உலகம்

PUBG காதலனை நம்பி 4 பிள்ளைகளுடன் இந்தியா வந்த பாகிஸ்தானிய பெண்.. சிக்கியது எப்படி ? - நடந்தது என்ன?

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் சீமா. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி குலாம் ஹைதர் என்ற கணவர் இருக்கும் நிலையில், இந்த தம்பதிக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இந்த சூழலில் கோவிட் பெருந்தொற்றின்போது போடப்பட்ட லாக்டவுனில் சீமா, ஆன்லைன் மூலம் பப்ஜி விளையாடியுள்ளார். அப்போது இவருக்கு இந்தியாவை சேர்ந்த சச்சின் (25) என்பவர் அறிமுகமாகியுள்ளார்.

இவர்களது பழக்கம் நட்பாக மாறி, நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. இதனால் இருவரும் திருமணம் செய்துகொள்ள எண்ணியுள்ளனர். ஆனால் குழந்தைகளையும் விட மனதில்லாமல் அவர்களையும் தன்னுடன் கூட்டி வர எண்ணியுள்ளார் சீமா. அதன்படி தனது பெயரில் இருந்த நிலத்தை விற்று பணத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

பின்னர் கடந்த மே மாதம் தனது பிள்ளைகளுடன் வீட்டை விட்டு வெளியேறிய சீமா, முதலில் கராச்சியிலிருந்து துபாய்க்கு சென்றுள்ளார். அங்கிருந்து தனது 4 பிள்ளைகளுடன் சுமார் 11 மணி நேரம் தூங்காமல் பயணம் செய்தார். அங்கிருந்து நேபாளத்திற்கு வந்து சாலை மார்க்கமாக போகரா வந்து சச்சினை சந்தித்தார். பின்னர் இருவரும் ஒரு கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.

தொடர்ந்து அங்கிருந்து தனது பிள்ளைகளுடன் இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார் சீமா. அனைவரும் டெல்லியில் இருக்கும் நொய்டாவில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். தனது அடையாளத்தை மாற்றி தனது கணவர் சச்சினுடன் வசித்து வந்த சீமாவை பற்றி போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் விசாரித்ததில் அவர் பாகிஸ்தானை சேர்ந்தவர் தான் என்பது உறுதியானது.

இதையடுத்து அத்துமீறி நுழைந்ததாக சீமா, அவரது குழந்தைகள் மற்றும் அடைக்கலம் கொடுத்ததாக சச்சின் ஆகியோரை போலீசார் கைது செய்தது. தொடர்ந்து ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் சச்சின் சார்பில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், சீமா - சச்சினுக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் இருவரும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதுகுறித்து சீமா கூறுகையில், "இப்போது என் கணவர் ஒரு இந்து. எனவே நானும் ஒரு இந்துவாக இருக்கிறேன். இந்தியா தான் இனி என் நாடு. நான் மீண்டும் பாகிஸ்தான் சென்றால், அங்கே எனது கணவரால் என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது." என்றார்.

முன்னதாக சீமாவின் கணவர் குலாம் ஹைதர், தனது மனைவி மற்றும் பிள்ளைகளை மீண்டும் பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து சீமா கைது செய்யப்பட்டார். சீமாவிடம் இருக்கும் குழந்தைகளுக்கு இன்னும் 10 வயது கூட ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ரூ.60 லட்சம் மோசடி.. ஆபாச பேச்சு.. கொலை மிரட்டல்.. புதுக்கோட்டை பாஜக நிர்வாகி மீது பாய்ந்த வழக்கு !