மு.க.ஸ்டாலின்

சென்னையில் மழை வந்தவுடன் சேலத்திற்கு சென்று பதுங்கியவர்தான் பழனிசாமி - முதலமைச்சர் விமர்சனம் !

சென்னையில் மழை வந்தவுடன் சேலத்திற்கு சென்று பதுங்கியவர்தான் பழனிசாமி - முதலமைச்சர் விமர்சனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மறைந்த கும்மிடிப்பூண்டி கி.வேணு அவர்களுடைய பேரனும், திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் உமா மகேஸ்வரி அவர்களின் மகனுமான கோ. ஸ்டாலின் – யுவஸ்ரீ ஆகியோரது திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். அதனைத் தொடர்ந்து பேசிய அவர், "இந்த மணவிழா நிகழ்ச்சிக்கு தலைமைப் பொறுப்பேற்று, மணவிழாவை நடத்தி வைத்து அதேநேரத்தில், மணமக்களை வாழ்த்தக்கூடிய ஒரு சிறப்பான வாய்ப்பினைப் பெற்றமைக்கு நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்; பெருமைப்படுகிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில், ஆட்சியில் இருந்தாலும், இல்லை என்று சொன்னாலும், மக்கள் பணியை பொறுத்தவரையில், நாம் என்றைக்கும் இருப்போம்; மக்களுக்காக பாடுபடுவோம்; பணியாற்றுவோம் என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள் உண்டு. அதனால்தான், ஆறாவது முறையாக ஆட்சிக்கு வந்திருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகம், இன்றைக்கு ஏராளமான திட்டங்களை, சாதனைகளை மக்களுக்காக செய்திருக்கிறது. என்னென்ன உறுதிமொழிகளை தந்தோமோ, தந்த உறுதிமொழிகள் மட்டுமல்ல, தராத திட்டங்களையும், வாக்குறுதிகளையும் இன்றைக்கு நம்முடைய அரசு செய்து கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கெல்லாம் நன்றாக தெரியும். மக்களால் போற்றப்படக்கூடிய ஒரு ஆட்சியாக இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகம் இருந்து கொண்டிருக்கிறது.

சென்னையில் மழை வந்தவுடன் சேலத்திற்கு சென்று பதுங்கியவர்தான் பழனிசாமி - முதலமைச்சர் விமர்சனம் !

ஆனால் மக்களால் ஓரங்கட்டப்பட்டிருக்கக்கூடிய பழனிசாமி பொறாமை தாங்க முடியாமல், திராவிட முன்னேற்றக் கழகம் அரசு இப்படியெல்லாம் சாதனைகளை செய்து மக்களுடைய உள்ளத்தில் ஆழமாக பதிந்து கொண்டிருக்கிறதே; இன்னமும் அவர்களுடைய செல்வாக்கு வளர்ந்து கொண்டிருக்கிறதே என்கின்ற பொறாமையின் காரணமாக செல்லாக்காசாக இருக்கக்கூடிய பழனிசாமி இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியினுடைய செல்வாக்கு சரிந்து கொண்டிருக்கிறது என்று தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்.

அதோடு மட்டுமல்ல, திமுக-வின் கூட்டணி விரைவில் உடையப்போகிறது; இதுவரை கற்பனையில் தான் மிதந்து கொண்டிருந்தார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போது அவர் ஜோசியராகவே மாறியிருக்கிறார். எப்போது அவர் ஜோசியராக மாறினார் என்று எனக்கு புரியவில்லை. விரக்தியின் எல்லைக்கே போயிருக்கிறார். ஜோசியம் பார்த்துக் கொண்டிருக்கக்கூடிய அந்த பழனிசாமி அவர்களைப் பார்த்து நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, எங்களுடைய கூட்டணி என்பது தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட கூட்டணி அல்ல; எங்களுடைய கூட்டணி என்பது பதவிக்கு வரவேண்டும் என்ற கூட்டணி அல்ல; எங்களுடைய கூட்டணி என்பது கொள்கை கூட்டணி என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது!

எங்கள் கூட்டணிக்குள் விவாதம் நடக்கலாம்; எங்களுக்குள் பேச்சுக்கள் நடக்கலாம்; எங்களுக்குள் பல விவாதங்கள் நடக்கின்றபோது அதில் விரிசல் ஏற்பட்டுவிட்டது என்று யாரும் கருதிவிடக் கூடாது! விவாதங்கள் இருக்கலாமே தவிர விரிசல் ஏற்படவில்லை; விரிசல் ஏற்படாது. மிகவும் ஆவலாக காத்துக்கொண்டிருக்கிறார்கள். பக்கத்து வீட்டில் என்ன தகராறு என்று கவனித்துக் கொண்டிருப்பார்களே, அதுபோல இன்றைக்கு பக்கத்து கட்சியில்; தன்னுடைய கட்சியை எப்படி வளர்ப்பது என்ற யோக்கியதை இல்லை; வளர்ந்து கொண்டிருக்கக்கூடிய கட்சியைப் பார்த்து வளர்ந்து இன்றைக்கு மக்களிடத்தில் ஓங்கி கம்பீரமாக நின்று கொண்டிருக்கக்கூடிய நம்முடைய இயக்கத்தைப் பார்த்து, நம்முடைய அரசை பார்த்து, இன்றைக்கு ஜோசியம் பார்த்து கொண்டிருக்கக்கூடிய பழனிசாமி சொல்கிறார், திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில், எதிர்க்கட்சியாக இருந்தபோதும் மழைக்காலத்தில் மக்களை சந்தித்தோம். இப்போது ஆட்சி என்கின்ற அதிகாரத்தில் இருக்கின்ற காரணத்தினால், இன்றைக்கும் மக்களை சந்தித்து, மக்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்டறிந்து அந்தப் பணிகளை செய்கிறோம்.

சென்னையில் மழை வந்தது. முதலமைச்சராக நான் வந்தேன். துணை முதலமைச்சராக இருக்கும் தம்பி உதயநிதி வந்தார். அமைச்சர் பெருமக்கள் வந்தார்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் வந்தார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெருத்தெருவாக வந்தார்கள். அதேபோல, ஊராட்சி, உள்ளாட்சி, நகராட்சி, பேரூராட்சியில் இருக்கக்கூடிய பிரதிநிதிகள் அத்தனைபேரும் மக்களைத் தேடி வந்தார்கள். குறைகளை கேட்டார்கள். பிரச்சனைகளை தீர்த்து வைத்தார்கள். இது தி.மு.க. ஆனால், மழை வந்தவுடன் சேலத்திற்கு சென்று பதுங்கியவர்தான் நம்முடைய பழனிசாமி . அதைப்பற்றி கவலைப்பட மாட்டார். ஆட்சியில் இருந்தாலும் வரமாட்டார். ஆட்சியில் இல்லாத நேரத்திலும் வரமாட்டார். ஏதோ கனவு கண்டிருக்கிறார். அதற்காக ஜோசியம் எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆனால், ஒன்றை மட்டும் நான் உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன்.

சென்னையில் மழை வந்தவுடன் சேலத்திற்கு சென்று பதுங்கியவர்தான் பழனிசாமி - முதலமைச்சர் விமர்சனம் !

திமுக-வை பொறுத்தவரைக்கும், கூட்டணி என்று சொன்னால், அது கொள்கை கூட்டணியாக மட்டுமல்ல, மக்கள் கூட்டணியாக இன்றைக்கு இருந்து கொண்டிருக்கிறது. கனவு காணவேண்டாம். உறுதியாக சொல்கிறேன். 2026 மட்டுமல்ல, அதைத் தொடர்ந்து வரக்கூடிய எந்தத் தேர்தலாக இருந்தாலும் திமுக தான் வெற்றி பெறும் என்பதில் யாருக்கும் எந்தவித சந்தேகம் இருக்க வேண்டியதில்லை.

அந்த உணர்வோடு, தன்னுடைய வாழ்நாள் இறுதிவரையில் வாதாடி, போராடி, உழைத்திருக்கக்கூடிய வேணு அவர்களின் இல்லத்தில் நடைபெறக்கூடிய திருமண நிகழ்ச்சியில் இதை சொல்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மகிழ்ச்சியோடு, மணமக்களை நான் பல்லாண்டு காலம் வாழ்க, வாழ்க என்று வாழ்த்துகிறேன். இன்றைக்கு மணமகனாக வீற்றிருக்கக்கூடிய மணமகன் பெயர் ஸ்டாலின், என்னுடைய பெயர் என்று சொல்வதைவிட ரஷ்ய அதிபராக இருந்த ஸ்டாலின்-உடைய பெயர். இந்தப் பெயரை பொறுத்தவரைக்கும், இலட்சிய உணர்வோடு இந்தப் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. அதைத்தான் தலைவர் கலைஞர் அவர்கள் அந்த உணர்வோடுதான் எனக்கும் அந்தப் பெயரை வைத்தார். இன்றைக்கு வேணு அவர்களின் குடும்பத்தில் மணமகனாக வீற்றிருக்கக்கூடிய அந்தப் பேரனுக்கு ஸ்டாலின் என்று பெயர் சூட்டியிருக்கிறார். ஆனால் மணமகளுடைய பெயரை பார்க்கும்போது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது; யுவஸ்ரீ என்றிருக்கிறது. பெயர் வைத்ததைப் பற்றி நான் தவறு என்று சொல்லவில்லை. ஆனால் உங்களுக்கு பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள் என்று அன்போடு என்னுடைய வேண்டுகோளை வைக்க விரும்புகிறேன்.

அந்த உணர்வோடு என்னுடைய வேண்டுகோளை வைத்து மணக்கோலம் பூண்டிருக்கக்கூடிய மணமக்கள் புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் சொல்லியிருக்கக்கூடிய வீட்டிற்கு விளக்காய்; நாட்டிற்கு தொண்டர்களாய் வாழுங்கள்; வாழுங்கள் என்று வாழ்த்தி விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்" என்று கூறினார்.

banner

Related Stories

Related Stories