உலகம்

EVM விவகாரம் : “எதையும் ஹேக் செய்ய முடியும்...” - முன்னாள் ஒன்றிய அமைச்சருக்கு எலான் மஸ்க் பதிலடி !

உலகம் முழுவதும் ஜனநாயக தேர்தல் நடைமுறைக்கு பெரும்பாலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பாஜக மோசடி செய்யும் என்று எதிர்க்கட்சிகள் எச்சரித்து வந்தது. தொடர்ந்து தற்போது பாஜக கூட்டணி வேட்பாளர் ஒருவர் EVM-ஐ ஹேக் செய்து வெற்றி பெற்றுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி கட்சியான ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சி சார்பில் மும்பை வட மேற்கு தொகுதி வேட்பாளரான ரவீந்திர வாய்க்கர், வாக்குப்பதிவு இயந்திரத்தை போன் மூலம் OTP அனுப்பி ஹேக் செய்து வெற்றி பெற்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தற்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் EVM-ஐ ஹேக் செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளார்.

ரவீந்திர வாய்க்கர்

இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பதிவில், "மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழிக்க வேண்டும். மனிதர்கள் அல்லது செயற்கை நுண்ணறிவால் அவை hack செய்யப்படும் சாத்தியங்கள் அதிகம்!" என்று குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க முதன்மை தேர்தல் வாக்குப்பதிவு முறைகேடு என சுயேட்சை அதிபர் வேட்பாளர் ராபர்ட் கென்னடி குற்றம்சாடிய பதிவை குறிப்பிட்டு மஸ்க் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உலகம் முழுவதும் பேசுபொருளாகியுள்ள நிலையில், இந்தியாவின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், இவரது பதிவுக்கு மறுப்பு தெரிவித்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மிகவும் பாதுகாப்பானது என்றும், அவற்றில் எந்த தில்லுமுல்லுவும் நடக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா உருவாக்கியது போல் பாதுகாப்பாக உருவாக்க வேண்டும் என்றும், எலான் மஸ்க்-க்கு நாங்கள் டுட்டோரியல் வகுப்பு எடுப்பதில் மகிழ்ச்சி என்றும் நக்கலாக பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், "மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் உள்பட எந்தவொரு இயந்திரத்தையும் எளிதாக ஹேக் செய்ய முடியும்" என்று எலான் மஸ்க் பதிலடி கொடுத்துள்ளார். இது தற்போது சமூக வலைதள பக்கத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. எலான் மஸ்க்கின் கருத்துகளுக்கு பலரும் வரவேற்பை அளித்து வருகின்றனர்.

Also Read: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு : “அதிமுகவின் இயலாமையை காட்டுகிறது” - அமைச்சர் மனோ தங்கராஜ் !