உலகம்

ஆசையாக மீன் சாப்பிட்ட பெண்.. கோமா நிலையில் கை, கால்கள் இழந்து, உயிருக்கு போராடும் அவலம் !- காரணம் என்ன?

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சான் ஜோஸ் (San Jose) என்ற நகரில் வசித்து வருபவர் லாரா பராசாஸ் (40). இவருக்கு கடல் சார்ந்த உணவுகளை சாப்பிடுவதில் அதிகம் நாட்டம் இருந்துள்ளது. இதனால் அடிக்கடி அதனை தனது உணவாக எடுத்துக்கொள்வார். இந்த சூழலில் கடந்த மாதம் இவர், அருகில் இருக்கும் மார்க்கெட் ஒன்றில் திலப்பியா (Tilapia) என்ற வகை மீன்களை வாங்கியுள்ளார்.

அதனை இவர் சமைக்காமல் சாப்பிட்டுள்ளார். அவர் சாப்பிட்ட சில மணி நேரங்களிலே அவரது உடலில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் அவரது கை விரல்கள், கீழ் உதடு உள்ளிட்டவை கருப்பாக மாறியுள்ளது. தொடர்ந்து இவருக்கு உடல்நலக் குறைவு ஏற்படவே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் 2 கிட்னிகளும் செயலிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் லாரா, கோமா நிலைக்கு சென்றுள்ளார். அதோடு இவரது உடலில் ஏற்பட்ட பாக்டீரியா தொற்றால் இவரது கை, கால்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கு பிறகே அவரால் உயிர் வாழ முடிகிறது.

எனினும் அவர் சில நாட்களாகவே தொடர்ந்து கோமா நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார். இதுகுறித்து அவர் தோழி கூறுகையில், ":ஏறத்தாழ லாரா உயிரிழந்து விட்டார். தற்போது அவர் வெண்டிலேட்டர் மூலமே மூச்சு விடுகிறார். கை, கால்களை துண்டித்ததால் மட்டுமே அவர் உயிர் வாழ்கிறார்." என்று வேதனையோடு தெரிவித்தார்.

தொடர்ந்து இந்த நிகழ்வு குறித்து மருத்துவர்கள் கூறுகையில், "லாரா, தான் கடையில் வாங்கிய மீனை சரியாக சமைக்காமல் சாப்பிட்டுள்ளார். பொதுவாகவே கடல் சார்ந்த உணவுகளில் பாக்டீரியாக்கள் அதிகமாக இருக்கும். இதனால் பலருக்கும் நோய் தொற்று ஏற்படும். லாரா அதனை சாப்பிட்ட சில மணி துளிகளிலே, அதிலிருக்கும் Vibrio Vulnificus என்ற வகை பாக்டீரியாக்கள் அவரது உடலை நேரடியாக தாக்கியுள்ளது.

இதனாலே அவரது 2 கிட்னிகளும் செயலிழந்து விட்டன. வரது உயிரை காக்க வேறு வழியில்லாததால் கை, கால்கள் அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இனி மக்கள் இதுபோல் ஏதேனும் சாப்பிடும் முன் அதனை சுத்தமாக கழுவி, நன்றாக சமைத்து சாப்பிட வேண்டும்." என்றனர்.

Also Read: சீக்கியர் கொலை விவகாரம்.. கனடா தூதர் 5 நாட்களுக்குள் வெளியேற இந்திய அரசு உத்தரவு.. முழு விவரம் என்ன ?