உலகம்

ஹமாஸை தொடர்ந்து ஹஸ்புல்லா : அவர்களுக்கு எதிரான எங்கள் நடவடிக்கை தொடரும்- இஸ்ரேலின் அறிவிப்பால் பரபரப்பு !

இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.

இந்த சூழலில் கடந்த மாதம் அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.

ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் இதுவரை 27 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.

இதனிடையே இந்த போர் தற்போது பாலஸ்தீனத்தை தாண்டி லெபனானுக்கும் பரவியுள்ளது. ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக இஸ்ரேலின் எல்லை நாடான லெபனானை சேர்ந்த ஹஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. மேலும், லெபனானில் இருந்த ஹமாஸ் துணைத் தலைவா் சலே அல்-அரூரியயை இஸ்ரேல் ராணுவம் ஏவுகணை தாக்குதல் மூலம் கொலை செய்தது. இந்த தாக்குதலில் ஹஸ்புல்லா வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து, ஹஸ்புல்லா மற்றும் இஸ்ரேல் இடையே அவ்வப்போது தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த நிலையில், ஹஸ்புல்லா அமைப்பினருக்கு எதிரான எங்கள் நடவடிக்கை தொடரும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது. இது குறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடா்பாளா் டேனியல் ஹகாரி கூறுகையில், " இஸ்ரேல் மீது ஹஸ்புல்லா அமைப்பினர் நடத்தும் தாக்குதலுக்கு தொடர்ந்து பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு எதிராக போர் தொடுப்பது எங்களுடைய முதல் தேர்வாக இருக்காது. ஆனாலும், எதற்கும் தயாராக உள்ளோம். லெபனான், சிரியா என எவ்வளவு தொலைவில் அவா்கள் இருந்தாலும், அவா்களுக்கு எதிரான நடவடிக்கை தொடரும்" என்று கூறியுள்ளார்.

Also Read: ”ஜனநாயகத்தை படுகொலை செய்ய அனுமதிக்க மாட்டோம்” : சண்டிகர் மேயர் தேர்தலுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!