அரசியல்

அன்னபூர்ணா விவகாரம் : ஆணவக்கூட்டத்தின் அக்கிரமங்களுக்கான சாட்சி - நிர்மலாவை விமர்சித்த முரசொலி !

அன்னபூர்ணா விவகாரம் : ஆணவக்கூட்டத்தின் அக்கிரமங்களுக்கான சாட்சி - நிர்மலாவை விமர்சித்த முரசொலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி தலையங்கம் ( 16-09-2024)

ஆணவத்தின் உச்சம் பாஜக.!

மதவாதம் - பிளவுவாத சக்தியான பா.ஜ.க.வின் ஆணவத்தின் உச்சம்தான் ‘அன்னபூர்ணா’ உணவக உரிமையாளரை இழிவுபடுத்திய நிகழ்வு ஆகும். தன்னிடம் வேண்டுகோள் வைத்தார் என்ற ஒரே காரணத்துக்காக, அவரை வரவழைத்து மன்னிப்புக் கேட்க வைத்துள்ளார் ‘நீதியற்ற துறை’ அமைச்சர் நிர்மலா சீதாராமன். மன்னிப்புக் கேட்கும் காட்சியை பதிவு செய்து, உலகத்துக்கு காட்டி இருக்கிறார் நிர்மலா சீதாராமன். இதன் மூலம் அவமானப்பட்டு நிற்பது அந்த உணவக உரிமையாளர் அல்ல, நிர்மலா சீதாராமன்தான். அதைப் பற்றி எல்லாம் கவலைப்படும் ரகம் அல்ல அவர்.

கோவை அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன், ஒன்றிய பா.ஜ.க. அரசின் கொடூர வழிப்பறிக் கொள்கையான ஜி.எஸ்.டி.யை எதிர்க்கவில்லை. ஜி.எஸ்.டி.யை ஏன் போடுகிறீர்கள் என்று கேட்கவில்லை. இது அதிகமான வரியாக இருக்கிறது என்றும் சொல்ல வில்லை. அநியாய வரியாக இருக்கிறது என்றும் சொல்லவில்லை. ஜி.எஸ்.டி.யை மொத்தமாக எடுத்து விடுங்கள் என்றும் சொல்லவில்லை. இந்த வரி முறையால் எங்களால் தொழில் செய்ய முடியவில்லை என்றும் சொல்லவில்லை. இதனால் மக்கள் துன்பப்படுகிறார்கள் என்றும் அவர் சொல்லவில்லை. பா.ஜ.க.வை விமர்சிக்கவில்லை. நிர்மலா சீதாராமனை விமர்சிக்கவில்லை.

அவர் சொன்னது, ‘எவ்வளவு வரி வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள். ஆனால் எல்லாப் பொருளுக்கும் ஒரே மாதிரி வரியாக போடுங்கள் மேடம்’ என்றுதான் அன்னபூர்ணா உரிமையாளர் சொன்னார். இதுவே அநியாயமான கருத்துத்தான். அது இருக்கட்டும்.

அன்னபூர்ணா விவகாரம் : ஆணவக்கூட்டத்தின் அக்கிரமங்களுக்கான சாட்சி - நிர்மலாவை விமர்சித்த முரசொலி !

“எங்களுக்கு ஒரே ஒரு பிரச்சினைதான் இருக்கிறது. வருகிற மக்கள் சண்டை போடுகிறார்கள். உங்களுக்கு பக்கத்தில் இருக்கும் எம்.எல்.ஏ.வான வானதி சீனிவாசனும் சண்டை போடுகிறார். ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு விதமான ஜி.எஸ்.டி. இருக்கிறது. பன்னுக்கு ஜி.எஸ்.டி. கிடையாது. பன்னுக்குள் இருக்கிற கிரீம்க்கு 18 விழுக்காடு ஜி.எஸ்.டி. இருக்கிறது. வாடிக்கையாளர் என்ன சொல்கிறார்கள் என்றால், பன்னையும் கிரீமையும் தனித்தனியாக கொடுங்க. நாங்களே உள்ளே வைத்து சாப்பிட்டுக் கொள்கிறோம் என்கிறார்கள். எங்களால் கடை நடத்த முடியவில்லை. அதனால் எல்லாத்துக்கும் ஜாஸ்தி பண்ணிடுங்க. இனிப்புக்கு 5 சதவிகித வரி, காரத்துக்கு 12 சதவிகித வரி போடுறீங்க. இதை வானதி சீனிவாசனிடம் கேட்டா, ‘வடநாட்டுல இனிப்பு அதிகம் சாப்பிடுறாங்க, அதுனால குறைவு’ என்று சொல்கிறார். தமிழ்நாட்டுல ஸ்வீட், காரம், காப்பி இப்படித்தான் சாப்பிடுவோம்” என்று சொல்லி இருக்கிறார் அன்னபூர்ணா உரிமையாளர்.

“மாநில வாரியாக வரிப் போடுவது இல்லை” என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொன்னதும், “இந்தியா முழுவதும் ஒரே வரியா ஜி.எஸ்.டி.யை ஏற்றிவிட்டாலும் பரவாயில்லை. ஒரே மாதிரி வரி போடுங்க. ஒவ்வொன்றுக்கும் தனித்தனியா வரி போடாதீங்க. ஏனென்றால், பில் போடுவதற்கு கம்யூட்டரே திணறுகிறது” என்று சொல்கிறார் உணவக உரிமையாளர்.

அதிகப்படியாக வரிப் போடுகிறீர்கள் என்று அவர் சொல்லவில்லை. ‘அதிகப்படியாக எவ்வளவு வரி வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள். ஒரே மாதிரி போடுங்கள்’ என்றுதான் சொல்கிறார். இதைக் கூட அமைச்சர் நிர்மலாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. சிறு ஆலோசனையைக் கூட அந்த ஆணவக் கூட்டத்தால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

தன்னை வந்து சந்தித்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் நினைத்ததும், மன்னிப்புக் கேட்கும் காட்சியை வீடியோவாக எடுத்து பொதுவெளியில் பரப்பியதும், ஆணவக்கூட்டத்தின் அக்கிரமங்களுக்கு அநியாய சாட்சியங்களாக வரலாற்றில் பதிவாகி இருக்கிறது.

அன்னபூர்ணா விவகாரம் : ஆணவக்கூட்டத்தின் அக்கிரமங்களுக்கான சாட்சி - நிர்மலாவை விமர்சித்த முரசொலி !

நிர்மலா சீதாராமனைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு இது அதிர்ச்சியான காட்சிகள் அல்ல. பெங்களூரில் ஒரு மாணவர் கேள்வி கேட்டார். ‘சிங்கப்பூரில் இப்படி எல்லாம் கேள்வி கேட்க முடியாது’ என்று சொன்னவர் இவர்தான்.

ஜி.எஸ்.டி.யால் என்னென்ன பொருள்கள் எவ்வளவு விலை உயர்கிறது என்று தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சொன்னபோது, ‘இறுதிச் சடங்கு நடத்துவதற்கு ஜி.எஸ்.டி. வரி விலக்கு’ என்று பதில் அளித்தவர்தான் இந்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். ‘இந்தியாவில் இறுதிச் சடங்கு, உடல் அடக்கம், உடல் தகனம் போன்ற சவக்கிடங்கு சேவைகளுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படவில்லை. முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது” என்று நாடாளுமன்றத்தில் 2022 ஆம் ஆண்டு சொன்னவர்தான் அவர். அவரிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

கழக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி பேசும் போது குறுக்கிட்ட நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘உங்க தமிழ்நாடு’ என்றுதான் பதில் சொல்லத் தொடங்கினார். இவரைத்தான் தமிழ்நாட்டின் பிரதிநிதியாக கேபினெட் அமைச்சர் ஆக்கி இருப்பதாக பா.ஜ.க. சொல்லிக் கொள்கிறது. அவரே தன்னை தமிழ்நாடு என்று சொல்லிக் கொள்ள வெட்கப்படுபவர்.

ஒன்றிய நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு எந்த நிதியும் இல்லை. இதைப் பற்றி கேட்டபோது, “மாநிலங்களுக்கு 1.50 லட்சம் கோடியை வட்டியில்லாத கடனாக தந்திருக்கிறோமே, இது போதாதா?” என்று கேட்டவர் தான் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். ‘சம்பளம் கேட்டா, கடனா வாங்கிக்க’ என்று சொல்வதைப் போன்ற கொடூரமல்லவா இது? இப்படிப்பட்டவர்,

ஒரு காட்சியை நினைவூட்டிப் பாருங்கள். உயர் பதவியில் இருந்த ஒரு பெண் வி.வி.ஐ.பி.யை, ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, பொதுமேடையிலேயே கையை உயர்த்தி கண்டித்தார் அல்லவா? நிர்மலா சீதாராமனை அந்த வி.வி.ஐ.பி. கிண்டலடித்தார் என்பதற்காகத்தான் அது நடந்ததாக பா.ஜ.க.வினரே பேசிக் கொள்கிறார்கள். எத்தகையவர்களிடம் மக்கள் சிக்கிக் கொண்டுள்ளார்கள் என்பதற்கு இவை எல்லாம் உதாரணங்கள்.

banner

Related Stories

Related Stories