உலகம்

இம்ரான் கானின் மனைவியின் உணவில் ஆசிட் கலக்கப்பட்டதாக குற்றச்சாட்டு - பாகிஸ்தானில் பரபரப்பு !

பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கான் மீது, கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கட்சிகள் கொண்டு வந்தன. பல்வேறு எதிர்புகளுக்கு மத்தியில் அந்த தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இம்ரான் கான் பதவி விலகி எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தன. அந்த கூட்டணி சார்பில் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தானில் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார் . அவரின் அரசுக்கு பெரிய கட்சிகளில் ஒன்றான பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆதரவு அளித்தது

இம்ரான் கானுக்கு எதிராகவும் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு பல குற்றச்சாட்டுகளை சுமத்தியது. இது குறித்த வழக்கில் இம்ரான் கான் குற்றவாளி என்று கூறிய நீதிமன்றம் அவரையும், அவரது மனைவி புஸ்ரா பீவியையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. சிறையில் இம்ரான் கானுக்கு விஷம் கொடுக்க முயற்சி நடப்பதாக இம்ரான் கானின் மனைவி குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த நிலையில், தற்போது தனது மனைவி புஸ்ரா பீவிக்கு சிறையில் கொடுக்கப்பட்ட உணவில் டாய்லெட்டை சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் திரவம் கலக்கப்பட்டதாக இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளார். இம்ரான் கான் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இம்ரான் கானின் மனைவிக்கு கொடுக்கப்பட்ட உணவில் டாய்லெட்டை சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் திரவம் கலக்கப்பட்டதாகவும், இதனால் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அதோடு இம்ரான் கானின் மனைவிக்கு மருத்துவ பரிசோதனை நடத்த சிறை நிர்வாகம் மறுப்பதாகவும், அவருக்கு முறையான மருத்துவ பரிசோதனை நடத்த அனுமதிக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார், அதனைத் தொடர்ந்து இம்ரான் கான் மனைவி புஸ்ரா பீவிக்கு முறையான மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இம்ரான் கானின் இந்த குற்றச்சாட்டு பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: "மருத்துவரிடம் பேச சிறையில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அனுமதி மறுப்பு" - ஆம் ஆத்மி குற்றச்சாட்டு !