உலகம்

துப்பாக்கியால் சுடப்பட்ட டிரம்ப்... ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனையில் அனுமதி : சுட்டவர் படுகொலை !

கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக களமிறங்கிய டொனால்ட் டிரம்ப் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தி அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றார்.

தான் அதிபராக இருந்த 4 ஆண்டு காலத்தில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய டிரம்ப் 2020-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலிலும் குடியரசுக் கட்சி வேட்பாளராக இரண்டாவது முறையாக போட்டியிட்டார். ஆனால் அவர் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ஜோ பைடனிடம் தோல்வியைத் தழுவினார்.

எனினும் தற்போது மீண்டும் குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். விரைவில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்காக தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் டிரம்ப் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில் பென்சில்வேனியாவில் டிரம்ப் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து டிரம்ப்பை நோக்கி சுட்டுள்ளார். இதில் டிரம்ப்பின் காதில் அந்த தோட்டா உரசிச்சென்றது.

இதனிடையே டிரம்ப்பின் பாதுகாவலர்கள் துப்பாக்கியால் சுட்டவரை உடனடியாக சுட்டு வீழ்த்தினர். மேலும் ரத்தம் சொட்டிய நிலையில், டிரம்ப்பை பாதுகாப்பு அதிகாரிகள் அங்கிருந்து பத்திரமாக அழைத்து சென்றனர். டிரம்ப் தரப்பிலிருந்து அவர் நலமாக உள்ளதாகவும் உள்ளூர் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : என்கவுண்டர் செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி- தப்பியோட முயன்றபோது போலீசார் அதிரடி!