உலகம்

லெபனானில் இருந்த ஐ.நா அமைதி படை மீது இஸ்ரேல் தாக்குதல்... அமெரிக்கா கடும் கண்டனம் !

கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.

ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.காசாவில் இஸ்ரேல் மேற்கொண்ட போர் தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் இந்த தாக்குதலில் 41 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காசா சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போரினை அறிவித்ததும் ஹமாஸின் கூட்டாளியும், லெபனானில் செயல்படும் அமைப்புமான ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் இஸ்ரேல் லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தியதோடு ஹிஸ்புல்லாவின் முக்கிய தலைவர்களை குறிவைத்து தாக்குதலும் நடத்தி வருகிறது .

அவ்வாறு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் முக்கிய படை தளபதி இப்ராஹிம் அகில் கொல்லப்பட்டார். அது மட்டுமின்றி ஹிஸ்புல்லா அமைப்பின் உச்சபட்ச தலைவரும் அந்த அமைப்பின் பொதுசெயலாளருமான ஹசன் நஸ்ருல்லாவும் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவரோடு ஹிஸ்புல்லாவின் முக்கிய தலைவர்களும் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் அறிவித்தது.

அதோடு நிற்காத இஸ்ரேல் ஹிஸ்புல்லா அமைப்பினர் செயல்படும் லெபானானின் மீது படையெடுத்துள்ளது. அதனைத் தொடர்ந்து நேற்று ஹிஸ்புல்லாவின் முக்கிய உறுப்பினர் வாபிக் சபி என்பவரை குறி வைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்ட நிலையில், ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.

மேலும், இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலில் லெபனானில் இருந்த இந்தோனேஷியாவின் பிரதிநிதிகள் 2 பேர் பலியாகினர். அதே போல மற்றொரு இடத்தில் நடைபெற்ற தாக்குதலில் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படை வீரர்கள் இரண்டு பேர் காயமடைந்தனர். இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, ஐ.நா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

Also Read: ரஷ்ய எண்ணைய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் தாக்குதல் : பற்றியெரிந்த கிரீமியா எண்ணெய் கிடங்கு !