உலகம்

ஹிஜாப் அணிவதற்கான புதிய மசோதா.. 10 ஆண்டு வரை சிறை.. மீண்டும் போராட்டத்தை நோக்கி நகரும் ஈரான் !

கடந்த 1979-ம் ஆண்டு இஸ்லாமிய புரட்சி என்ற பெயரில் ஈரானில் நிலவிவந்த முகமது ரிசா ஷா ஆட்சியை அகற்றி ருஹல்லா அலி கொமேனி தலைமையிலான அரசு பதவிக்கு வந்தது. அதன் பின்னர் மதவாத அடக்குமுறைகள் அதிகரித்தன.பெண்கள் முக்காடு அணியவேண்டும் போன்ற பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

சமீபத்தில் பெண்கள் ஆடை அணியும் விதத்தை கண்காணிக்க 'காஸ்த் எர்ஷாத்' என்ற சிறப்புப் பிரிவு அரசால் ஆரம்பிக்கப்பட்டு பெண்கள் தீவிரமான கண்காணிக்கப்பட்டனர். இந்த சிறப்பு பிரிவு படையினரால் கடந்த செப்டம்பர் 13-ம் தேதி மாஷா அமினி (22) என்ற இளம்பெண் முறையாக ஹிஜாப் அணியவில்லை என குற்றம்சாட்டி கைது செய்யப்பட்டார்.

சிறையில் அவர் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், ஆட்சிக்கு எதிராக பெண்கள் கொதித்தெழுந்தனர். முக்கிய நகரங்களில் பெண்கள் வெளிப்படையாகவே ஆடை கட்டுப்பாட்டுக்கு எதிராக தங்கள் தலைமுடிகளை அறுத்து எறிந்தனர். இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் அரச படைகளால் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சுமார் இரண்டு மாதங்களுக்கு மேல் நடந்த போராட்டத்தின் காரணமாக பொது வெளியில் ஹிஜாப் அணிவதை உறுதிப்படுத்தும் அறநெறி காவல்துறை என்ற பிரிவை கலைப்பதாக அறிவித்தது. இதனால் அந்த நாட்டில் நடைபெற்ற போராட்டம் படிப்படியாக குறைந்தது. இந்த சூழலில் ஹிஜாப் அணிவதற்கான புதிய மசோதாவை அந்நாட்டு அரசு உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிறைவேற்றப்பட்டால், ஹிஜாப் அணியாதவர்கள் மீது முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையான நடவடிக்கைகள் பாயும் எனவும், 10 ஆண்டுகள் வரை சிறையும், அபராதத் தொகையாக இந்திய மதிப்பில் 7 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்யப்படும் எனவும் கூறப்படும் நிலையில், அண்ட் புதிய மசோதாவுக்கு மீண்டும் எதிர்ப்பு எழுந்து போராட்டம் நடத்தப்படலாம் என அச்சம் எழுந்துள்ளது.

Also Read: சிறுநீரை குடிக்க வைத்து கொடுமை.. சிறுவர்கள் ஆசனவாயில் மிளகாயை திணித்து கொடூரம்.. உ.பி-யில் அதிர்ச்சி !