உலகம்

இஸ்ரேல் ராணுவத்துக்கு தொழில்நுட்ப உதவி வழங்கும் கூகுள் : நிறுவனத்தை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டம் !

இஸ்ரேல் -பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வந்த குடியேற்றம் மற்றும் அல்- அக்ஸா மசூதி பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு போன்றவற்றால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு வந்தது.

இந்த சூழலில் கடந்த மாதம் அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியது. மேலும், இஸ்ரேலின் பல பகுதியில் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேல் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டனர். அதோடு ஏராளமானோரை ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளாக பிடித்து வைத்தது.

ஹமாஸ் அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் விமானங்கள் மூலமும், ஏவுகணைகளை அனுப்பியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் இதுவரை 17 ஆயிரத்துக்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் இஸ்ரேல் ராணுவத்துக்கு தொழில்நுட்பத்தை கொடுத்து உதவும் கூகுள் நிறுவனத்தை எதிர்த்து கூகுள் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கூகுள் நிறுவனம் இஸ்ரேல் அரசு மற்றும் ராணுவத்தோடு இணைந்து Project Nimbus என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டத்தின் மூலம், கூகுளின் தகவல்கள் மற்றும் கணினி வளங்களை க்ளவுட் வசதிகள் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் இஸ்ரேல் அரசு மற்றும் ராணுவம் பெற்றுக்கொள்ளும் வகையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இஸ்ரேல் காஸாவில் நடத்தும் தாக்குதலுக்கு இந்த மென்பொருள் உதவுவதாக கூறப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக, கூகுளின் தொழில்நுட்ப வசதிகளைப் போரில் பயன்படுத்தி பாலஸ்தீனர்களை கொல்வதாகப் கூகுள் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்த திட்டத்தை உடனடியாக ரத்து செய்யவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: தென் மாவட்டங்களில் கனமழை : அவசர கால உதவி எண் அறிவித்த தமிழ்நாடு அரசு -மீட்பு பணிகள் தீவிரம்!