அரசியல்

"சத்தியம் தவறாத உத்தமரா ராமதாஸ்?" : ஆர்.எஸ்.பாரதி கண்டனம்!

பாஜகவிற்கு அடிபணியாமல், அஞ்சாமல் நின்ற உறுதிதான் தியாகம். அது பாஜக நிழலில் இருக்கும் தைலாபுரத்தில் இருப்பவர்களுக்கு எத்தனை விளக்கவுரை, பொழிப்புரை அளித்தாலும் புரியாது.

"சத்தியம் தவறாத உத்தமரா ராமதாஸ்?" : ஆர்.எஸ்.பாரதி கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து பிணையில் விடுவிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி மீதும், அரசின் மீதும் குற்றச்சாட்டு வைத்த பா.ம.க நிறுவனர் ராமதாஸிற்கு, தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,‘செந்தில் பாலாஜி தியாகி என்றால் ஏமாந்தவர்கள் துரோகிகளா? நீதிபதியாக இருக்க வேண்டிய முதலமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழக்கறிஞராகக் கூடாது’ என அறிக்கை விட்டிருக்கிறார் டாக்டர் ராமதாஸ்.

தைலாபுரம் அரசியல் பயிலரங்கத்தில் பாட்டாளிகளுக்கு வகுப்பெடுக்கும் ஆசிரியர் ராமதாஸ், அரசியல் அறியாமல் அரைவேக்காடாய் அறிக்கை விட்டிருக்கிறார். செந்தில் பாலாஜி மீது உள்ள வழக்கு விவரத்தை அதற்குப் பின்னால் இருக்கும் அரசியலையும் முதலில் அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

செந்தில் பாலாஜி மீது 2015, 2017 மற்றும் 2018-ல் மூன்று வழக்குகள் பதியப்பட்டன. 2015-ல் பதிவான வழக்கு பற்றி அப்போதிருந்த விவரங்களின் அடிப்படையில்தான் 2016 சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் அன்றைய எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், செந்தில் பாலாஜி குறித்துப் பேசினார்.

ஆனால், செந்தில் பாலாஜி திமுகவில் இணைய விருப்பம் தெரிவித்த போது, தான் குற்றமற்றவன். தன் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியால்தான் இந்த வழக்குகள் புனையப்பட்டது எனச் சொன்னார். டி.டி.வி. தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ-கள் குழு, ஆட்சியிலிருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என ஆளுநரிடம் மனு அளித்ததால்தான், செந்தில் பாலாஜி உள்ளிட்ட 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதோடு அவர் மீது வழக்குகளும் புனையப்பட்டன.

இந்த உண்மைகள் ராமதாஸ் அவர்களுக்குத் தெரியும். எடப்பாடி பழனிசாமி அரசைக் காப்பாற்றிக் கொள்ள செந்தில் பாலாஜி மீது வழக்குப் போட்டார். ராமதாஸ் தன் இருப்பை காட்டிக் கொள்ள அறிக்கை விட்டிருக்கிறார்.

"சத்தியம் தவறாத உத்தமரா ராமதாஸ்?" : ஆர்.எஸ்.பாரதி கண்டனம்!

தேவசகாயம் என்பவரின் புகாரின் மீது 29/10/2015 அன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதில் செந்தில் பாலாஜியின் மீது எந்த குற்றமும் சுமத்தப்படவில்லை. முதல் தகவல் அறிக்கையில் அவர் குற்றவாளியாகவும் சேர்க்கப்படவில்லை. கோபி அளித்த புகாரின் பேரில் உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் 20.06.2017-ல் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் 12 குற்றவாளிகள் சேர்க்கப்பட்டிருந்தனர். அதில் செந்தில் பாலாஜி அவர்கள் குற்றவாளியாகச் சேர்க்கப்படவில்லை.

மீண்டும் அருண் குமார் என்பவர் 2019-ல் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கின் பேரில் மேல் புலன் விசாரணை செய்யப்பட்டு, செந்தில் பாலாஜி அவர்களையும் குற்றவாளியாகச் சேர்த்து 08/03/2021 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. செந்தில் பாலாஜி 06.09.2017 அன்று அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் புகார் அளித்த காரணத்தினாலேயே, இந்த வழக்குகள் அவர் மீது பொய்யாகச் சுமத்தப்பட்டன என்பது தெளிவாகிறது.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடர இசைவானைக் கேட்டு வந்த கோப்பில், எந்த தாமதமும் இல்லாமல் முதல்வர் அவர்கள், ஆட்சி வேறு, கட்சி வேறு என்ற நிலையில் கோப்புகளில் உள்ள அம்சங்களை மட்டுமே கவனித்து தன் சொந்த விருப்பு வெறுப்புகளை கடந்து கடமையாற்றியது எல்லாம் ராமதாஸ் அவர்களுக்குப் புரியவில்லையா? இல்லை புரியாமல் நடிக்கிறாரா?

செந்தில் பாலாஜி அவர்கள் தியாகம் செய்துவிட்டு சிறை செல்லவில்லைதான். ஆனால், பொய் வழக்குகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட பணப்பரிமாற்ற வழக்கில், ஒன்றிய அரசின் எதேச்சாதிகார போக்கால் அவரை கைது செய்து, அழுத்தம் தந்து துன்புறுத்தி வாக்குமூலம் பெற்று, திமுகவின் மீது மேலும் பொய் வழக்குகள் போடலாம் என்ற கனவை அவர் பொய்யாக்கினார்.

அதற்காக 471 நாட்கள் சிறையில் இருந்தார். முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது, அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜியிடம், “ஏன் நீங்கள் பாஜகவில் சேரக்கூடாது?” என கேட்டனர் என்ற அதிர்ச்சி தகவலைச் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் சொன்னார்.

பாஜகவில் அவரை சேர்த்து திமுகவுக்கு எதிராகக் களமாட நினைத்தார்கள். அதற்கு அடிபணியாமல், அஞ்சாமல் நின்ற உறுதிதான் தியாகம். அது நல்லெண்ணம் கொண்டோருக்கு மட்டுமே புரியும். பாஜக நிழலில் இருக்கும் தைலாபுரத்தில் இருப்பவர்களுக்கு எத்தனை விளக்கவுரை, பொழிப்புரை அளித்தாலும் புரியாது.

banner

Related Stories

Related Stories