உலகம்

சூடானில் சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்யாவை சேர்ந்த ராணுவ விமானம் : முழு விவரம் என்ன ?

சூடானின் வான்பரப்பில் பறந்துகொண்டிருந்த ரஷ்யாவை சேர்ந்த சரக்கு விமானத்தை துணை ராணுவ படையினர் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சூடானில் 2021-ம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. அதன் பின்னர் சூடானை ராணுவ ஆட்சியாளர் அப்துல் பத்தாஹ் அல் புர்ஹான் ஆண்டு வருகிறார், சூடானின் ராணுவம் முழுக்க முழுக்க இவரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது.

சூடானில் உள்ள சுரங்கங்களை பாதுகாப்பதற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் துணை ராணுவ படையை (RSF) அன்றைய ஆட்சியாளர்கள் உருவாக்கினார். அதன் தளபதியாக முகமது ஹம்தன் டாக்லோ இருந்து வருகிறார். ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் இடையே அடிக்கடி மோதல் போக்கு ஏற்பட்டுவந்துள்ளது.

இதன் காரணமாக விரைவில் துணை ராணுவ படையை கலைத்து அதனை ராணுவத்தில் இணைக்க ராணுவ ஆட்சியாளர் அப்துல் பத்தாஹ் அல் புர்ஹான் திட்டமிட்டிருந்தார். ஆனால் இதனை துணை ராணுவ படையின் தளபதி முகமது ஹம்தன் டாக்லோ கடுமையான எதிர்த்து வந்துள்ளார்.

இதன் காரணமாக சில மாதங்களுக்கு முன்னர் திடீரென துணை ராணுவ படையினர் நாடு முழுவதும் பரவி ராணுவத்தினர் மேல் தாக்குதலைத் தொடங்கியதால் இரு தரப்புக்கும் இடையே உள்நாட்டுப் போர் தொடங்கிய நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், சூடானின் வான்பரப்பில் பறந்துகொண்டிருந்த ரஷ்யாவை சேர்ந்த சரக்கு விமானத்தை துணை ராணுவ படையினர் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய ராணுவத்திற்கு சொந்தமான இந்த விமானம் ஆயுதங்களை கொண்டு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதா? என்ற விவரம் இதுவரை வெளியாகாத நிலையில், இது குறித்து எந்த கருத்தையும் ரஷ்யா தெரிவிக்காமல் உள்ளது. அதே நேரம் தவறுதலாக இந்த விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதாக துணை ராணுவ படை தளபதி ஒருவர் கூறியுள்ளார்.

Also Read: ஜார்க்கண்ட் : JMM கட்சியில் இணைந்த முக்கிய தலைவர்கள்... பாஜகவுக்கு பெரும் பின்னடைவு !