உலகம்

பொறியில் சிக்கிய சீன அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்.. 55 பேர் உயிரிழந்த சோகம்.. நடந்தது என்ன ?

சமீபத்திய ஆண்டுகளில் சீனா தனது ராணுவத்தை பெரிய அளவில் விஸ்தரித்து வருகிறது. மேலும், தென்சீன கடலில் கட்டுப்பாட்டை உறுதிசெய்ய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களையும், ஏராளமான போர்கப்பல்களையும் அந்த நாடு உருவாக்கி வருகிறது.

அந்த வகையில் அந்த நாடுஉருவருகிய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று நடுக்கடலில் பொறியில் சிக்கியதால் அதில் இருந்த 55 பேர் உயிரிழந்தனர் என இங்கிலாந்தின் தி டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

சீனாவுக்கும் ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகளுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக மோதல் போக்கு இருந்து வருகிறது . இதற்கு முக்கிய காரணமாக தென்சீன கடல் இருந்து வருகிறது. அந்த பகுதியின் பல்வேறு பகுதிகளை சீனா, ஜப்பான், தென்கொரியா நாடுகள் சொந்தம் கொண்டாடி வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

இதனால் தனது கடல் பகுதியில் பிற நாட்டு போர் கப்பல்கள் வராத வண்ணம் சீனா ஏராளமான பொறிகளை உருவாகியுள்ளது. அந்த வகையில் மஞ்சள் கடல் பகுதியில் சீனா உருவாக்கி வைத்திருந்த பொறியில் சீன கடற்படைக்கு சொந்தமான அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் சிக்கிக்கொண்டுள்ளது.

சுமார் 6 மணி நேரம் இந்த கப்பல் அந்த பொறியில் சிக்கிக்கொண்டதால் அதிலிருந்த ஆக்சிஜன் முழுமையாக தீர்ந்து அதில் பயணித்த 21 அதிகாரிகள் உள்ளிட்ட 55 பேர் உயிரிழந்துள்ளனர் என டைம்ஸ் இதழ் கூறியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதனை சீனா முழுமையாக மறுத்துள்ளது.

Also Read: உண்மையை சொன்ன மருத்துவமனை டீனை கழிவறை சுத்தம் செய்ய வைத்த MP.. மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம்!