உலகம்

வங்கதேசத்தில் தொடரும் போராட்டம் : மாணவர்கள் கெடு காரணமாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவி விலகல் !

பாகிஸ்தானின் ஒருபகுதியாக இருந்த வங்கதேசம் இந்தியாவின் தலையீடு காரணமாக 1971-ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. அதனைத் தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு வேலை வாய்ப்புகளில் 30 % இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டது.

பின்னர் இந்த இடஒதுக்கீடு 2018ம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இதனை மீண்டும் அமல்படுத்த ஆளும் அவாமி லீக் கட்சி முடிவு செய்தது. ஆனால் இதற்கு மாணவர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஒரு மாதமாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த மாணவர் போராட்டத்துக்கு எதிராக வங்கதேச காவல்துறை களமிறங்கிய நிலையில், நாடு முழுவதும் மாணவர்களுக்கும் - காவல்துறைக்கும் கடும் வன்முறை நிகழ்ந்தது. இந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 450 ஐ கடந்த நிலையில், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

எனினும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் ஷேக் ஹசீனாவின் கட்சியான அவாமி லீக் கட்சியின் முக்கிய பிரமுகர்களின் வீட்டில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதோடு இந்த இடஒதுக்கீடு தீர்ப்பை கண்டித்து போராட்டக்கார்கள் வங்கதேச உச்சநீதிமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அப்போது நடந்த பேச்சுவார்த்தையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒரு மணி நேரத்தில் பதவி விலகவேண்டும் என்று போராட்டக்காரர்கள் சார்பில் கெடு விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வங்கதேச உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒபய்துல் ஹசைன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

Also Read: 1.5 ஆண்டுகளுக்கு பிறகு... ஜாமீனில் வெளியே வந்தார் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா !