உலகம்

உலக நாடுகளின் ஒற்றைக் குரல் “ALL EYES ON RAFAH” - இஸ்ரேலால் சூழப்பட்டுள்ள ரஃபாவில் நடப்பது என்ன ?

பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் போர் தொடுத்து ஓராண்டை நெருங்கவுள்ளது. இஸ்ரேலின் இந்த கொடூரப் போரால் இதுவரை 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். பல ஆயிரம் பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உலக முழுவதும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக குரல் எழுந்து வருகிறது. ஆனால் இந்த போரில் இரு தரப்பு கருத்துகளில் ஒன்று பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தரப்புக்கு எதிராக எழுந்து வருகிறது. உதாரணமாக ஹமாஸ் நடத்தும் தாக்குதலை Terrorist Attack என்றும், தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் தரப்பு தாக்குதலை Israel raids on Palestinian territory என்று பெயர் சூட்டுவதும் நடந்து வருகிறது.

உலகின் முன்னணி அதாவது சர்வதேச ஊடகங்கள் இந்த வார்த்தையை பயன்படுத்தி வருகிறது. இந்த வார்த்தைகள் மூலம் மக்களிடையே ஹமாஸ்-க்கு எதிரான மனநிலையை உருவாக்கும் மூளைச் சலவை வேலையை செய்கிறது.

ஆனால் இதேவேளையில் நார்வே, அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க முடிவு செய்துள்ளன. அதேபோல் பெல்ஜியம் மற்றும் ஸ்பெயின் ஆகிய இரு நாடுகளும் இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை அனுமதிக்க மாட்டோம் என்றும் அறிவித்திருக்கிறது. இதன்மூலம் மேற்கத்திய நாடுகளின் ஒற்றுமை நிலைப்பாட்டிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

உலக அளவில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பல நாடுகளும், இஸ்ரேலுக்கு ஆதரவாக பல நாடுகளும் இருந்தாலும் இந்தியாவில் ஒன்றிய பாஜக அரசு இரு வகையான நிலைபாட்டை எடுத்திருப்பது மறைமுகமாக போரை ஆதரிப்பதாக இருக்கிறது. ஆரம்பக் காலக்கட்டத்தில் இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை பாலஸ்தீனத்திற்கு ஆதரவு நிலைபாட்டையே எடுத்து வந்தது.

ஆனால் ஒன்றிய பாஜக ஆட்சி அமைந்த பிறகு, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மாற்றி இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை குறிப்பிடலாம். சென்ற வாரம் சென்னையிலிருந்து இஸ்ரேலுக்கு சென்ற ஒரு சரக்குக் கப்பலில் 27 டன்கள் வெடிமருந்துகள் டென்மார்க் கொடியுடன் புறப்பட்டது. முதலில் இந்த கப்பலுக்கு ஸ்பெயின் அரசாங்கம் அனுமதி மறுத்தது. அதேபோல் கார்டஜெனா துறைமுகத்தில் இந்தியக் கப்பலை நிறுத்த அனுமதிக்கவில்லை. இவ்வாறு இஸ்ரேலுக்கு ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து உதவி வருகிறது.

சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கு 20 ஹெர்ம்ஸ் ரக ராணுவ ஆளில்லா விமானங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன. இந்த ஆளில்லா விமானங்கள் அதானி குழுமம் மற்றும் இஸ்ரேலின் எல்பிட் சிஸ்டம்ஸ் ஆகியவற்றின் கூட்டுத் தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டவைகளாகும் என்பதை People's Democracy இதழ் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் அந்த இதழில் “அமெரிக்க ஜனாதிபதி பைடனின் எடுபிடியாக மாறியிருக்கும் மோடி அரசாங்கம், காசாவில் மக்கள் மடிவது குறித்து முதலைக் கண்ணீர் வடித்திடும் அதே சமயத்தில், இஸ்ரேலுக்கு ராணுவரீதியாக உதவிகள் புரிவதற்கு அமெரிக்காவுடன் உடந்தையாக இருந்து செயல்பட்டு வருகிறது.” என்றும் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த போர் சூழலில் காசாவின் ரஃபா நகரில் வசிக்கும் பாலஸ்தீன மக்களைக் காலி செய்யுமாறு இஸ்ரேல் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அதன்படி நோட்டீஸ் அனுப்பிய சில மணி நேரங்களில் 15 லட்சம் மக்கள் ரஃபா நகரில் இருந்து இதர இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால் அங்கு கடும் உணவுப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ரஃபா பகுதியின் உள்ள முகாம்களின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த முதல் கட்ட தாக்குதலில் குழந்தைகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது, மேலும் இஸ்ரேலின்ன் ராணுவ டாங்கிகள் ரஃபா எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் தீவிர போர் சூழல் நிலவுகிறது. ரஃபாவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பலரும் ”ALL EYES ON RAFAH” என்ற வாக்கியத்தை பகிர்ந்து வருகின்றனர்,

மனிதப் பேரழிவைத் தவிர்ப்பதற்காக ரஃபாவில் இஸ்ரேலின் தாக்குதலை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா. சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளது. இதனை சர்வதேச நீதிமன்றம் தற்போது விசாரித்து வருகிறது. ஆனால் இந்த நடவடிக்கை போர் நிறுத்த உடன்படிக்கையை கண்டுக்கொள்ளாத இஸ்ரேல் மீண்டும் மீண்டும் இனப்படுகொலையை அஞ்சமின்றி செய்து வருகிறது. இந்த நூற்றாண்டின் நடந்த மிகப்பெரிய தாக்குதலில் இதுவும் ஒன்றாகும் என வரலாற்று ஆசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Also Read: ஹமாஸின் தாக்குதலுக்கு பதிலடி : முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 45 பாலஸ்தீனியர்கள் படுகொலை !