பு, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை என்று எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து, “முதல்வரின் முகவரி” என்று புதியதாக ஒரு துறையை உருவாக்கினோம்.

பொதுமக்களின் கோரிக்கைகள் எந்த இடத்திலும் எங்களின் பார்வையில் இருந்து தவறிவிடக் கூடாது என்று தான் இது எல்லாவற்றையும் ஒருங்கிணைத்தோம். முதலமைச்சரின் தனிப்பிரிவில் பெறப்படும் மனுக்கள் மட்டுமில்லாமல், இணையதளம், அஞ்சல், சமூக வலைதளம், மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக தரப்படும் மனுக்கள், அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் கொடுக்கப்படும் மனுக்கள், இதுபோல, எல்லா மனுக்களும் ஒரே இடத்திற்கு சென்று சேருகிறது. மக்களால் தரப்படும் எல்லா மனுக்களையும் ஒரு குடையின்கீழ் கொண்டு வந்தோம். அனைத்து மக்களின் கோரிக்கைகளும் தலைமைச் செயலகத்திற்கு வந்துவிடுகிறது.

“படுதோல்வி அடைந்தும் ஒன்றிய அரசு இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

நான் முதலமைச்சராக பொறுப்பேற்றது முதல், முதல்வரின் முகவரி துறையின்கீழ் தற்போது வரைக்கும் பெறப்பட்ட, 68 இலட்சத்து 30 ஆயிரத்து 281 மனுக்களில் 66 இலட்சத்து 25 ஆயிரத்து 304 மனுக்களுக்கு உரிய முறையில் தீர்வு கண்டிருக்கிறோம்! அதிலும், இந்த தருமபுரி மாவட்டத்தில் மட்டும், 72 ஆயிரத்து 438 மனுக்களுக்கு சாதகமான முறையில் தீர்வு அளிக்கப்பட்டிருக்கிறது. இப்போது நான் சொன்னதை எல்லாம் நீங்கள் அரசுத் துறையின் அலுவலர்களிடம் சென்று மனுக்களை கொடுத்தது பற்றி, ஆனால் அந்த நிலையை மாற்றி பொதுமக்கள் அதிகமாக அணுகும் முக்கியமான

13 அரசுத் துறைகள், நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் நேரடியாக சென்று மக்களாகிய உங்களிடம் உங்கள் ஊரிலேயே மனுக்களைப் பெற்று பதிவு செய்து அதற்கு 30 நாட்களுக்குள் தீர்வு காணும் வகையில் நான் உத்தரவிட்டேன். அதன்படி உருவானதுதான் இந்த மக்களுடன் முதல்வர் திட்டம்.

“படுதோல்வி அடைந்தும் ஒன்றிய அரசு இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

முதற்கட்டமாக, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகர்ப்புறங்களை ஒட்டியிருக்கும் கிராம ஊராட்சிகளில் இந்த முகாம்கள் நடத்தப்பட்டது! இந்த முகாம்கள் வாயிலாகப் பெறப்பட்ட சுமார் 8 லட்சத்து 74 ஆயிரம் மனுக்களுக்கு இதுவரைக்கும் தீர்வு கண்டிருக்கிறோம். இந்த தருமபுரி மாவட்டத்தில் நகரப் பகுதிகளில், 3 ஆயிரத்து 107 மனுக்கள் பெறப்பட்டு, 30 நாட்களில் 1,868 மனுக்களுக்கு சாதகமான முறையில் தீர்வு அளிக்கப்பட்டிருக்கிறது. இப்படி இந்தத் திட்டம் மக்களுக்குப் பயனளிக்க தொடங்கிய காரணத்தால்தான், இப்போது ஊரக ஊராட்சிகளுக்கும் விரிவு செய்திருக்கிறோம். அதைத் தொடங்கி வைக்க தான் நான் இங்கே வந்திருக்கிறேன்.

கடந்த முறை தேர்தல் பரப்புரைக்காக நான் வந்தேன். இப்போது, நீங்கள் கொடுத்த வெற்றிக்கு நன்றியாக உங்கள் மாவட்டத்திற்கான அறிவிப்புகளை வெளியிடுகிறேன்.

51 கோடி ரூபாய் செலவில் அரூர் அரசு மருத்துவமனையின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.

கடந்த சட்டமன்றத்தேர்தல் பரப்புரையின்போது கொடுத்த வாக்குறுதியான தருமபுரி – வெண்ணம்பட்டி சாலையில், புதிய ரயில் மேம்பாலம் 38 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

மோபிரிபட்டி–தொட்டம்பட்டியை இணைத்து, "அரூர் பேரூராட்சி”,

"அரூர் நகராட்சியாக” தரம் உயர்த்தப்படும்.

பஞ்சப்பள்ளி, ராஜபாளையம் அணைக்கட்டுகள் 5 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்படும்.

சிட்லிங், அரசநத்தம் பகுதியில் பழங்குடியினர் உற்பத்தி செய்யும் ராகி, சாமை, வரகு ஆகியவற்றை மதிப்புக் கூட்டுப் பொருளாக்க கிடங்கு மற்றும்

பொதுச் செயலாக்க மையம் அமைக்கப்படும்.

தீர்த்தமலையில் துணை வேளாண்மை விரிவாக்க மையம் அமைக்கப்படும்.

இப்போது, இந்த விழா நடைபெற்றுக் கொண்டிருக்கும், பாளையம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், பழுதடைந்த நிலையில் இருக்கும் 4 வகுப்பறைகள், அதன் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும்.

“படுதோல்வி அடைந்தும் ஒன்றிய அரசு இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

இந்த ஏழு அறிவிப்புகளுடன், இன்று காலை எனக்கு வரப்பெற்ற இந்தப் பகுதி மக்களின் கோரிக்கைகளை ஏற்று மொத்தம் 15 அறிவிப்புகள் இன்னும் சிறிது நேரத்தில் வெளியாகிவிடும்.

“மக்களிடம் செல் - மக்களைப் பற்றி அறிந்து கொள் - மக்களுக்காகச் செயல்படு!” இதுதான் பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும் எங்களுக்கு சொன்னது! இதுதான், அவர்கள் எங்களுக்கு அமைத்துக் கொடுத்த பாதை! வழிகாட்டு நெறிமுறை! அந்த அடிப்படையில்தான், ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்! அதன் பலனை மக்கள் எனக்கு எழுதும் கடிதங்கள் மூலமாக, நேரடியாக அவர்களை சந்தித்து பேசும் பொழுதும் நான் உணர்கிறேன்.

எடுத்துக்காட்டாக, உங்களிடம் ஒன்றிரண்டு கடிதத்தைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பூரணி என்பவர், தன்னுடைய வீட்டு வாசல் முன்பு கழிவுநீர் தேங்குவது தொடர்பாக எழுதியிருந்த மனுவுக்கு, ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தில் தீர்வு கண்டோம். அதற்கு நன்றி தெரிவித்து அவர்கள் எழுதிய கடிதத்தில், என்ன சொல்லியிருந்தார்கள் என்றால், இதய நோயாளியான அவர்களுக்கு தேவையான மருந்துகள், அரசு மருத்துவமனையிலேயே கிடைத்துவிடுவதாகவும், ஆனால், ஒரே ஒரு மாத்திரையை மட்டும் வெளியே வாங்க வேண்டிய நிலை இருப்பதாகவும் சொல்லியிருந்தார். அந்த மாத்திரையின் விலை, ஒரு அட்டை 215 ரூபாய். ஒரு நாளைக்கு இரண்டு மாத்திரை என்று, ஒரு மாதத்திற்கு 60 மாத்திரை சாப்பிடவேண்டும். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் கொடுக்கும் ஆயிரம் ரூபாய் இதற்கு மிகவும் உதவியாக இருப்பதாகவும், கடந்த எட்டு மாதமாக, இந்தத் தொகையில்தான் மருந்து வாங்குவதாகவும் அந்தக் கடிதத்தில் அவர்கள் சொல்லியிருந்தார்கள்.

“படுதோல்வி அடைந்தும் ஒன்றிய அரசு இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

அடுத்து, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஜீனி வேதமுத்து என்பவர் எழுதிய கடிதத்தில், கடந்த இருபது ஆண்டுகளாக செப்பனிடப்படாமல் இருந்த கைலாசபுரம் – செட்டியூரனி சாலையை சீரமைத்து கொடுத்ததற்கு நன்றி சொல்லியிருந்தார். “சொன்னதைச் செய்வோம்! செய்வதைத்தான் சொல்வோம்!” என்று தலைவர் கலைஞர் சொன்னார்! இந்த திராவிட மாடல் அரசைப் பொருத்தவரைக்கும் “சொல்லாததையும் செய்வோம்! சொல்லாமலும் செய்வோம்!”.

பெரிய பெரிய திட்டங்களை, மாவட்டத்திற்கு தேவையானவற்றை திட்டமிட்டு செய்து தருகிறோம். பொதுமக்களின் தனிப்பட்ட கோரிக்கைகளையும் கேட்டு, செயல்படுத்தி கொடுப்பது மூலமாக, எல்லோரும் மனநிறைவு அடையும் ஆட்சியாக நம்முடைய கழக அரசு செயல்பட்டு வருகிறது. பல்வேறு நலத்திட்டங்கள் மூலமாக ஒவ்வொரு வீட்டிற்கும், ஏதாவது ஒரு பயன்கிடைக்க அதில் அவர்கள் பயனடைந்து கொண்டு வருகிறார்கள். அதேபோன்று ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் மூலமாக ‘யாருக்கும் எந்தக் குறையும் இல்லை’ என்ற நிலையை உருவாக்க நாங்கள் இப்போது பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.

இப்படி மக்களுக்காக செயல்படுவது எதிர்க்கட்சிகளுக்கு பொறாமையையும், எரிச்சலையும் ஏற்படுத்துகிறது. அதனால்தான், அவதூறுகள் பொய்ப் பிரச்சாரங்கள் மூலமாக இந்த ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த நினைக்கிறார்கள். வாக்களித்தவர்கள், வாக்களிக்க மறந்தவர்கள் என்ற எந்த வேறுபாடும் பார்க்காமல் அனைத்து மக்களுக்குமான அரசாக நாம் செயல்பட்டு வருகிறோம்!

“படுதோல்வி அடைந்தும் ஒன்றிய அரசு இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

ஆனால், இதே பெருந்தன்மையை மற்றவர்களிடம் பார்க்க முடியவில்லை! தமிழ்நாட்டில் தொடர் தோல்வி, படுதோல்வி அடைந்த பிறகும் அதிலிருந்து ஒன்றிய அரசு இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை! தமிழ்நாட்டின் முக்கிய கோரிக்கையாக இருக்கும் மெட்ரோ ரயில் போன்ற திட்டங்களுக்கு கூட நிதி ஒதுக்க ஒன்றிய அரசுக்கு மனமில்லை! நல்ல குணமில்லை! பாடம் கற்றுக்கொள்வதற்கு நினைப்பும் இல்லை! தங்களின் பத்து வருட காலத்தில் தமிழ்நாட்டில் எந்த ஒரு பெரிய திட்டமும் செய்யவில்லை.

ஒன்றிய அரசு என்பது, விருப்பு வெறுப்புகளைக் கடந்து, அனைத்து மக்களுக்குமான பொதுவான அரசாக செயல்பட வேண்டும் என்பதை இனியாவது அவர்கள் உணர வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்! தி.மு.க.வைப் பொருத்தவரைக்கும் நாங்கள் மக்களுடன் இருக்கிறோம். மக்களாகிய நீங்கள் எங்களுடன் இருக்கின்றீர்கள். இதுதான் எங்களுடைய வெற்றியின் ரகசியம்! இதுதான் தமிழ்நாட்டின் வளர்ச்சியின் ரகசியம்! மக்களுக்கு உண்மையாக இருந்து, உண்மையான வளர்ச்சியை உருவாக்குவோம்! இந்தியாவின் முதன்மை மாநிலமாக இருக்கின்ற தமிழ்நாட்டை உன்னதமான சிறந்த மாநிலமாக உருவாக்கிக் காட்டுவோம், உருவாக்கிக் காட்டுவோம் ” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories