உலகம்

உணவுக்காக காத்திருந்த பாலஸ்தீனர்கள் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் : 100-க்கும் மேற்பட்டோர் படுகொலை !

இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.

இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர்.

அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.இந்த தாக்குதல் இதுவரை 30 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள காசா சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இந்த நிலையில், உணவுக்காக காத்திருந்த பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். காசாவை இஸ்ரேல் முற்றிலும் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்குள்ள மக்களுக்கு போதிய அளவு உணவு, தண்ணீர் மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காத சூழல் நிலவுகிறது.

இதனால் உணவு, குடிநீர் கிடைக்கும் இடத்தை பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அங்கு கிடைப்பதை பெற்று வருகின்றனர். அந்த வகையில், அங்கு பொதுமக்கள் உணவுக்காக ஒரே இடத்தில் குழுமியிருந்த நிலையில், அங்கு இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். அதே போல 500-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். பாலஸ்தீன வெளியுறவு அமைச்சகம் இந்த தாக்குதலை, இனப்படுகொலை என்று விமர்சித்துள்ளது. மேலும், இந்த தாக்குதலுக்கு பல்வேறு நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

Also Read: தருமபுர மடத்தையும், எங்களையும் ரவுடிகளிடமிருந்து மீட்டெடுத்த நம் முதல்வருக்கு நன்றி - தருமபுரம் ஆதினம் !