உலகம்

காரில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட நிறைமாத கர்ப்பிணி பெண்... அமெரிக்காவில் நடந்தது என்ன?

அமெரிக்கா நாட்டின் டெக்ஸோஸ் மாகாணத்தை சேர்ந்தவர் சவானா நிக்கோல் சோட்டா (Savanah Nicole Soto). 18 வயது இளம்பெண்ணான இவர், மேத்யூ குரேரா என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இதனால் இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த நிலையில், சவானா நிக்கோல் சோட்டா கர்ப்பமடைந்தார். தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் இவர், தினமும் தனது குடும்பத்தினருடன் போனில் பேசி வந்துள்ளார்.

இந்த சூழலில் கடந்த 22-ம் தேதி இவர்கள் இருவரும் கடைக்கு செல்வதாக கூறி வெளியே சென்றுள்ளனர். ஆனால் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் தொடர்பு கொண்டாலும், இவர்கள் இருவரும் அழைப்பை ஏற்கவில்லை. இதனால் பயந்துபோன பெண்ணின் குடும்பத்தினர் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த பெண்ணின் வீட்டுக்கும் சென்று விசாரித்தனர். ஆனால் அங்கே யாரும் இல்லை என்பதால் தொடர்ந்து தேடி வந்தனர்.

இந்த நிலையில், கடந்த 4 நாட்கள் கழித்து செவ்வாய்கிழமை (26.12.2023) சாலை ஓரத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் கார் ஒன்று நிற்பதாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்த போலீசார் காரை ஆய்வு செய்தபோது, அதில் நிறைமாத கர்ப்பிணி பெண்ணும், இளைஞர் ஒருவரும் உயிரிழந்த நிலையில் இருந்துள்ளனர். மேலும் அவர்கள் இருவரின் உடலும் அழுகிய நிலையில் இருந்துள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், உடனடியாக சடலங்களை மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அது காணாமல் போன இளம்பெண் சோட்டோ மற்றும் அவரது காதலன் மேத்யூ என்று தெரியவந்தது. அவரது உடலில் குண்டடி பட்ட தடையம் கண்டறியப்பட்ட நிலையில், இது கொலையா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நிறைமாத பெண்ணும், அவரின் காதலனும் காரில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: கடும் வெயிலில் 104 கி.மீ ஓட்டம்... துபாயில் பெங்களூரு இளைஞர் செய்த செயலால் ஷாக் - காரணம் என்ன ?