தமிழ்நாடு

தருமபுரி மாவட்டத்திற்கு 15 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : அது என்ன?

தருமபுரி மாவட்டத்திற்கு 15 புதிய அறிவிப்புகளை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டத்திற்கு 15 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : அது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (11-7-2024) தருமபுரி மாவட்டத்தில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் விரிவாக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஊரகப்பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியின் போது, தருமபுரி மாவட்டம் சார்ந்த கீழ்க்கண்ட 7 முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் அவர்கள் தனது உரையில் அறிவித்தார்கள். மேலும், இந்நிகழ்ச்சியின்போது, தருமபுரி மாவட்ட மக்கள் வைத்த கோரிக்கைகளை ஏற்று, மேலும் கூடுதலாக 8 புதிய அறிவிப்புகளையும் செயல்படுத்திட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

தருமபுரி மாவட்டத்திற்கான 15 புதிய அறிவிப்புகளின் விவரங்கள்:-

1. 51 கோடி ரூபாய் செலவில் அரூர் அரசு மருத்துவமனையின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.

2. கடந்த சட்டமன்றத்தேர்தல் பரப்புரையின்போது கொடுத்த வாக்குறுதியான தருமபுரி – வெண்ணம்பட்டி சாலையில், புதிய ரயில் மேம்பாலம் 38 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

3. மோபிரிபட்டி–தொட்டம்பட்டியை இணைத்து, "அரூர் பேரூராட்சி”, "அரூர் நகராட்சியாக” தரம் உயர்த்தப்படும்.

4. பஞ்சப்பள்ளி, ராஜபாளையம் அணைக்கட்டுகள் 5 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்படும்.

5. சிட்லிங், அரசநத்தம் பகுதியில் பழங்குடியினர் உற்பத்தி செய்யும் ராகி, சாமை, வரகு ஆகியவற்றை மதிப்புக் கூட்டுப் பொருளாக்க கிடங்கு மற்றும் பொதுச் செயலாக்க மையம் அமைக்கப்படும்.

6. தீர்த்தமலையில் துணை வேளாண்மை விரிவாக்க மையம் அமைக்கப்படும்.

7. இந்த விழா நடைபெற்றுக் கொண்டிருக்கும், பாளையம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், பழுதடைந்த நிலையில் இருக்கும் 4 வகுப்பறைகள், அதன் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும்.

8. தருமபுரி ஒன்றியத்தில் உள்ள பெரியபட்டி மற்றும் வெள்ளாளப்பட்டி ஊராட்சிகளில், 2.54 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், அரூர் ஒன்றியத்தில் சிட்லிங் கிராமம், அம்மாப்பேட்டை, மருதிப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் 3.82 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், ஆக மொத்தம் 6 கோடியே 36 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சமுதாயக் கூடங்கள் கட்டப்படும்.

9. மொரப்பூர் மற்றும் அரூர் பகுதிகளில் உள்ள தனியார் கட்டடங்களில் செயல்பட்டு வரும் 7 குழந்தைகள் மையங்களுக்கு புதிய கட்டடம் கட்ட மையம் ஒன்றிற்கு தலா 16 இலட்சத்து 69 ஆயிரம் ரூபாய் என மொத்தமாக, ஒரு கோடியே 17 இலட்சம் ரூபாய் செலவில் 7 புதிய கட்டடங்கள் கட்டப்படும்.

10. கம்பைநல்லூர் பேரூராட்சியில் 6 வார்டுகளில் உள்ள 5 ஆயிரம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், இருமத்தூர் தென்பெண்ணை ஆறு தலைமை நீரேற்று நிலையத்திற்கு அருகில் புதியதாக திறந்தவெளி கிணறு அமைத்து, நீரேற்று குழாய் அமைக்கப்படும். மேலும் பேருந்து நிலையம் அருகில், கூடுதலாக 1.00 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி, 4.1 கி.மீ நீளத்திற்கு குடிநீர் பகிர்மான குழாய் அமைத்து, 1 கோடியே 10 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இக்குடிநீர் திட்டம் மேற்கொள்ளப்படும்.

11. அரூர் ஊராட்சி ஒன்றியம், பறையப்பட்டி புதூர் முதல் பறையப்பட்டி காலனி வரை, கணபதிப்பட்டி தார்சாலை மற்றும் வீரப்பநாயக்கன்பட்டி தார்ச் சாலைப் பணிகள் மற்றும் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம், போளையம்பள்ளி முதல் கோபிநாதம்பட்டி செல்லும் தார்ச் சாலை ஆகியவை 60 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்படும்.

12. கீரைப்பட்டி - கெளாப்பாறை சாலையில் உள்ள பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையினை ஏற்று, கெளாப்பறை ஆதிதிராவிடர் காலனி மயானம் செல்லும் சாலையில், வரட்டாறு ஓடையின் குறுக்கே 50 இலட்சம் ரூபாய் செலவில் பாலம் கட்டப்படும்.

13. சிட்லிங் ஊராட்சி, நாட்டான்வளவு முதல் கம்பாளை சாலைக்கு இடையே, பழங்குடியின மக்களின் நீண்டநாள் கோரிக்கையினை ஏற்று, காட்டாற்று ஓடையின் குறுக்கே ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டில் பாலம் அமைக்கப்படும்.

14. அரூர் சட்டமன்ற தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான பறையப்பட்டி புதூர் ஊராட்சி ஜி.கே.ரோடு கிராமத்தில் ஒரு புதிய 30,000 லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும், இருமத்தூர் ஊராட்சி, போளையம்பள்ளி ஊராட்சி, மொரப்பூர் ஊராட்சிகளில் மூன்று இடங்களில், மூன்று 60 ஆயிரம் லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளும் கட்டப்படும்.

15. பாளையம்புதூர் ஊராட்சியில் 30 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கோம்பை, மூலக்கோம்பை, ராஜீவ்காந்தி நகர் மற்றும் நாயக்கனேரி பகுதிகளில் இணைப்புச் சாலைகளைப் புதுப்பிக்கவும்; 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தேர்ச்சாலை மற்றும் மூலக்கோம்பை கிராமச்சாலைகளை சிமெண்ட் சாலைகளாக மாற்றவும்; தொம்பரகாம்பட்டி மேற்கு வன்னியர்தெருவில் 10 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 10 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, ஆழ்துளைக்கிணறு மற்றும் மின்மோட்டார் ஆகியவை அமைக்கவும் – ஆக மொத்தம் 90 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்குறிப்பிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.

banner

Related Stories

Related Stories