உலகம்

24 ஆண்டுகளில் முதல்முறை : வடகொரியாவுக்கு பயணம் செய்த ரஷ்ய அதிபர் புதின்... அமெரிக்கா கண்டனம் !

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தற்போது இரண்டரை வருடத்தை தாண்டியுள்ள நிலையில் தற்போதும் உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.

அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் உக்ரைனின் மேற்கு பகுதியில் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.

இந்த போர் இத்தனை மாதம் கடந்தும் இவ்வளவும் நாட்கள் தொடர உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் அளித்துவரும் பொருளாதார மற்றும் ஆயுத உதவி முக்கிய காரணமாக இருந்து வருகிறது. தற்போது வரை அமெரிக்கா உக்ரைனுக்கு பல பில்லியன் டாலர் அளவுக்கு ஆயுத, பொருளாதார உதவிகளை செய்துள்ளது. எனினும் உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்ய ராணுவம் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது.

இந்த போரில் ரஷ்யாவுக்கு சீனா மற்றும் வடகொரியா ஆகிய நாடுகள் மறைமுக ஆதரவை வழங்கி வருகின்றன. அதிலும் வடகொரியா ரஷ்யாவுக்கு தேவையான ஆயுதங்களை ஏற்றுமதி செய்து வருவதாக மேற்கத்திய நாடுகள் தொடர் குற்றசாட்டுகளை தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், ரஷ்ய அதிபர் புதின் 24 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக வடகொரியாவுக்கு சென்றுள்ளது உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. வடகொரிய தலைநகர் பியோங்யாங்கில் புதினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது .

இந்த சந்திப்பின்போது அமெரிக்கா ஆதிக்கம்,புதிய கூட்டணியை உருவாவது தொடர்பாகவும் பேசப்பட்டதாக என ரஷ்யாவின் அரசு ஊடகம் தெரிவித்திருக்கிறது. அதே நேரம் வடகொரியாவில் இருந்து அதிகளவில் ஆயுதங்களை வாங்கவே புதின் அந்நாட்டுக்கு பயணம் செய்துள்ளதாக அமெரிக்கா விமர்சித்துள்ளது.

Also Read: காசாவில் ராணுவ தாக்குதல் முடிவடைய இன்னும் சில வாரங்கள் ஆகும் - இஸ்ரேல் ராணுவம் அறிக்கை !