உலகம்

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸின் அடுத்த தலைவரும் பலி... யஹ்யா சின்வாரின் கடைசி நிமிடம் என வீடியோ வெளியீடு !

இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.

இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.

ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் காசாவின் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்த தாக்குதல் இதுவரை 41 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.

Yahya Sinwar last minute

இதனிடையே ஈரான் புதிய அதிபர் மசூத் பெசெஸ்கியனின் பதவியேற்பு விழாவுக்காக இஸ்மாயில் ஹனியே ஈரான் தலைநகர் தெக்ரான் சென்றிருந்தபோது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து யஹ்யா சின்வார் என்பவர் ஹமாஸ் அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் யஹ்யா சின்வார் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. யஹ்யா சின்வார் இருந்த கட்டடத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அவரின் கடைசி நிமிடம் என ஒரு காணொளியை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது. அதில் சிதிலமடைந்த ஒரு கட்டடத்தில் அவர் இருப்பதை போலவும், அவரை ட்ரோன் ஒன்று வீடியோ எடுப்பதை போலவும் காட்சி வெளியிடப்பட்டுள்ளது. இஸ்ரேல் ராணுவத்தின் இந்த தாக்குதலை பல்வேறு தரப்பினரும் உறுதி படுத்தியுள்ளனர்.