உலகம்

ஆயுத புரட்சி To தேர்தல் அரசியல் : இலங்கையின் முதல் கம்யூனிச அதிபர் மற்றும் அவரின் கட்சியின் பின்னணி என்ன?

இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் அமைந்துள்ள அநுராதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகனான அநுர குமார திசநாயகே, 1988 ஆம் ஆண்டு ஜே.வி.பி எனப்படும் இடதுசாரி கட்சியான மக்கள் விடுதலை முன்னணியில் இணைந்தார்.

1995 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியின் மாணவர் அமைப்பின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்ட அவர், 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் மூலம் முதல்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

படிப்படியாக முன்னேறி 2014 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் பொறுப்புக்கும் வந்தார். 2022-ம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிதான் மக்களை, ஜனதா விமுக்தி பக்கம் திரும்ப வைத்தது. அப்போது நடைபெற்ற போராட்டங்களை முன்நின்று நடத்தியதில் அநுர குமார திசநாயகேவுக்கு முக்கிய பங்கிருக்கிறது.

கடந்த அதிபர் தேர்தலில் 3. 1 சதவிகித வாக்குகள் மட்டுமே அநுரா பெற்றிருந்த நிலையில், தற்போது காலம், சூழல் மாறி, மக்களின் மனநிலையில் ஏற்பட்ட பெரிய மாற்றம், அநுர குமார திசநாயகேவை அதிபர் பதவியில் அமர வைத்திருக்கிறது.

இதன் மூலம் இலங்கையின் முதல் இடதுசாரி அதிபராக அநுர குமார திசநாயக்கே பொறுப்பேற்கவுள்ளார். அவரின் மக்கள் விடுதலை முன்னணி கட்சி ஒரு காலத்தில் இலங்கை அரசை எதிர்த்து ஆயுதபுரட்சியை மேற்கொண்டது. பல்வேறு காவல்நிலையங்களை மக்கள் விடுதலை முன்னணி கைப்பற்றியதோடு, தென்னிலங்கையின் சில பகுதிகளையும் அந்த அமைப்பு கைப்பற்றியது.

JVP Military Protest

அதன் பின்னர் மக்கள் விடுதலை முன்னணியின் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கொல்லப்பட்ட நிலையில், இந்த புரட்சி நசுக்கப்பட்டது. அந்த அமைப்புக்கும் தடை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆயுத புரட்சியை கைவிட்டு மக்கள் விடுதலை முன்னணி தேர்தல் அரசியலில் கால்பதித்தது.

இந்த சூழலில் தற்போது நடைபெற்ற அதிபர் தேர்தலில் அந்த கட்சிக்கு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது. இது இலங்கை வரலாற்றில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்த வெற்றியைத் தொடர்ந்து அடுத்து வரும் இலங்கை நாடாளுமன்றத் தேர்தலிலும் மக்கள் விடுதலை முன்னணி அதிக இடங்களைக் கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.