உலகம்

இடஒதுக்கீடு குறைப்பு : ஏற்க மறுத்த போராட்டக்கார்கள்... வங்கதேச வன்முறையில் 150-ஐ கடந்த உயிரிழப்பு !

பாகிஸ்தானின் ஒருபகுதியாக இருந்த வங்கதேசம் இந்தியாவின் தலையீடு காரணமாக 1971-ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. அதனைத் தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு வேலை வாய்ப்புகளில் 30 % இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டது.

பின்னர் இந்த இடஒதுக்கீடு 2018ம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இதனை மீண்டும் அமல்படுத்த ஆளும் அவாமி லீக் கட்சி முடிவு செய்துள்ளது. ஆனால் இதற்கு மாணவர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஒரு மாதமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

டாக்கா பல்கலைக்கழக மாணவர்களால் தொடங்கப்பட்ட இந்த போராட்டம் பின்னர் நாடு முழுவதும் விரிவடைந்தது. இந்த மாணவர் போராட்டத்துக்கு எதிராக வங்கதேச காவல்துறை களமிறங்கிய நிலையில், நாடு முழுவதும் மாணவர்களுக்கும் - காவல்துறைக்கும் கடும் வன்முறை நிகழ்ந்து வருகிறது.

மாணவர்களுக்கு ஆதரவாக ஏராளமான அமைப்புகள் களமிறங்கிய நிலையில், அரசுக்கு ஆதரவாக ஆளும் அவாமி லீக் கட்சியினர் களமிறங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் சிக்கி உயிரிழந்தவர்களின் என்னைகை தற்போது 150ஆக அதிகரித்துள்ளது உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், வன்முறைக்கு காரணமாக இருந்த இடஒதுக்கீடு விகிதத்தை 30ல் இருந்து 5 சதவீதமாக குறித்து வங்கதேச உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. 30 சதவீத இடஒதுக்கீடு குறித்த வழக்கு அடுத்த மாதமே விசாரணைக்கு வரவிருந்த நிலையில், நிகழ்வின் தீவிரத்தை கருத்தில் கொண்டு நேற்று விசாரிக்கப்பட்டது.

அதன் முடிவில் ஒதுக்கீட்டை 30 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்குமாறு அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன . எனினும் உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை மாணவர் அமைப்புகள் உள்ளிட்ட போராட்ட காரர்கள் ஏற்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வங்கதேசத்தில் தொடர்ந்து பரபரப்பு நிலை தொடர்ந்து வருகிறது.

Also Read: அமெரிக்க அதிபர் தேர்தல் : போட்டியிலிருந்து விலகினார் ஜோ பைடன்.. புதிய வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிப்பு !