உலகம்

ஆற்றில் குதித்து தற்கொலை... இந்திய வாலிபரின் உடல் பாகிஸ்தான் எல்லையில் மீட்பு - நடந்தது என்ன?

ஜம்மு - காஷ்மீரில், அக்நூர் என்ற கிராமத்தில் (பாகிஸ்தான் எல்லை கிராமம்) ஹரஷ் நகோத்ரா என்ற நபர் வசித்து வருகிறார். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவர், ஆன்லைன் கேமில் மிகவும் நாட்டமுள்ளவராக இருந்து வந்துள்ளார். ஆன்லைன் கேம் மூலம் பணம் சம்பாதிக்க எண்ணி, சூதாட்டமும் ஆடியுள்ளார். அதன்படி கொஞ்சம் கொஞ்சமாக சுமார் ரூ.80 ஆயிரம் வரை பணத்தை இழந்துள்ளார் ஹரஷ் நகோத்ரா.

இந்த சம்பவத்தால் நீண்ட நாட்களாக மனஉளைச்சலில் இருந்து வந்த இவரிடம் குடும்பத்தினர், பணம் குறித்து கேட்டுள்ளனர். இதனால் வீட்டிலும் அடிக்கடி சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் கடந்த ஜூலை 11-ம் தேதி ஹரஷ் வீட்டை விட்டு வழக்கம் போல் வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை.

இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர், உறவினர்கள், அவரது நண்பர்கள் என அனைத்து இடங்களிலும் சோதனை செய்துள்ளனர். ஆனாலும் தகவல் எதுவும் தெரியாத காரணத்தினால், இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் அவரை தேடினர்.

இந்த சூழலில், ஹரசின் இரு சக்கர வாகனம், ஜம்முவின் சனப் ஆற்றின் (chenab river) கரையோரம் நிறுத்தப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து ஒருவேளை அவர் தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டனர். அதன்படி அவரது உடலையும் ஒரு பக்கம் போலீசார் தேட தொடங்கினர்.

இந்த நிலையில் ஹரசின் உடல் பாகிஸ்தானில் மீட்கப்பட்டுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையே ஓடும் சனப் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட, ஹரசின் உடல் மெதுவாக மிதந்து பாகிஸ்தான் எல்லை கரையோரத்தில் ஒதுக்கியுள்ளது. அவரது உடலை மீட்ட பாகிஸ்தான் அதிகாரிகள் வாட்ஸ் அப் மூலம் ஹரசின் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

மகனின் சிம் கார்டை தங்கள் செல்போனில் போட்டு பயன்படுத்தியபோது, பாகிஸ்தான் அதிகாரிகள் இந்த தகவலை வாட்சப் மூலம் தெரிவித்துள்ளனர். மேலும் இறந்துபோன ஹரசின் அடையாள அட்டை உள்ளிட்டவையையும் குடும்பத்தினருக்கு வாட்சப் மூலம் அனுப்பியுள்ளனர். இதையடுத்து தங்கள் மகன் இறந்ததை குடும்பத்தினர் உறுதி படுத்தியுள்ளனர்.

மேலும் தங்கள் மகனின் உடலை இறுதிச் சடங்குகளுக்காக மீட்டெடுக்க உதவுமாறு பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்!

Also Read: நள்ளிரவில் வீடு புகுந்து ஐடி நிறுவனரை கடத்திய ஊழியர்கள்... 8 பேர் அதிரடி கைது... விசாரணையில் பகீர்!