உலகம்

இலங்கை நாடாளுமன்றத்தை கலைக்க உத்தரவு : அதிபரின் கட்சிக்கு 3 உறுப்பினர்கள் மட்டுமே இருப்பதால் நடவடிக்கை !

இலங்கையின் எட்டாவது அதிபர் தேர்தல் கடந்த செப்டம்பர் 21-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 38 பேர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் கடந்த அதிபர் தேர்தலில் 3 % வாக்குகளை பெற்ற அநுர குமார திசநாயக்கே இடதுசாரி கட்சியான மக்கள் விடுதலை முன்னணி கட்சி தலைமையின தேசிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிட்டார்.

இலங்கை அதிபர் தேர்தல் முடிவடைந்த நிலையில், உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் யாருக்கும் 51 % வாக்குகள் கிடைக்காத நிலை ஏற்பட்டது. இதனால் முதல் இரண்டு இடங்களை பிடித்த அநுர குமார திசநாயக்கே ,சஜித் பிரேமதாசா ஆகிய இருவரில் யார் அதிபர் வேட்பாளர் என்பதை அறிய இரண்டாம் கட்ட வாக்குஎண்ணிக்கை நடைபெற்றது.

அதன் முடிவில் 55% வாக்குகளை பெற்று அநுர குமார திசநாயக்கே அதிபராகத் தேர்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் இலங்கையின் 9-வது அதிபராக அநுர குமார திசநாயக்கே பதவியேற்றுக்கொண்டார். அநுர குமார திசநாயக்கேவின் தேசிய மக்கள் சக்தி கூட்டணிக்கு நாடாளுமன்றத்தில் 3 உறுப்பினர்களே உள்ள நிலையில், பாராளுமன்றத்தை கலைக்கும் அதிபரின் அதிகாரத்தை பயன்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

sri lankan parliament

அதன்படி இலங்கையின் நாடாளுமன்றத்தைக் கலைக்க உத்தரவிட்டதுடன், நவம்பர் 14-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள அநுர குமார திசாநாயக்கே அறிவித்துள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தின் பதவி காலம் அடுத்த ஆண்டு வரை உள்ள நிலையில் தற்போது அது கலைக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசியலமைப்பின்படி அதிபரே உச்சபட்ச அதிகாரம் கொண்டவராவார். நாட்டின் அமைச்சரைவும் அதிபரின் தலைமையில்தான் செயல்படும். மேலும் அந்நாட்டின் பிரதமரும் அதிபரின் பிரதிநிதியாகவே கருதப்பட்டு செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: நவீன கர்ணர் என்று புகழப்பட்ட பிரபல யூடியூபர் மீது பாலியல் புகார் : பின்னணி என்ன? ஆந்திராவில் அதிர்ச்சி !