உலகம்

முடிவுக்கு வந்த குழப்பம் : பாகிஸ்தான் பிரதமராகிறார் நவாஸ் ஷெரீப்பின் தம்பி - யார் இந்த ஷெபாஸ் ஷெரீப் ?

பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கான் மீது, கடந்த 2922-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கட்சிகள் கொண்டு வந்தன. பல்வேறு எதிர்புகளுக்கு மத்தியில் அந்த தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இம்ரான் கான் பதவி விலகி எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தன. அந்த கூட்டணி சார்பில் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தானில் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார் . அவரின் அரசுக்கு பெரிய கட்சிகளில் ஒன்றான பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆதரவு அளித்தது

இம்ரான் கானுக்கு எதிராகவும் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு பல குற்றச்சாட்டுகளை சுமத்தியது. இது குறித்த வழக்கில் இம்ரான் கான் குற்றவாளி என்று கூறிய நீதிமன்றம் அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டது.இந்த தண்டனை காரணமாக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எவ்வித தேர்தலிலும் போட்டியிட இயலாத சூழல் ஏற்பட்டது. மேலும், அவரின் கட்சியும் தேர்தலில் நிற்கமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவரின் தெஹ்ரீக்-இன்சாப் (PTI) கட்சி வேட்பாளர்கள் பல இடங்களில் சுயேச்சையாக போட்டியிட்டனர்.

shahbaz sharif

பாகிஸ்தானில் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், அங்கு கடந்த 8-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது.அதில் பதிவான வாக்குகள் அடுத்த நாளே எண்ணப்பட்ட நிலையில், தற்போதுவரை முழு முடிவுகளும் வெளிவரவில்லை. அங்குள்ள 336 நாடாளுமன்ற தொகுதிகளில் 266 தொகுதிகளுக்கான உறுப்பினர்கள் நேரிடையாக மக்களால் தேர்வு செய்யப்படுவர்.

இதில் இம்ரான் கான் ஆதரவு சுயேட்சை வேட்பாளர்களுக்கு 102 தொகுதிகள் கிடைத்த நிலையில், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி 73 தொகுதிகளும், பிலாவல் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது. இதனால் அங்கு யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை நிலவுகிறது.

Maryam

இதன் காரணமாக பாகிஸ்தான் முஸ்லீம் லீக்கட்சியும், பாகிஸ்தான் மக்கள் கட்சியும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதில் உடன்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் , பாகிஸ்தான் முஸ்லிம் லீக் தனித்து ஆட்சியமைக்கிறது. இந்த அரசுக்கு பாகிஸ்தான் மக்கள் கட்சி வெளியில் இருந்து ஆதரவளிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தம்பி ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக பொறுப்பேற்கவுள்ளதாக பாகிஸ்தான் மீடியாக்கள் கூறியுள்ளது. மேலும் தங்கள் கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் சேர்க்கப்படும் என்றும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி கூறியுள்ளது. அதே போல பஞ்சாப் மாகாணத்தின் முதல்வராக நவாஸ் ஷெரீப் மகள் மர்யம் ஷெரீப் பதவியேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இம்ரான் கானின் தெஹ்ரீக்-இன்சாப் (PTI) கட்சி எதிர்க்கட்சி வரிசையில் அமரவுள்ளதாக அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: நீதிபதியாகும் பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண்... திராவிட மாடல் ஆட்சியின் மகுடம் - ஆர்.எஸ்.பாரதி அறிக்கை !