உலகம்

"ஒரே இரவில் இராணுவத்தால் அழிக்கப்பட்டது என் குடும்பம்" - ஷேக் ஹசீனா கூறியது என்ன ?

வங்கதேச நாட்டின் பிரதமராக அவாமி லீக் கட்சியை சேர்ந்த ஷைக் ஹசினா 2009 -ம் ஆண்டு இரண்டாம் முறையாக ஆட்சி பொறுப்பேற்றார். அதன்பின்னர் தோல்வியே தழுவாமல் தொடர்ந்து 5 முறை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று பிரதமராக இருந்து வந்தார்.

ஆனால், வங்கதேசத்தில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டதை கண்டித்து வங்கதேசத்தில் நடந்த போராட்டத்தில் 300 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அந்த போராட்டம் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக சற்று தணிந்த நிலையில், சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் போராட்டம் வெடித்தது.

இந்த போராட்டத்தில் தீவிரமடைந்ததை உணர்ந்த வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு தப்பிச்சென்றார். அதனைத் தொடர்ந்து வங்கதேசத்தில் இடைக்கால அரசு தற்போது பொறுப்பேற்றுள்ளது. இந்த நிலையில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது அஞ்சலி என ஷேக் ஹசீனா கூறியதாக அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

இது குறித்து, ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வசேத்தின் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டிருந்த அறிக்கையில், "ஆகஸ்ட் 15, 1975 அன்று என் தந்தை முஜிபுர் ரஹ்மான், என் அண்ணன்கள் அவர்களது மனைவிகள்,எனது உறவினர்கள், நண்பர்கள் என ஒருவர் விடாமல் ஒரே இரவில் இராணுவத்தால் அழிக்கப்பட்டனர். தற்போது போராட்டம் என்ற பெயரில் நாடு முழுவதும் நடந்த கொடூர அழிவால் பலரை இழந்திருக்கிறோம்.

என்னைப் போலவே, தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு, எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். யாருடைய தலைமையில் நமக்கு சுதந்திரம் கிடைத்ததோ அந்த சுதந்திரப் போராட்ட வீரரான முஜிபுர் ரஹ்மானின் சிலை சிதைக்கப்பட்டு அவமரியாதை செய்யப்பட்டிருக்கிறது. சுதந்திரப் போராட்ட வீரர்கள் இழிவுபடுத்தப்பட்டுள்ளனர். எனது நாட்டு மக்களிடம் இதற்கான நீதியைக் கோருகிறேன்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Also Read: பல முறை மன்னிப்பு கேட்டும் திருந்தாத பாபா ராம்தேவ் - அலோபதி மருத்துவத்துக்கு எதிராக மீண்டும் அவதூறு !