உலகம்

வங்கதேசத்தில் ஆட்சிக்கு வரும் சீனாவுக்கு ஆதரவான கட்சி... இந்திய வெளியுறவுத்துறையின் மற்றொரு தோல்வி !

வங்கதேசத்தில் நடைபெற்ற போராட்டத்தைத் தொடர்ந்து வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு தப்பிச்சென்றுள்ளார். இதனால் அங்கு 15 ஆண்டுகாலம் தொடர்ச்சியாக ஆட்சி நடத்திய அவாமி லீக் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்து, அங்கு ராணுவத்தின் ஆதரவுடன் இடைக்கால ஆட்சியமைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வங்கதேச எதிர்க்கட்சியான தேசியவாத கட்சி கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று கூறப்படுகிறது. வங்கதேச போராட்டத்தின் காரணமாக ஷேக் ஹசீனா ஆட்சி முடிவுக்கு வந்து அங்கு எதிர்கட்சி ஆட்சிக்கு வருவது இந்திய வெளியுறவுத் துறைக்கு பெரும் தோல்வி என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி ஆரம்பத்தில் இருந்தே இந்தியாவுக்கு வெளிப்படையான ஆதரவை தெரிவித்து வருகிறது. அதே நேரம் வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவர் காலீதா ஜியா பெரும்பாலும் பாகிஸ்தான் மற்றும், சீனாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே கொண்டுள்ளார்.

sheikh hasina and kalitha zia

இதனால் வங்கதேசமும் பாகிஸ்தான், சீனாவுக்கு ஆதரவாக மாறுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. ஏற்கனவே இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாளம், மாலத்தீவு, பூடான், இலங்கை ஆகிய நாடுகள் சீனா பக்கமாக சரிந்து வரும் நிலையில், வங்கதேசம் உறுதியாக இந்தியாவுக்கு தனது ஆதரவை அளித்து வந்து.

தற்போது அங்கும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், மேற்கூறிய நாடுகள் வரிசையில் அதுவும் இணையும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது இந்திய அரசின் வெளியுறவுத் துறையின் தோல்வி என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read: வங்கதேச கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் வீட்டுக்கு தீ வைப்பு... போராட்டக்காரர்கள் ஆத்திரம் - காரணம் என்ன?