உலகம்

"போரை சர்வதேச நீதிமன்றத்தால் கூட நிறுத்தமுடியாது" - இஸ்ரேல் பிரதமர் திட்டவட்ட அறிவிப்பு !

இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.

இந்த சூழலில் கடந்த மாதம் அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.

ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் இதுவரை 23 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.

இதனிடையே காஸா மக்களைக் இஸ்ரேல் அரசு கொன்று குவித்ததாக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், போரை சர்வதேச நீதிமன்றத்தால் கூட நிறுத்தமுடியாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், " இந்தபோரை யாராலும் நிறுத்த முடியாது. சர்வதேச நீதிமன்றத்தால் கூட நிறுத்தமுடியாது. இஸ்ரேல் அதன் இலக்குகளை அடையும் வரை இந்த போரை நிறுத்தாது. இதுவே இஸ்ரேலின் எதிரிகளுக்கு இறுதிப்போராக அமையும்" என்று கூறியுள்ளார்.

சர்வதேச நீதிமன்றம் கடந்த 2020-ல் உக்ரைன் மீதான தாக்குதல்களை ரஷியா நிறுத்திக்கொள்ள வேண்டும் என கூறியிருந்தும் அதனால் எந்த நடவடிக்கையும் எடுக்கமுடியவில்லை என்பதால் அதனால் இஸ்ரேல் -ஹமாஸ் போரையும் நிறுத்த முடியாது என்றே கருதப்படுகிறது.

Also Read: தை பொங்கல் பண்டிகை : “வேத காலத்துக்கு முன்பு இருந்தே கொண்டாடப்படும் விழா...” - முரசொலி தலையங்கம் !