உலகம்

ரிஷி சுனக்கின் சர்ச்சைக்குரிய ருவாண்டா சட்டம் ரத்து : பிரிட்டன் பிரதமராக பதவியேற்ற ஸ்டார்மர் அதிரடி !

பிரிட்டனில் கடந்த 2010 முதல் தொடர்ந்து கன்சர்வேடிவ் கட்சி ஆட்சியில் இருந்து வந்த நிலையில், தற்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அக்கட்சி தோல்வியை சந்தித்துள்ளது. இந்த தேர்தலில் அந்நாட்டின் முக்கிய கட்சிகளான ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சிக்கும், கெய்ர் ஸ்டார்மரின் தொழிலாளர் கட்சிக்கும் (Labour) இடையே கடும் போட்டி நிலவியது.

இதில் 650 தொகுதிகளில் 410 தொகுதிகளை கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சி பிடித்து ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி வெறும் 119 இடங்களிலேயே வெற்றி பெற்றுள்ளது.இதனால் பிரிட்டனின் புதிய பிரதமராக அக்கட்சி தலைவர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இவர் தேர்ந்தெடுக்கப்பட்டதும் முதல் அறிவிப்பாக முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் கொண்டு வந்த ருவாண்டாவுக்கு அகதிகளை அனுப்பும் திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் பிரிட்டனுக்கு சட்டவிரோதமாக வரும் அகதிகளை கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவுக்கு அனுப்பும் சட்டமசோதாவை கொண்டு வந்தார்.

பொருளாதாரத்தில் சீரழிந்துள பிரிட்டன் மக்களை திசை திருப்பும் விதமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தொழிலாளர் கட்சி முன்னரே விமர்சித்திருந்தது. அந்த வகையில் தற்போது ஆட்சிக்கு வந்ததும் அந்த திட்டத்தை ரத்து செய்வதாக தொழிலாளர் கட்சி தலைவரும், பிரதமருமான கெய்ர் ஸ்டார்மர் கூறியுள்ளார்.

இது குறித்துப் பேசிய அவர், "ருவாண்டா திட்டம் தொடங்குவதற்கு முன்பே புதைக்கப்பட்டுவிட்டது. இது புகலிடம் கோர விரும்புவோரைத் தடுக்க தவறிவிட்டது. எனவே, மக்களை ஏமாற்ற நான் இந்தத் திட்டத்தை மேலும் தொடர தயாராக இல்லை" என்று கூறியுள்ளார்.

Also Read: பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல் : இடதுசாரி கூட்டணி வெற்றி... மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்ட வலதுசாரிகள் !